Saturday, March 30, 2013

ஊழியத்தின் மேல் உள்ள வைராக்கியம் - Damien

பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (

Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
.
1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்த தீவில் அவர் கொண்டு வந்தார். ஏதோ குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளை கொடுத்து, ஜனங்களை ஆறுதல் படுத்தினார்.
.
ஒரு நாள் அவர் குளிக்க செல்லும்போது, தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில் பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஓ, அவருக்கும் தொழுநோய் பற்றி கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம், 'நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன்' என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் 'தொழுநோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்' என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே தான் அளவு கடந்த அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டு பாராமல், தன் உடலையும், உயிரையும் தொழு நோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதை எடுத்து காட்டின அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.

இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பு

இங்கிலாந்தை சேர்ந்த அநேக வீடுகளுக்கு சொந்தக்காரரான ஒருவர், புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்தபடியால், தன் வீடுகளில் தங்கியிருக்கும், வாடகை குடிமக்களுக்கு, தேவனுடைய இரட்சிப்பு எப்படி இலவசம் என்பதை வெளிப்படுத்த வேண்டி, தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலங்களின் சுவற்றில், ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை பத்து மணியிலிருந்து, 12 மணிவரை தான் ஒரு குறிப்பிட்ட லாட்ஜில் இருக்கப் போவதாகவும், யார்யார் தன்னிடம் கடன் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில் ஒட்டியிருந்தார்.
அநேகர் அந்த போஸ்டரை பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா என்று அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள். சிலர் இதில் ஏதோ தந்திரம் இருப்பதாக சொல்லி கொண்டார்கள். குறிப்பிட்ட அந்த நாள் வந்த போது, அந்த லாட்ஜின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. சரியாக தான் சொன்னபடியே, அந்த வீட்டு சொந்தக்காரர் ஓரு காரில் வந்து இறங்கினார். யாரிடமும் ஒன்றும் பேசாமல், உள்ளே போய் அலுவலகத்தில் அமர்ந்தார். வெளியே கதவு சாத்தப்பட்டிருந்தது.
கதவுக்கு வெளியே பெரிய கூட்டம். ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள். நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா? ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று நினைத்து தள்ளிவிடுவாரா? நான் முதலில் போக மாட்டேன், வேறு யாராவது போகட்டும் பின் நான் போகிறேன் என்று ஒவ்வொருவரும் பேசி கொண்டு நின்றிருந்தார்களே ஒழிய யாரும் முதலில் போக துணியவில்லை. அப்படியே நேரம் கழிந்து கொண்டிருந்தது.
கடைசியல் 12 மணி ஆகப்போகும் நேரம், ஒரு வயதான தம்பதியினர், அங்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் ‘வீட்டு சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?’ என்று கேட்டனர், ‘ஆம் இருக்கிறார் ஆனால் இதுவரை யாருக்கும் கடன் மன்னிக்கப்படவில்லை’ என்று கூறினர். அப்போது அந்த தம்பதியினர் கண்ணீருடன், ‘அவர் ஒட்டியிருந்த போஸ்டர்களை பார்த்து நாங்கள் தொலை தூரத்திலிருந்து வந்தோம், இது பொய்யென்று எங்களுக்கு தெரியாது’ என்று திரும்ப போக எத்தனிக்கையில், ஒருவர் ‘யாரும் இதுவரை உள்ளே செல்லவில்லை’ என்று கூறினார். அத்தம்பதியினர், ‘அப்படியா? அப்படியானால் நாங்கள் உள்ளே போகிறோம்’ என்று போக முயற்சித்த போது மற்றவர்கள், ‘அவர் என்ன சொன்னார், உங்கள் கடன்களை மன்னித்தாரா என்று எங்களுக்கு திரும்ப வந்து சொல்லுங்கள், நாங்களும் போய் கேட்க வேண்டும்’ என்று கூறினார்கள். அதற்கு அத்தம்பதியினர் சம்மதித்து, உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி, அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அந்த காரியதரிசி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு மிகவும் நன்றியுடன் அவருக்கு நன்றி செலுத்தி வெளியே செல்ல முற்படுகையில் காரியதரிசி, ‘நீங்கள் 12 மணி ஆகும் வரை வெளியே செல்ல கூடாது’ என்று கூறினார். அப்போது அவர்கள், வெளியே மற்ற மக்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய காத்திருப்பதாக சொன்னார்கள். அப்போது காரியதரிசி, ‘உங்களுக்கு சொன்னது போல தான் மற்றவர்களுக்கும் சொல்லப்பட்டது. அவர்கள் உள்ளே வந்தால், அவர்களுடைய கடன்களும் மன்னிக்கப்படும்’ என்று கூறி அவர்கள் அமர்த்தினார். சரியாக 12 மணியானதும் கதவுகள் திறக்கப்பட்டது. முதலில் அந்த வயதான தம்பதியினர் வெளியே வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், ‘என்ன உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றினாரா’ என்று மாறி மாறி கேள்விகள் கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். ‘பின் ஏன் எங்களிடம் வந்து சொல்லவில்லை’ என்று கேட்டனர். அப்போது அந்த தம்பதியினர், ‘அவர் எங்களை உள்ளே அமர சொன்னார். நாங்கள் உள்ளே போய், அவரிடம் மன்னிப்பு பெற்றது போல நீங்களும் உள்ளே வந்தால் மன்னிக்கப்படும் என்று கூறினார். எங்களை உள்ளேயே இருக்க சொன்னார்’ என்று கூறினர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும் காரியதரிசியும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள் பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு ‘ஐயா எங்களுக்கும் மன்னியும்’ என்று கதறினர். அப்போது அந்த எஜமானர், ‘இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தி கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால் நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை’ என்று கூறினார்.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24)

தேவனின் பதில் தாமதிப்பது ஏன்?

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.
 
வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல்

ஒரு சிறு பெண் தன் தாயிடம் வந்து, 'அம்மா பாருங்கள், எனக்கு எல்லாம் ஒன்றும் சரியாகவே நடக்கவில்லை, கிளாஸில் டீச்சர் சொல்லி கொடுக்கிற அல்ஜீப்ரா பாடம் மனதில் பதிய மாட்டேன் என்கிறது, அதனால் பரிட்சையில் பெயில் ஆகி விட்டேன். என் அன்பு தோழி என்னை விட்டு விட்டு வேறு ஒருத்தியுடன் பிரண்ட் ஆகி விட்டாள், ஏனம்மா எனக்கு இப்படி நடக்கிறது' என்று அழுதாள்.
அப்போது அவளுடைய தாயார் கேக் செய்து கொண்டிருந்தார்கள். அவளிடம், 'உனக்கு கேக் செய்கிறேன், பிடிக்கும்தானே' என்று கேட்டார்கள். அப்போது அவள், 'ஆம், அம்மா எனக்கு நீங்கள் செய்கிற கேக் மிகவும் பிடிக்கும்' என்று கூறினாள்.
 
அப்போது அவளுடைய தாயார், ' இந்தா, கொஞ்சம் எண்ணெயை எடுத்து குடித்து கொள்' என்றார்கள். அதற்கு அவள், 'ஐயெ, சீ' என்றாள். 'சரி, இந்தா, இரண்டு பச்சை முட்டை அதையும் வாயிலே போட்டு கொள்' என்றார்கள், 'என்னம்மா, நீங்கள்' என்று அந்த பெண் கேட்டாள். அம்மா விடாமல், 'கொஞ்சம் மாவையும் அதோடு, சோடா உப்பையும் கூட சேர்த்து வாயில் போட்டு கொள்' என்று கூறினார்கள். அப்போது அந்த பெண், 'என்னம்மா நீங்கள் சொல்கிறீர்கள், அதையெல்லாம் எப்படி நான் அப்படியே வாயில் போட்டு கொள்ள முடியும்' என்று கேட்டாள்.
 
