Thursday, May 9, 2013

கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்

திருச்சபைச் சரித்திரத்தின் குறிப்புக்களை ஆராயும்போது, தேவனால் அதிகம் பயன்படுத்தப்பட்டவர்கள் ஜெபவீரர்களே என்று கண்டுகொள்ளலாம். அவர்கள் அந்தரங்கத்தில் ஜெபத்தில் தரித்திருந்து, தேவன் தம்முடைய இருதயத்தைத் தங்களோடு பகிர்ந்துகொள்ளக் கற்றிருக்கிறார்கள். தேவன் எவைகளைக்குறித்துக் கரிசனைகொண்டிருக்கிறாரோ அவைகளைக்குறித்தே அவர்களுடைய இருதயமும் கரிசனைகொள்ளுகிறது.


ஜார்ஜ் முல்லர் பிரிஸ்ற்றலில் 1891-களில் அநாதைஇல்லங்களை ஆரம்பித்தார். தங்களது எல்லாத் தேவைகளையும் சந்திக்க அவர் தேவனையே நம்பினார். அவர் ஒருபோதும் யாரிடமும் பணம் கேட்டதில்லை; ஆனால், அநேகமாயிரம் குழந்தைகளுக்கு ஆடையும் ஆகாரமும் உறைவிடமும் இலவசமாகக் கொடுத்தார். அவருடைய வாழ்க்கையின் இறுதியில் அவர் யார்யாருடைய இரட்சிப்புக்காக ஜெபித்தாரோ அவர்கள் யாவரும் (இரண்டுபேர் தவிர) கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். இந்த இரண்டுபேருங்கூட முல்லர் மரித்தபின் இரட்சிக்கப்பட்டார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வடகிழக்கு பாகத்தில் வாழ்ந்துவந்த செவ்விந்தியர்கள் மத்தியில் 1700-களில் டேவிட் பிரெய்னார்டு ஊழியஞ்செய்தார். அவர் அந்த மக்களுக்காக அதிக நேரம் ஜெபித்ததால் அவருக்குக்கீழிருந்த பனிக்கட்டி உருகிப்போயிற்று என்று அவரைக்குறித்துச் சொல்லப்பட்டது. அநேகர் இரட்சகரை ஏற்றுக்கொள்ள அவர் தேவனுடைய கருவியாயிருந்தார்.
நம்முடைய இருதயத்துடிப்பு தேவனுடைய இருதயத்துடிப்புக்கு இசைந்து காணப்படும்போது, நாம் பரிந்துபேசியவைகளாகிய நம்புவதற்கரிய காரியங்களையும் அவர் செயல்படுத்துவார். அழிந்துபோகிற உலகத்துக்காக தேவனுடைய இருதயம் வேதனைப்படுகிறது. அத்தகைய பாரம் நம்மில் வரும்போது நாம் அவரை நோக்கிக் கூப்பிடுவோம்; அவர் கேட்டு அதற்குப் பதில் கொடுப்பார். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான் (சங்.126:5,6) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.

வழிதவறிப்போன தன் மகனுக்காக அழுகிற தாயாரின் கண்ணீர் தேவனுடைய இருதயத்தைத் தொடுகிறது. கேட்டுப்போன தன் பிள்ளைகளுக்காக ஒரு தகப்பன் விடுகிற கண்ணீர் பரலோகத்தை அசைக்கிறது. தங்களோடு கல்விகற்கிறவர்களுடைய இரட்சிப்புக்காக இளைஞர்கள் இருதயம் நொறுங்கும்போது, அந்தப் பள்ளியையே கிறிஸ்துவுக்குச் சொந்தமாக்கத்தக்கதாக தேவனுடைய ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கிவருகிறார். தம்முடைய மக்களின் கண்ணீர் தேவனுக்கு அருமையானது.
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? (சங்.56:8) என்று சங்கீதக்காரன் சொன்னதை வேதத்தில் வாசிக்கிறோம். நம்முடைய கண்ணீரைச் சேர்த்துவைக்கும் ஒரு துருத்தி அல்லது குப்பி தேவனிடத்திலிருக்கிறது; நம்முடைய இருதய வேதனைகளையெல்லாம் பதிவுசெய்யும் ஒரு புத்தகமும் அவரிடமுண்டு

கிறிஸ்துவற்றவர்களுக்காக நாம் கண்ணீர் விடும்போது, தேவன் அதை மறக்கவில்லையென்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். அவருடைய காலம் வரும்போது, ஒருநாள் அவர் வானத்தைத் திறந்து நம்முடைய கற்பனைக்கு அதிகமான ஆசீர்வாதங்களை நம்மீது ஊற்றுவார்.

ஒரு ஆலயத்தின் ஜெபஅறையில் புதிய கம்பளம் விரிக்கப்பட்டபோது, அச்சபையின் போதகர் தேவனிடம் ஒரு சிறப்பான வேண்டுகோள் விடுத்ததாக அவர் என்னிடம் கூறினார். ஆண்டவரே, இந்தக் கம்பளம் உம்முடைய மக்களின் கண்ணீரினால் உமக்கு அர்ப்பணிக்கப்படட்டும் என்று நான் ஜெபிக்கிறேன் என்பதே அவர் வேண்டுதல். வெகு சீக்கிரத்தில் அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது. அத்திருச்சபையில் எழுப்புதல் கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டன. தேவன் வல்லமையாய் அசைவாடினார்; இருதய உடைவோடும் பாவ உணர்வோடும் கண்ணீர் வடித்த மக்களால் அந்த அறை நிரம்பியது.

கண்ணீர் தேவனுடைய இருதயத்தைத் தொடுகிறது. மனுக்குலத்தின் வேதனை அவருக்குத் தெரிந்ததால், தங்களுடைய பாவங்களால் காயப்பட்ட மக்களுக்காகத் தம்முடைய சொந்தக் குமாரனை அனுப்பித் தந்தார். வேதபுத்தகத்தில் மிகவும் குறுகியதும் கூடுதல் வல்லமையுள்ளதுமான வசனம், இயேசு கண்ணீர் விட்டார் என்பதுவே. மனிதனாய் அவதரித்த தேவன் கண்ணீர் விட்டாரேயாகில், அவருடைய இருதயத்தை நாம் உணரும்போது, நாமும் கண்ணீர் விடுவோம். ஆத்துமாக்களுக்காக நீங்கள் கண்ணீர் சிந்தினால், தேவன் உங்கள் கண்ணீரைக் குப்பியில் பத்திரப்படுத்துவார் என்பதை மறந்துபோகவேண்டாம். ஒரு நாள் அவர் அந்தக் குப்பியைத் திறப்பார்; அப்போது அதிலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்

No comments:

Post a Comment