அப்போது அந்த தாயார், 'ஆம் மகளே, இவையெல்லாம் தனியாக பார்த்தால், அப்படியே சாப்பிட்டு விட முடியாது, அவையெல்லாம், பச்சையாக, பிரயோஜனமற்றதாக விரும்பதகாததாக தோன்றும், ஆனால், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து, சரியான முறையில் சமைக்கும்போது, எல்லரும் விரும்புகிற அருமையான கேக் ஆக மாறும்.

அதுபோல, தேவனும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு துன்பமான நிகழ்ச்சிகளையும், விரும்பதகாத காரியங்களையும், நாம் அவரை சார்ந்து கொள்ளும்போது, இனிமையாக மாற்றி தருவார்' என்று கூறினார்கள். அவர் எல்லா காரியத்தையும் தமது சித்தத்தின்படி செய்யும்போது, அவை நன்மையாக முடியும் என்பது அவருக்கு தெரியும். ஆனால், நாம் அவரை சார்ந்து, அவரை மாத்திரம் பற்றி கொண்டிருக்கும்போது, நம்முடைய எல்லா நம்பிக்கையற்ற நிலைமைகளையும் அவர் மாற்றி, நிச்சயமாக அற்புத விடுதலையை தருவார்.

லேசான உபத்திரவம் - நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது

இரண்டாம் உலகப்போரின் வெற்றியில்,அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ஐசன் ஹோவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதன் முதலாக இராணுவ பயிற்சியில் சேர்ந்தபோது தான் அங்கு படும் கஷ்டங்களை தினமும் தன் தந்தைக்கு கடிதமாக எழுதுவது வழக்கம். அதில் 'அதிகாலை 4 மணிக்கு எழும்ப வேண்டும். ஒரு நாளைக்கு 20 கி.மீ ஓட வேண்டும். மூன்று கி.மீ முள்வேலியினால் ஆன வலையில் முழங்கால் மற்றும் கைளினால் தவழ்ந்து சென்று கடக்க வேண்டும். சுமார் 40-45 டிகிரி வெப்பமுள்ள பாலைவனப்பகுதியில் பயிற்சி எடுக்கும்போது கிடைக்கும் ஆகாரம் 100 மில்லி பால் மட்டுமே'. இவ்வாறு தான் அனுபவிக்கின்ற கஷ்டங்களை கடிதமாக எழுதி அனுப்பினாலும் தந்தையிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. மூன்று மாதங்களில் அலுத்துப் போன ஐசன் நூறாவது கடிதத்தை 25 பக்கமுள்ள நீண்ட கடிதமாக எழுதினார். 'நீங்கள் இன்னும் இதற்கும் பதில் எழுதாவிட்டால், அல்லது இங்கிருந்து என்னை அழைத்து செல்லாவிட்டால், இதுவே என் கடைசி கடிதம். நான் என்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு சவப்பெட்டியில் வந்து சேர்வேன்' என்று எழுதி முடித்தார்.
.
இந்த நூறு கடிதங்களுக்கும் பதிலளிக்க அவரின் தந்தை ஒரு போஸ்ட்

கார்டில் ஒரு சம்பவத்தை எழுதினார், 'இரண்டு பேர் சிறையிலடைக்கப்பட்டனர். ஒருவன் தன்னுடைய பரிதாப நிலையைக் கண்டு
கண்ணீர் வடித்து தலை கவிழ்ந்வாறே அவ்வறையின் மணலை பார்த்தே துக்கத்துடன் தன் நாட்களை கழித்தான். மற்றவனோ துருப்பிடித்த ஜன்னல் வழியாக ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்து அவற்றின் அழகினையும், வெளிச்சத்தையும் கண்டு, சந்தோஷத்துடன் காலத்தை கழித்தான். நீ யாரைப்
போலிருக்க போகிறாய்?' என்று எழுதி கையெழுத்திட்டு மகனுக்கு அனுப்பி
வைத்தார், இந்த கடிதத்தை படித்த ஐசன் உற்சாகமடைந்து, சந்தோஷத்துடன்
இராணுவ பயிற்சியை முடித்து இருபதாம் நூற்றாண்டின் யுத்த வரலாற்றில்
ஒரு நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டார். அமெரிக்க தேசத்தின்
34ஆவது ஜனாதிபதியாகவும் மாறினார்.
.
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ பாடுகளின் வழியாக அவர் கடந்து சென்றாலும் கிறிஸ்துவுக்காக அத்தனை பாடுகளையும் பொறுமையாக சகித்தார். அந்த பாடுகளை குறித்து அவர் சோர்ந்து போகாமல், கிறிஸ்து தன்னை அழைத்த அழைப்பில் உண்மையாக இருந்தபடியால், தான் பட்ட பாடுகளை, 'இக்காலத்து இலேசான பாடுகள்' என்று ஆச்சரியவிதமாக கூறுகிறார். மட்டுமல்ல, அந்த உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என விசுவாசித்தார்..
 

நாமும் ஒருவேளை அநேக பாடுகளினூடே கடந்து சென்றுகொண்டிருக்கலாம். பாடுகளையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியதாகத்தான் தோன்றும். சிறையில் இருந்த கைதி மணலை பார்த்தபடியே தன் வாழ்நாளை கழித்தது போன்று, துக்கத்திலேயே நம் வாழ்நாளை கழித்து விடும்படியாகவே நேரிடலாம். நாம் படும் பாடுகள் எதுவும் நிலையானதல்ல, ஒரு நாள் அவை நம்மை விட்டு கடந்து போகத்தான் செய்யும். ஆனால் இப்படி ஆயிற்றே என்று நாம் துக்கத்தில் மூழ்கிப் போனால் யாராலும் நமக்கு உதவ முடியாது.

இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்

மேற்கு மிக்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமொதெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை, ஏனெனில் அவன் தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டி விட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில் கிட்டத்தட்ட வழுக்கை தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்கு திரும்பிய முதல் நாளில் வியப்பு அவனுக்கு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்பு கொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது இரக்கத்தை காட்டினர். நண்பர்களின் இச்செயல் அச்சிறுவனுடைய வேதனையை குறைத்தது.
.
ஒரு வேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்த ஜேக் வைர்ட்ஜன் என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடைய ஒருவருடன் உணவருந்த சென்றார். அந்நபர் வாயில் வைக்கும் உணவை மெல்ல முடியாமல் கொஞ்ச கொஞ்சமாக கீழே விழுந்து கொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செய்தி தாளை கட்டி வைத்து கொண்டு சாப்பிடுவார். ஆகவே யாரும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்து விடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இது ஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் ஒரு செயலாகும்.
.
எலியட் என்பவர் காலைதோறும் வேதத்தை தியானிக்கும் பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரை பார்க்க நேரிட்டால், தனது தியானத்தை நிறுத்தி விட்டு, வெளியே சென்று, இன்முகத்தோடு அவரை விசாரித்து, உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும் தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. இதுவும் இரக்கத்தின் விளைவுதானே! பால் என்பவர் ஹோட்டல் ஒனறிற்கு சென்றிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த ஃபிரட்டி என்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயே கிறிஸ்துவை ஏற்றுகொண்டார். சில காலம் கழித்து, ஃபிரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரை நாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள் அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப்போகும் இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார். இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்!

Black Hole - தவறான ஒரு சிக்னல்

1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.
.
அந்த விண்வெளிகலம் பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த ஊர்தியிலிருந்து கிடைத்தது. அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.
.
இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.
.
நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர். ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!
.
பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.
.
வேதத்தில் யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரை தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடாபில்லாமல் போய் விட்டது. அவர் போட்ட சத்தங்கள் யார் காதிலும் கேட்கவில்லை. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார். ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்பு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது.
.
ஒருவேளை நீங்களும் Black Hole என்று சொல்லப்படும் கடும் பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும் பாடுகளை அறிவார் யாரும் இல்லையோ? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறி போய் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னை கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? Black Hole அனுபவம் உங்களை தனிமையாக்கிற்றோ?
.
நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூர போனார் என்று நாம் நினைத்தாலும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவேதான் இருக்கிறார்.

தாழ்மை - நற்பண்பு

ஒரு பெரிய
கர்வாலி மரமும் சிறிய புல்லும் பற்றிய ஒரு சிறுகதை உண்டு. அக்கர்வாலி மரம் தன்னருகில் வளர்ந்து வந்த சிறிய புல்லை நோக்கி, 'ஓ அற்பப்புல்லே, நீ எவ்வளவு பெலனற்றதும், நிலையற்றதும் சிறியதுமாயிருக்கிறாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கிறேன்' என்று அடிக்கடி பெருமையடித்துக் கொண்டது. தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அந்த புல்லுக்கு ஒன்றுமில்லாதிருந்தபடியால் அது எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஒரு நாள் ஒரு பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த கர்வாலி மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும், நேராக நிமிர்ந்து நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில் விழுந்து விட்டது.
.
.புயல் காற்று ஓய்ந்தபோது, கர்வாலி மரம் புல்லுக்கு என்ன நேர்ந்தது என்று
அறியும்படி மெதுவாக அதனை எட்டிப்பார்த்தது. புல் எப்போதும் போல்
தழைத்து நின்று கொண்டிருந்தது. அதை கண்ணுற்று வியப்படைந்த
கர்வாலிமரம், 'ஓ, சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே
அப்பலத்த புயற்காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய
அற்பப்புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப்புயலை சமாளிக்க
முடிந்தது?'என்று கேட்டது. அதற்கு அந்தப்புல் புன்முறுவுலுடன், 'அது
மிகவும் எளிதானது. காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை
குனிந்து கொள்வேன். அப்பொழுது அவை எனக்கு எந்த பிரச்சனையையும்
உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும்' என்று பதிலளித்தது,
.

.தாழ்மை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம் மற்றவரை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் மெய்யான மனத்தாழ்மையை கற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு ஆவியின் அடித்தளத்திலும் பெருமை நிறைந்திருக்கிறது. நம்மை யாராகிலும் தரக்குறைவாய் பேசி அவமதிக்கும்போது நம் மனம் புண்படுமாயின், உண்மையில் புண்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய பெருமையே ஆகும்.

Friday, March 29, 2013

சாவின் விளிம்பில் தேவன் கொடுத்த பரலோக நிச்சயம் - NEAR DEATH EXPERIENCE - BY CHRISTO SELVAN

வெளிப்படுத்தல்22: 6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.




 அன்பு நண்பர்களே,

என் வாழ்வில் நடந்த ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சிறு சாட்சியை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.

என் தந்தையின் பெயர் திரு.வாசன் தேவராஜ் தாயார் பெயர் திருமதி.கிறிஸ்டி. நான் தேவனை அதிகமாக விசுவாசிக்கிற குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதில் இருந்தே கடவுளுகுள்ளாக வளர்க்கப்பட்டேன். அப்பா எனது இரண்டாது அண்ணனுடன் (இம்மானுவேல் பிரைட்) இணைந்து கோவை இரத்தினபுரியில் மாவு மில் நடத்தி வருகிறார். அம்மா ஓர் அரசாங்க பள்ளிகூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்தவுடன் கடைக்கு சென்று அண்ணனுக்கும், அப்பாவுக்கும் உதவிசெய்வார்கள். எனக்கு இரண்டு அண்ணன் மற்றும் ஓர் தங்கை உண்டு. மூத்தவர் திரு.சாமுவேல் பாப்டிஸ்ட் (என்னை கடவுளுக்குள் வழிநடத்தியவர்) UESI - TN மூலமாக முழு நேர ஊழியம் செய்து வருகிறார். தங்கை திருச்சியில் தன கணவர் வக்கீல்.திரு தாமஸ் அவர்களோடு வசித்துவருகிறாள்.
எங்கள் இல்லம் கவுண்டம்பாளையம், ஜெயம் நகரில் உள்ளது.

இது எனது திருமணத்திற்கு முன் நடந்த ஓர் நிகழ்வு.

2007ம் வருடம், நவம்பர் 2ம் தேதி, வெள்ளிகிழமை, வழக்கம் போல் என் கல்லூரி வேலைகள் முடிந்த பின்னர்  நான் சார்ந்திருந்த இந்திய நற்செய்தி மாணவர் மன்றத்தின் மூலமாக ஊழியத்தை முடித்துவிட்டு  கடைக்கு சென்றேன். அதன் பிறகு அம்மாவை கடையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அன்றும் சுமார் 8 மணி அளவில் அம்மாவை கூட்டி கொண்டு என் வீட்டிற்கு சென்றேன். அதன் பின்னர் என் தங்கையை அழைக்க கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும்.

அப்படி வரும் வழியில் கடுமையான மழை பிடித்துக்கொண்டது. தங்கை மழையில் நனைந்துவிடுவாளே என்ற அவசரத்தில் என் வேகத்தை அதிகப்படுத்தினேன். கடுமையான மழையால் ஓர் மின்சார கம்பம் கம்பிகளோடு நடுரோட்டில் சாய்ந்திருந்தது. வேகமாக வந்ததால் நான் அதை கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் மீது வேகமாக மோதியதால் பல அடிகளுக்கு மேல் தூக்கி எறியப்பட்டேன். கீழே விழுந்தது நினைவில்லை, அதற்குள் மயக்கமுற்றிருக்கிறேன்.

அப்பொழுது தேவன் எனக்கு ஓர் காரியத்தை வெளிப்படுத்தினார். நான் உயரே இருந்து கீழ விழும் போது ஓர் பெரிய கரம் என்னை தாங்கி பிடித்து தரையில் கிடத்துவதுபோல் உணர்தேன். ஓர் தண்ணீர் நிரப்பப்பட்ட மெத்தையில் கிடத்துவதுபோல் இந்நிகழ்வு இருந்தது. அப்பொழுது என் உடம்பில் இருந்து என் ஆவி பிரிவதை தெளிவாக அறியமுடிந்தது. நாம் எப்படி ஓர் மனிதரிடம் முகமுகமாய் பேசுகிறோமோ அதை போல் என் ஆவி பிரிவதை உணர்ந்தேன். நான் என் உடலை திரும்பி பார்த்து இறந்து போய் விட்டதை உணர்ந்தேன். "இறந்து விட்டோம், இனி உலகத்தில் நமக்கு இடமில்லை" என்று எனக்குள் பேசியவாறு என் உடலை விட்டு கடந்து சென்றேன். சில வினாடிகளில் பிரகாசமான ஒருவர் என்னை ஓர் இடத்திற்கு புன்னகையோடு கூட்டி சென்றார். அந்த இடம் அமைதி நிறைந்ததாயும், பிரகாசமுள்ளதாயும், சமாதானம் நிறைந்ததாயும் இருந்தது. பல பரிசுத்தவான்கள் அங்கு நித்திரை செய்து கொண்டிருந்தனர். சிலை என்னை பார்த்து அன்போடு சிரித்தார்கள். அவர்கள் முகங்களில் ஓர் சமாதானம், சந்தோசம் இருப்பதை பார்த்தேன். அப்பொழுது பிரகாசமான ஒருவர் என்னை அணைத்தவாறு "உங்களுடைய இடம் அங்கே உள்ளது" என்று சுட்டி காண்பித்தார். நான் அந்த இடத்திற்கு சென்றேன். செல்லும் போது "இந்த இடம் இயேசுகிறிஸ்து மரித்து மூன்று நாள் பரதிசியில் இருந்த இடம். இங்கு இருந்து தான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்று தேவ தூதன் என்னிடம் சொன்னதை போல் உணர்ந்தேன்.

மரித்து விட்டோம் என்ற பயம் என்னில் சிறிது கூட இல்லை. சந்தோசமாக என்னுடைய இடத்திற்கு நகர்ந்தேன். அருகில் நெருங்கியவுடன் என் மனதில் ஓர் சிந்தனை "ஊழியத்தை யார் கையிலும் ஒப்படைக்காமல் வந்துவிட்டேனே? யார் இதனை செய்வார்? என் ஊழியத்தை இன்னும் நிறைவேற்றவில்லையே? என்று பதறினேன். சிறிது நேரத்தில் பரிசுத்த தேவன் என்னை மீண்டும் இப்பூமிக்கு அனுப்பி வைத்தார். சிறிது நேரம் கழித்து என் காதினுள் தண்ணீர் போவதை உணர்தேன். நான் உயிரோடு எழும்பினேன். எழும்பி பார்த்த போது நான் ஆவியில் எப்படி என் வாகனத்தை பார்த்தேனோ அதே போல் என் வாகனம் நொறுங்கி கிடந்தது. 
 குறைந்த வீடுகள் மற்றும் காட்டு பகுதியானதால் யாரும் வரவில்லை.  உடனே அங்கிருந்து ஓடி என் அண்ணனையும் தங்கையும் அழைத்து விபரத்தை சொன்னேன். ஊரே திரண்டு விட்டது.

அன்று இரவு தேவனின் பாதத்தில் அமர்ந்து ஜெபித்த போது தேவன் சங்கீதம் 63:3 எனக்கு காண்பித்தார். "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்." இந்த வசனத்தோடு என்னிடம் பேசினார். "உன் ஆயுள் 30 வருடம் தான். நீ என் ஊழியத்தை பற்றி கேட்டதால் உன்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினேன். இப்போது நீ உன் ஜீவனுக்குரிய நாட்களில் அல்ல. என் கிருபையின் நாட்களில் இருக்கிறாய்" என்று தேவன் என்னிடம் பேசினார். அவருடைய சத்தத்தை என் காதுகள் கேட்டன. தேவனுக்கே மகிமை...

அதன் பிறகு நான் சார்ந்திருந்த ஊழியத்தில் பெரிய வளர்ச்சியை பார்க்கமுடிந்தது. அகஸ்டின் அண்ணன், ரூபன் அண்ணன், ஜெயக்குமார் அண்ணன், அனந்த குமார் மற்றும் சாம்சன் அண்ணன் மற்றும் என் ஊழியத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் மூலமாக தேவன் பெரிய காரியங்களை செய்தார். தேவனுக்கே மகிமை.

இங்கு நான் குறிப்புட்டுள்ளது தேவன் எனக்கு வெளிப்படுத்தின ஓர் மகிமையான காரியம். இதன் மூலம் எனக்கு தேவன் நிச்சயித்தது சொன்னது என்னவென்றால்.... பரதீசி (PARADISE) என்றும், பரலோகம் என்றும், நம் பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டது போல் பரிசுத்த தேவன் நீதிபரராய் வீற்றிருப்பதும் உண்மை. தேவன் என் வாழ்க்கையில் பரலோக நிச்சயத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயமாக நான் என் மரணத்திற்கு பின்னால் பரலோகம் தான் செல்வேன் என்கிற ஆணித்தரமான நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

தேவனுக்கு பிரியமானவர்களே, பரலோகம் என்று ஒன்று உண்டு, பரிசுத்த வாழ்க்கை என்பதும், தேவனை உங்களை நேசிக்கிறார் என்பதும் கணக்கிடமுடியாத உண்மை. தேவன் உங்கள் ஆயுசு நாட்களை கூட்டி கொடுத்திருப்பது அவரை அதிகமாக நேசிக்கவும், அவருடைய ஊழியத்தை செய்து பலரை அவருடைய மந்தையில் சேர்க்கவும் தான். இதை உணர்தவர்கலாக தேவனின் நுகத்தை சுமப்போமா?

தேவன் தாமே இந்த சிறு சாட்சியை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அந்த நம்பிக்கையில் தொடர்ந்து குடும்பமாக ஊழியம் செய்து வருகிறோம். தொடர்ந்து எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.

யோவான் 11:25 இயேசு........... நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

Saturday, March 23, 2013

அஹமத் என்ற தவ்ஹீத் மவ்லவி - அனுபவ சாட்சி

அஹமத் என்ற தவ்ஹீத் மவ்லவி    தன்னுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட அனுபவ சாட்சியை நம்முடன் பகிர்ந்துகொள்ளுகிறார்.
 http://iemtindia.com/?p=612





அஹமத்

என்னுடைய சிறுவயது
எனது 10 வயதில் யாராலும் நேசிக்கமுடியாத ஒரு பாவியாக இருந்தேன். எல்லோருக்கும் ஒரு உதவாக்கரையாகவே இருந்தேன். சிறுவயதிலேயே தகப்பனை இழந்த என்னை 10 வயதின் பிறகு வளர்க்கும் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. மனமுடைந்து 3 முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன். கடைசியாக தூர தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மாமா என்னை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். நானும் சந்தோஷத்தோடு அவரோடு சென்றேன். மீண்டும் எனது ஊருக்கு நான் வருவதானால் என்னை வெறுத்தொதுக்கிய குடும்பத்தார் அனைவரும் என்னை மதிக்கவேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தான் நான் என் மாமனாரோடு சென்றேன்.
அங்கு சென்றவுடன் தான் புரிந்தது, என்னை படிக்க வைப்பதற்கோ எனக்கு உதவுவதற்கோ அல்ல. என்னை அவர்கள் வீட்டு வேலைகள் செய்வதற்கே என்னை அழைத்துச்சென்றார் என்று. என் தாயார் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியதால் பாடசாலைக்குச் செல்லவும் குர்ஆன் மத்ரஸாவுக்குச் செல்லவும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஊரில் மௌலவிமாருக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பதை நான் கண்டேன். நானும் ஒரு மௌலவியானால் என்னையும் மதிப்பார்கள், எனது ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டுமானால் நான் ஒரு மௌலவியாகவேண்டும் எனும் எண்ணம் எனக்குள் தோன்றியது.

மத்ரஸா வாழ்க்கை
எனது தாயின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மத்ரஸாவில் சேர்ந்து ஓத ஆரம்பித்தேன். மத்ரஸாவுக்குச் செல்லமுன் நான் காதிரியா எனும் தரீக்காவில் தைக்கா சுகைப் ஆலிமிடம் நஸீயத் பெற்றிருந்தேன். மத்ரஸாவில் ஷாதுலிய்யா சாவியாவில் கவனம் செலுத்தினேன். தொடர்ந்து தப்லீக் தஃவா என்னை கவர்ந்தது. ஜமாத்தில் செல்வதன் மூலமாக பாவம் செய்யாமல் வாழலாம் என்று நினைத்து அவர்களோடு இணைந்து செயல்பட்டேன்.
ஐந்து வருடங்களின் பின் எனது சொந்த ஊருக்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. என் மன விருப்பத்தின்படி, எல்லோரும் என்னை மதித்தனர். எனது உறவினர்களின் வீடுகள் எல்லாம் எனக்காகத் திறக்கப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதே நேரம் ஒரு வெறுமையையும் எனது உள்ளத்தில் உணர்ந்தேன். ஏதோ ஒன்றை நான் இழந்திருப்பதை உணர்ந்தேன்.

தவ்ஹீத் வாழ்க்கை
மீண்டும் சில நாட்களுக்கு பின் மத்ரஸா வாழ்க்கைக்குத் திரும்பினேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் மத்ரஸா மாறவேண்டியிருந்தது, புது மத்ரஸா! புது நண்பர்கள்! இவை என்னை பாதிக்கவில்லை. ஆனால் புதுக் கொள்கை அது என்னை மிகவும் பாதித்தது. ஏற்றுக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன். தொடர் போராட்டத்தின் பின் அனேக ஆராய்ச்சிகளின் பின் ஒரு தௌஹீத் வாதியாக மாறினேன். தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் ஆகிய கொள்கைகளைக்குறித்தும் ஒரு தெளிவோடு வாழ்ந்து வந்தேன்.
புத்தக வாசிப்பு அதிகரிக்க, இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் எனும் கொள்கையை உறுதியாக பற்றிக்கொண்டு, அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டேன். என்னோடு எனது நண்பர்கள் குழுவொன்றும் சேர்ந்து கொண்டனர்.
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் ஒரு விவாத ஒலிநாடாவை செவிமடுக்கக் கிடைத்தது. அது பி. ஜெய்னுல்ஆப்தீன் அவர்களுக்கும் உமர் அலி அவர்களுக்கும் நடந்த விவாதம். இதனை செவிமடுத்துவிட்டு எனது நண்பர்களோடு மீண்டும் ஒரு ஆராய்ச்சியில் இறங்கினேன்.
73 கூட்டங்களில் சுவர்க்கம் செல்லும் ஒரேயொரு கூட்டம் எது? பைஅத் செய்யாமல் ஒருவன் மரித்தால் அவன் நரகத்திற்கா செல்வான்? பிரிந்திருப்பது பித்அத் ஆகுமா? இவையே எமது ஆராய்ச்சி தலைப்புகள். கடைசியில் நாங்கள் எடுத்த முடிவுகள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சரியாக வாழும் ஒரே ஒரு கூட்டம் ஜமாதுல் முஸ்லிமீன்! உமர் அலிக்கு பைஅத் செய்வதே சரியான வழிமுறை. மத்ரஸா விதிமுறைகளை மீறி அதனை நடைமுறைப்படுத்தினோம். முஹம்மது நபியவர்களும் சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே அவர்களைப் போலவே வாழ முற்பட்டோம். சில மாதங்களில் மத்ரஸாவில் ஏனையோர் எங்களை அடையாளம் காணத் தொடங்கினர்.
பிரச்சினை அதிபர் வரைசெல்ல, நண்பர்களின் எதிர் காலத்தை பாதுகாக்கும் நோக்கில் நான் மத்ரஸாவிலிருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் உமர் அலியைத் தேடிச் சென்றேன்.
அது ஒரு எளிய கிராமம். வறுமையில் வாடும் மக்கள். அதேநேரம் மதீனாவில் முஹம்மது நபியும் சஹாபாக்களும் வாழ்ந்த வாழ்க்கைக்கொத்த வாழ்க்கை முறை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கிருந்துகொண்டு எனது மத்ரஸா நண்பர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளவதே எமது திட்டமாக இருந்தது.
சில நாட்கள் செல்லும் போதுதான் சிறார்களை பாடசாலைக்கு அனுப்பாமல் அவர்கள் வாழ்க்கையை கண்மூடித்தனமான கொள்கையின் பெயரில் வீணடிப்பதை அவதானித்தேன். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனது மூளையைப் பயன்படுத்தி சரியான கூட்டத்தை தேடுவதில் உச்சத்திற்கே சென்றிருந்தாலும் எனக்குள் ஒரு வெறுமை தொடர்ந்தும் இருந்து வந்தது.
எனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தேன். பாடசாலை படிப்பு 8ம் வகுப்பு வரை. மத்ரஸா படிப்பு 6 வருடங்கள். அந்த கிராமத்திற்கு நான் ஒரு முஹாஜிரீன் என்பதால் எனக்கு திருமணம் செய்து தரவும் அநேகர் முன் வந்தனர். சுமார் 4 மாதங்கள் அங்கிருந்து அவர்கள் கொள்கையை தெளிவாகப் படித்தேன். எனது நிலைமையையும் எனது எதிர்பார்ப்புகளையும் தெளிவாக உமர் அலியிடம் கூறி, அங்கிருந்து கிழக்கு மாகானத்தில் ஒரு முஸ்லீம் கிராமத்திற்குச் சென்றேன்.

மவ்லவியாக பணி செய்தல்

அங்கு நான் சென்ற அடுத்த நாள், பெரிய பள்ளி மௌலவி வெளிநாடு சென்று விட்டார். அந்த தொழில் எனக்குக் கிடைத்தது. அத்தோடு அங்குள்ள ஒரு மத்ரஸாவில் இணைந்து, மீண்டும் படிக்கத் தொடங்கினேன். மேலும் சாதாரண தர பரீட்சையும் எழுதினேன். அந்த கிராமத்தில் ஜும்மா பயானும் செய்தேன்.
பள்ளியில் இமாமாக இருப்பது எவ்வளவு போலியான வாழ்க்கை என்பதை மிக சீக்கிரத்தில் கற்றுக்கொண்டேன். அந்த பள்ளியில் 4 ஜமாத்களை சேர்ந்தவர்கள் தொழுகைக்கு வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கொள்கையை பின்பற்றி தொழுகை நடாத்த, பயான் பண்ண என்னை வற்புறுத்துவார்கள். நான் உண்மையென்று அறிந்ததை போதிக்க எனக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை.
மிகவும் மனவேதனையடைந்த நான், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எனது சொந்த ஊருக்கு சென்று விட்டேன். அங்கு சென்று இனிமேல் ஒரு ஜமாஅத்துடனும் இணையமாட்டேன், எனது உயர்தர படிப்பில் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்து, படிப்பில் கவனம் செலுத்திவந்தேன்.
இதற்கிடையில் காத்தான்குடியில் அமைந்துள்ள, வஹ்ததுல் வுஜுத் எனும் கொள்கையை பின்பற்றும் அப்துல்லாஹ் பயில்வான் குழுவினரையும் அப்துர் ரவப் மௌலவியையும் (குழுவை) சந்தித்து புத்தகங்கள் வாங்கி படித்து கற்றுக்கொண்டேன். இவை எல்லாவற்றையும் செய்தாலும் எனது உள்ளத்திலுள்ள வெறுமை மட்டும் நீங்க வில்லை.
பல வருடங்களாக முஸ்லீம்களோடு மட்டும் வாழ்ந்த நான் இப்பொழுது அந்நியர்களோடும் பழக ஆரம்பித்தேன். பின்நேர வகுப்புகளில் இந்து கிறிஸ்தவ நண்பர்களையும் சந்தித்தேன். ஒரு சில கிறிஸ்தவர்களை அவதானித்த போது, அவர்களின் வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் என்று நினைத்தேனோ அப்படி வாழ்கிற சில கிறிஸ்தவாகளை சந்தித்தேன்.
நான் மத்ரஸாவில் இருக்கும் போது, கிறிஸ்தவ மதத்தைப் பற்றி படித்துள்ளேன். பீஜே போன்றவர்கள் பைபிளுக்கு விரோதமாக எழுதிய புத்தகங்களை வாசித்துள்ளேன். ஏன், பைபிளில் முதல் ஐந்து புத்தகங்களையும் இன்னும் சில பகுதிகளையும் வாசித்துள்ளேன். கிறிஸ்தவர்களுக்கெதிராக பயான் செய்துள்ளேன்.
ஆனால் நான் இப்பொழுது கண்ட கிறிஸ்தவர்கள் மிகவும் வேறுபட்டவர்களாக எனக்குத் தோன்றினார்கள். கிறிஸ்தவன் என்றால் குடிகாரன், பன்றி சாப்பிடுபவன், எப்பொழுதும் இஸ்லாத்தை அழிக்க ஆவலாய் இருப்பவன். ஏமாற்றுக்காரன் என்றெல்லாம் பயான் செய்த எனக்கு நேரில் கண்ட கிறிஸ்தவர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். எனது முஸ்லீம் நண்பர்கள் அவர்களை ஏளனம் செய்தாலும் அவர்கள் பொறுமையாகவே இருந்தார்கள்.
திடீரென எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. ‘நான் ஏன் முஸ்லீம்களுக்கு சேவை செய்ய என் காலத்தை ஒதுக்க வேண்டும்? கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாத்தை போதித்து, அவர்களை சுவனபதிக்கு அழைத்துச் சென்றால் எனக்கெவ்வளவு பெருமையாயிருக்கும்’. உடனடியாக இத்திட்டத்தை அமுல்படுத்த ஆயத்தமானேன்…

வாழ்வின் திருப்புமுனை
இப்படிச் சொன்னவுடன் நீங்கள் நான் கிறிஸ்தவனாக மாறிவிட்டதாக நினைக்கின்றீர்களா? தொடர்ந்து வாசியுங்கள். கடைசியில் முடிவுக்கு வருவோம்.
ஒருமுறை சில கிறிஸ்தவ நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருக்கும் போது, எனது முஸ்லீம் நண்பர் ஒருவர் கிறிஸ்தவர்களை பார்த்து “இவர்கள் என்ன பாவத்தை செய்துவிட்டும் இவர்கள் கடவுளிடம் சென்று மன்னிப்புக்கேட்டால் அவர் மன்னித்துவிடுவாராம்” என்று ஏளனம் செய்தான். எல்லாம் அறிந்தவன் என்ற நினைப்போடு நானும் “உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையான மார்க்கத்திலிருக்கிற எங்களுக்கே தெரியாது! அப்படியிருக்க சிலை வணங்கிகளான உங்களுக்கு எப்படி தெரியும்? ஏன் இப்படி பொய் பேசுகிறீர்கள்” என்று வாதாடினேன். அதற்கு அந்த நண்பர்கள் எந்த சலனமுமில்லாமல் “எங்கள் பாவங்களுக்காக தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். அவர் இரத்தத்தினால் கழுவப்பட்டு நாங்கள் பரிசுத்தமாக்கப்பட்டுள்ளோம்” என்றான் அவர்களில் ஒருவன்.
நானும் வாதத்துக்காக அவர்கள் கருத்துக்களை எதிர்த்து ஏளனம் செய்தாலும் இவர்களின் பாவ மன்னிப்பை குறித்திருந்த உறுதி என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையான மார்க்கத்திலிருக்கிற எனக்கில்லாத உறுதி இவர்களிடம் எப்படி? எனும் கேள்வி எனக்குள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஈஸா நபியவர்களை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திவிட்டான். சிலுவையில் அறையப்பட்டது ஒரு ஆட்டிடையன் என்பதை எப்படியாவது இவர்களுக்கு தக்க ஆதாரத்துடன் ஒப்புவிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது. கிறிஸ்தவர்களோடு அநேக நேரத்தை கழித்தால்தான் அவர்களின் தவறுகளை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணி ஒவ்வொருநாளும் விளையாட்டுக்கு ஒதுக்கிய நேரத்தை சில கிறிஸ்தவ வாலிபர்களோடு செலவிட தீர்மானித்தேன்.
நாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணியளவில் சந்திப்போம். இரவு 8 மணிவரை எங்கள் உரையாடல் தொடரும். மிகவும் இனிமையான மாலை வேளைகள் அவை!
வெள்ளிக் கிழமை கிறிஸ்தவ சபைகளில் நடைபெறுகிற உபவாச கூட்டங்களுக்கும் சென்றேன். அங்கே பாடுகின்ற பாடல்கள் சொல்லப்படுகிற சாட்சிகள் எல்லாம் என்னை மிகவும் ஈர்த்தது. இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னை தம் கரம் நீட்டியே இயேசு அழைக்கிறார்… என்று எல்லோரும் பக்தியோடு பாடும் போது எனக்கும் பாட தோன்றும், ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு என்னை அடக்கிக்கொள்வேன்.
இப்படியே சில மாதங்கள் கடந்தோடிவிட்டது. கிறிஸ்தவர்கள் என்றால் பன்றி சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்கள், பெண்களோடு உல்லாசமாயிருப்பவர்கள் என்பதுதான் எனது மனதில் கிறிஸ்தவர்களைக் பற்றியிருந்த கண்ணோட்டம். மேலும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை பணம் கொடுத்து மதம் மாற்றுபவர்கள் என்று நான் போதிக்கப்பட்டதோடு நானும் போதித்துள்ளேன். ஆனால் நான் கண்ட இந்த கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக நான் காணவில்லை. இவர்கள் என்னை மதம் மாற்றவேண்டும் என்று எந்த முயற்சியும் எடுத்ததாக நான் காணவில்லை. ஆனால் எனக்கு சத்தியத்தை காண்பிக்குமாறு பிரார்த்தித்தார்கள். இவர்கள் மது அருந்துபவர்களாகவோ! மாதுகளோடு கூத்தடிப்பவர்களாகவோ நான் காணவில்லை. ஆனாலும் எனது மார்க்கம் தான் சரியானது என்று தொடர்ந்தும் அவர்களோடு வாதாடினேன்.
ஒரு நாள் ஒரு போதகர் என்னிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டார். நானும் ஆம் என்றேன். அவர் எனக்கு 2 புத்தகங்களை கொடுத்தார். நான் அவற்றை பெற்று வீடு சென்று வாசிக்கத் தொடங்கினேன். ஒரு புத்தகம் முஸ்லீம்களில் சத்திய வழியை கண்டடைந்தவர்கள் பத்துபேரின் சுய சரிதைகள். மற்றது இஸ்லாமியர் கேட்கும் 100 கேள்விகளுக்கான பதில்கள். இந்த இரண்டாவது புத்தகம் என்னை சிந்திக்கத் தூண்டியது.
கலிமதுல்லாஹ்
ரூஹ{ல்லாஹ்
குலாமன் ஸகீய்யா
நிச்சயமாக நாம் உம்மை மரணிக்கச் செய்து, எம்மளவில் உயர்த்திக்கொள்வோம்…
போன்ற குர்ஆன் பகுதிகள் என்னை சிந்திக்க வைத்தது. தொடர்ந்தும் குர்பானின் விளக்கத்தையும் ஈஸாவின் மரணத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, ஈஸா எனது பாவத்திற்காக குர்பானான இறைவனுடைய கலிமா என்பது தெளிவாக தெரிந்தது.


நான் ஈஸாவை(இயேசு) ஏற்றுக்கொண்டால் எனக்கு என்ன நடக்கும் என்று சிந்தித்தேன்.
அப்பொழுது என்னை மூன்றுவிதமான பயம் ஆட்கொண்டது.


1. என்னை வீட்டைவிட்டு விரட்டிவிடுவார்கள்.
2. எனது சமுதாயம் என்னை எதிர்க்கும். நான் தாழ்த்தப்படுவேன்.
3. சில வேளை எனது தீர்மானம் தவறானதாக இருந்தால் நான் நரக நெருப்பில் வேக வேண்டி ஏற்படும்.

இவ்வாறான பயங்கள் என்னை ஆட்கொள்ள, நான் என்ன செய்வதென்று தெரியாமல் சில நாள் மிகவும் கஷ்டப்பட்டேன். செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு எண்ணம் தோன்றியது.
அநேக கிறிஸ்தவர்கள் இறைவன் என்னோடு பேசினார். எனக்கு ஒரு வெளிப்பாட்டை தந்தார் போன்ற விஷயங்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் எனது நம்பிக்கை அல்லாஹ் நபிமார்களோடு மட்டும்தான் பேசுவான், அவனால் சதாரண மனிதர்களோடு பேச முடியாது என்பதாகும். இந்த இக்கட்டான தருணத்தில் நினைத்தேன். என்னை இந்த சிக்கலிலிருந்து விடுவிக்க அல்லாஹ்வாலன்றி வேறு யாராலும் முடியாது. ஆகவே நான் அவனிடம் உதவி கேட்பதுதான் சிறந்த வழியென்று எண்ணினேன்.
இரவு நித்திரைக்கு செல்லுமுன் ஒரு துஆவை செய்தேன் “வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று நம்புகிறேன். ஆனால் உன்னிடம் வரும் வழி இஸ்லாமா? கிறிஸ்தவமா ?என்று எனக்கு வெளிப்படுத்துவாயாக. அதற்காக எனது வாழ்வை அர்ப்பணிக்கிறேன். ஆமீன்”
இந்த துஆவை தகஜ்ஜதுக்கு எழுந்தவுடனும் செய்தேன். இவ்வாறு ஒரு வாரம் உருண்டோடியது. ஒருநாள் காலையில் உயர்தர பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்துவிட்டு, 6 மணியலவில் குளிராக இருந்தபடியால் கட்டிலில் அமர்ந்தவாறு சுவரில் சாய்ந்து போர்வையால் போர்த்திக்கொண்டிருந்தேன். எனது சகோதரி அவர் கணவருக்கு தேனீர் தயாரித்து கொண்டிருந்தாள். என் கண்கள் மூடியிருந்தது. ஆனால் நான் தூக்கத்திலிருக்கவில்லை. அந்த வேளையில் ஒரு காட்சி என்முன் தோன்றியது.
அந்த காட்சியில்…
நான் ஒரு மலையிலுள்ள ஒற்றையடிபாதையில் ஏறிச்செல்கிறேன். நான் முதலாவதாக கிறிஸ்தவத்தை பற்றி கலந்துரையாடிய சகோதரன் அந்த மலை உச்சியிலிருந்து அதனை வெட்டிக்கொண்டிருந்தார். அவர் அருகில் வெள்ளை ஆடை அணிந்த ஒருவர் அமர்ந்திருந்தார்.நான் அவர் முகம் பிரகாசமாக இருந்தது. நான் அவர்கள் அருகில் செல்லும் போது, என்னை சுட்டிக்காட்டி ‘ இவர் யார்’ என்று அந்த வெள்ளாடை அணிந்தவர் கேட்க, மலையை வெட்டிக்கொண்டிருந்த சகோதரனும் அவருக்கு பிரதியுத்தரமாக “இவர் சத்தியத்தை தேடுகிறார். சத்தியத்தை கண்டடைவார்” என்றார்.
நானும் அவர்களுடன் சேர்ந்து கதைத்துகொண்டு “ஆம் நூறு வீதம் சத்தியம் என்று தெளிவானால் நான் எனது வாழ்க்கையை அதற்காக அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை கடந்து சென்றேன்.
அதே காட்சியில்…
நானும் எனது இஸ்லாமிய நண்பர்களும் குளிப்பதற்காக ஒரு குளத்துக்கு செல்கிறோம். அங்கே எனது நண்பன் ஒருவன் மூழ்கப்போனான். பிறகு குளித்துவிட்டு கரையேறியவுடன் என்னை ஒரு வல்லமை ஆட்கொண்டது. என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எனது உடலை அசைக்கவோ பேசவோ என்னால் முடியவில்லை. எனது நண்பர்கள் என்னை பார்த்து நகைத்தார்கள். அப்படியே நான் சுயநினைவை இழந்துவிட்டேன் அந்த காட்சியில்.
மீண்டும் எனக்கு நினைவு வரும் போது, ஒருவர் எனது நெஞ்சில் கை வைத்துகொண்டும் இன்னும் ஒருவர் எனது அவர் கரத்தை பிடித்துகொண்டும் ஏதோ ஒரு மொழியில் அவர் ஏதோ சொல்ல, மற்றவரும் ஏதோ ஒரு மொழியில் ஏதோ சொன்னார். சுற்றியிருந்த ஆயிரக்கணக்காக மனிதர்கள் ‘அல்லேலூயா’ என்று உறக்க கூறினர்.
அந்த காட்சியிலும் எனது கட்டிலிலிருந்தும் நான் எழும்பினேன். அன்று வரை எனது உள்ளத்தை ஆட்கொண்டிருந்த வெறுமை என்னைவிட்டு நீங்கி, எனது உள்ளம் சந்தோஷத்தால் நிறம்பியது. அந்த சந்தோஷத்தை எனது வார்த்தைகளால் எழுத முடியவில்லை.
இந்த காட்சியில் நான் மறுபிறப்படைந்த அனுபவத்தை பெற்றேன். எப்படி என்கிறீர்களா? குளத்தில் குளித்து கறையேறியது ஞானஸ்நானத்தின் அனுபவத்தை பெற்றேன். பழைய மனுஷன் மறித்து புது மனிதன் பிறந்த அனுபவம் எனக்குள் இருந்த வெறுமை போய், இனம்புரியாத சந்தோஷத்தால் நிறம்பியதிலிருந்து பெற்றுகொண்டேன். இந்த சந்தோஷம் இன்னும் எனக்குள் இருக்கிறது. என்னை வாழ வைக்கிறது.
இப்பொழுது தொடர்ந்து இறைவேதமாம் பைபிளை வாசிக்க தொடங்கினேன். ஈஸாவின் நாமத்தில் துஆ செய்ய ஆரம்பித்தேன். ஆனால் எனக்குள் இன்னும் பயம் இருந்தது. இவையெல்லாம் மறைமுகமாகதான் செய்யவேண்டி ஏற்பட்டது.
டிசம்பர் மாதம் 24ம் திகதி பக்கத்து ஊர் ஒன்றில் நடாந்த ஒரு கிறிஸ்துமஸ் ஆராதனையில் கலந்துகொண்டேன். இரவு 12 மணியளவில் மிகவும் கடுமையான குளிரில் ஆராதித்துகொண்டிருந்தோம். சடுதியாக சில ஒளிக்கதிர்கள் என்னை நோக்கி வருவதை உணர்ந்து கண் திறந்து பார்த்தேன். (கிறிஸ்தவர்கள் கண்மூடியே பிரார்த்திப்பார்கள்) வித்தியாசம் எதையும் காணவில்லை. மீண்டும் கண் மூடி பிரார்த்தனையில் ஈடுபட, அந்த கதிர்கள் என்னை நோக்கி வந்தன. அதனை எப்படியாவது பெற்றுகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பிரார்த்தனையில் அவதானம் அங்குமிங்கும் செல்லாதவாறு காத்துகொண்டேன். சற்று நேரத்துக்கு பிறகு அந்த ஒளிக்கதிர்கள் என் தலையை பட்டது.
கடும் குளிரில் ஜெர்கின் போட்டுக்கொண்டும் நடுங்கிகொண்டு பிரார்த்தித்துகொண்டிருந்த எனக்கு, அவ்வேளையில் வியர்த்து வடிந்தது, எனது உடம்பு உஷ்ணமானது. சந்தோஷ மிகுதியால் பக்கத்திலிருந்தவரை கட்டிப்பிடித்துகொண்டேன். எனக்குள் இருந்த பயம் அகன்று “என்ன நடந்தாலும் ஈஸாவுக்காக(இயேசுவுக்காக) வாழ்வேன்” என்ற உறுதி எனக்குள் ஏற்பட்டது.
இப்படிதான் இறைவன் சத்தியத்தை எனக்கு காண்பித்தார். கடந்த 14 வருடங்களாக இறைவன் தனது ரஹ்மத்தால் என்னை வழிநடாத்தி வருகிறார். துன்பங்கள துயரங்களை கடந்து செல்லும் போதும் அவர் வாக்குமாறாமல் என்னோடு இருந்து எனது பாடுகளை அவர் சுமக்கிறார். எனது எதிர்காலத்தை குறித்த நம்பிக்கை மட்டுமல்ல மரணத்துக்கு பின் சுவனபதியை(பரலோகத்தை) அடைவேன் என்ற நிச்சயத்தையும் தந்துள்ளார்

பால் யாங்கி சோ சொன்ன சம்பவம்

போதகர் பால் யாங்கி சோ அவர்கள் கீழ்கண்டசம்பவத்தை கூறினார்கள். கொரியாவில் நடந்த போரில் 500 கிறிஸ்தவ போதகர்களை பிடித்து, உடனே அவர்களை துப்பாக்கியால் சுட்டு  வீழ்த்தினார்கள். 2000 தேவாலயங்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டது. மற்றும் கொரியாவில் Inchon என்னுமிடத்தில் கம்யூனிச தலைவர்கள் ஒரு போதகரை அவரையும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை குடும்பத்தோடு பிடித்து, அவர்களை ஒரு பெரிய குழியில் வைத்து, அந்த போதகரிடம், ‘இத்தனை வருடங்கள் நீர் இந்த மக்களை வேதாகமம் என்னும் புத்தகத்தை வைத்து, அநேக மூடநம்பிக்கைகளுக்குள் நடத்தி இருக்கிறீர். இப்போது இந்த மக்களின் முன் நீர் கிறிஸ்துவை மறுதலிக்க வேண்டும். மறுதலித்தால் நீரும் உம்முடையகுடும்பமும் தப்புவிக்கப்படுவீர்கள். இல்லையென்றால், முதலாவது உம்முடைய பிள்ளைகளையும் பின் உங்களையும் இந்த குழியில் உயிரோடு புதைத்து விடுவோம்’ என்று பயமுறுத்தினர்.


அதை கேட்ட பிள்ளைகள், ‘அப்பா, அப்பா எங்களை நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் சாவதை விரும்பவில்லை’ என்று கதற ஆரம்பித்தனர். அதை கேட்ட தகப்பனின் இருதயம் கரைந்தது. தன் இரு கைகளையும் தூக்கி, ‘நான் என் கிறிஸ்தவ நம்பிக்கையை .. என்று ஆரம்பித்தபோது,   பக்கத்திலிருந்த அவரது மனைவி, ‘அப்பா, நீங்கள் கர்த்தரை மறுதலிக்காதீர்கள்!’ என்று கூறிவிட்டு, பிள்ளைகளிடம், ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், இன்று இரவு நாம் அனைவரும் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் விருந்து சாப்பிடப் போகிறோம்’ என்று கூறி உற்சாகப்படுத்தினார்கள். பின், ‘In the sweet by and by’ என்னும் பாடலை பாட ஆரம்பித்தார்கள். போதகரும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து பாட, கம்யூனிசவாதிகள் அவர்கள் மேல் மண்ணை போட ஆரம்பித்தார்கள். மண் அவர்களுடைய கழுத்தளவு வரும்வரை அவர்கள் பாடினார்கள். அப்படியே அவர்கள் குடும்பமாக மறுமைக்கு கடந்து சென்றார்கள். அந்நேரத்தில் தேவன் அவர்களை விடுவிக்கவில்லை. ஆனால், அதை பார்த்து கொண்டிருந்த அத்தனை பேரும் அவர்கள் முகத்திலிருந்த ஒளியை கண்டு கிறிஸ்தவர்களாக மாறினர்.

Wednesday, March 20, 2013

அன்னை தெரசா - குடிசை சகோதரி

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

ஒரு முறை போப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும் அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறகட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இது போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலமிட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார்.
தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை ‘குடிசை சகோதரி’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

சிலுவை அன்பினால் மாத்திரமே இணையும்

கம்யூனிச தேசங்களுக்கும் அமெரிக்க தேசத்திற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அமெரிக்க தேசத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் ருமேனியா தேசத்தில் வெளியரங்கமாய் சுவிசேஷம் அறிவிக்கத்தடை இருந்தும் இரகசியமாய் சில ஊழியங்கள் செய்யும்படி சென்றிருந்தார். ஒருநாள், கடும் குளிரிலே ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தெரு ஒன்றில் சென்று கொண்டிருந்தார். மக்கள் யாவரும் யாரையும் கண்டு கொள்ளாமல் அவரவர் தங்கள் வேலையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதனின் விசில் சத்தம் அவரை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, திடுக்கிட செய்தது. ஏனெனில் அவர் ‘மா பரிகாரியான இயேசு’ என்ற பாமாலை பாடலை விசில் அடித்தபடி அந்த மனிதன் சென்று கொண்டிருநதார்.
.
கிறிஸ்துவை மறுதலிக்கும் தேசத்தில் இப்படி ஒரு நபரா என மகிழ்ச்சியடைந்து, அம்மனிதனுக்கு பின்பாக இவ்வூழியரும் பின் தொடர்ந்தார். யாரும் பார்த்து விட்டால் பிரச்சனை வரலாம் என்பதால் சிறுது தூரம் அமைதியாய் சென்ற அவர், பின் அந்த பாட்டை இவரும் விசில் அடிக்க ஆரம்பித்தார். அந்த பாட்டைக் கேட்டவுடன் அந்த ருமேனியர் பிரகாசமுள்ள முகத்தோடு திரும்பி வந்து, ஊழியரை கட்டிப்பிடித்து கொண்டு தனது தாய் மொழியில் ஏதோதோ சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் தனது மொழி அவருக்கு புரியவில்லை என்பதை அறிந்து தனது இருதயத்தின் மேல் கைகளை வைத்தார். பின் கைகளை வானத்திற்கு நேராய் உயர்த்தினார். சிலுவை அடையாளத்தை வரைந்து காண்பித்தார். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியோடு மொழி, கலாச்சாரம், அரசியல் பின்னணி என ஏதோதோ வித்தியாசத்தில் வாழும் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லா அவ்விருவரும் ஒரு சில நிமிடத்தில் இணைக்கப்பட்டனர். காரணம் என்ன? கிறிஸ்துவின் இரட்சிப்பின் சந்தோஷமே!

மூலைக்கு தலைக்கல்

1968-ம் வருடத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ்சர்லாந்து நாட்டின் கைகெடிகாரங்கள் (Wrist Watches) மிகவும் புகழ் பெற்றவையாயிருந்தன. உலக பங்கு சந்தையில், 68 சதவீதமும் பங்கு விற்பனையிலும் 80 சதவீதம் லாபத்திலும் போய் கொண்டிருந்தது. ஆனால் பத்து வருடத்திற்கு பின், பங்கு விற்பனையில் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் அந்நாட்டின் 65,000 கடிகாரம் செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்தனர்.
.
இன்று கைகடிகாரம் செய்வதிலும், விற்பனையிலும் முதலிடம் வகிப்பவர்கள் ஜப்பானியர்களாவர்கள். 1968-ம் வருடம் வரைக்கும் அவர்களுடைய கடிகாரங்கள் அத்தனை புகழ் பெறவில்லை. பின் எப்படி அவர்கள், கடிகாரங்கள் புகழ்பெற்றன? அவர்கள் தாங்கள் செய்த கடிகாரங்களில் மின்னணுக்களால், படிகத்தை (Electronic Quartz) வைத்து உருவாக்க ஆரம்பித்தனர். அவை மற்ற கடிகாரங்களைவிட துல்லியமானதாக, ஒரு சிறிய பாட்டரி மூலம் வருடக்கணக்கில் ஓடும் கடிகாரங்களை உற்பத்தி செய்தனர்.
.
இந்த மின்னணுக்களால் படிகத்தை வைத்து, கடிகாரங்களை முதலில் உருவாக்கினவர்கள் யார் தெரியுமா? சுவிஸ் மக்களே! அதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் கம்பெனியிடம் முதலில் காண்பித்து விளக்கியபோது, அது ஒரு போதும் வேலை செய்யாது என்று கடிகார உற்பத்தியாளர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆகவே சோர்வடைந்த ஆராய்ச்சியாளர்கள், அதை உலக அளவில் நடைபெற்ற கடிகாரங்களின் கருத்தரங்கில் அதை வைத்த போது, ஜப்பானியர்கள் அதை உடனே ஏற்றுக் கொண்டு அதன்படி செய்ய ஆரம்பித்தனர். அதனால், இன்று வரை அவர்களுடைய கடிகாரங்கள் உலக பிரசித்த பெற்று விளங்குகின்றன.

உண்மையான ஊழியன்

ரோட்டின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருபபு தைத்துக் கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக் கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்தபிறகு, அவனது தாயை கவனிக்க அது கைக்கொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ் போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய் நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான்.
.
எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், 'மிகவும் சிரத்தை

எடுத்து, கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும்
மற்றவர்களிடம இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் காணப்படுகிறதே அது
என்ன?' என்று கேட்டார். சிறுவன் மகிழ்ச்சியோடு, 'ஐயா நான் ஒரு
கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்துவின் குணநலன்களை என் வாழ்விலும்
செயல்படுத்த பிரயாசப்படுபவன், அதோடு ஒவ்வொருவருடைய
காலணிகளை நான் பழுதுபார்க்கும்போதும், இயேசுராஜா என்னிடம் வந்து
என் காலணிகளுக்கு பாலிஷ் போடு, என்று சொன்னால் நான் எப்படி செய்து
கொடுப்பேனோ அப்படித்தான் உங்கள் ஒவ்வொருவருக்கும் செய்கிறேன்'
என்று கூறினான். அந்த நபர் இவனது வார்த்தையின் மூலம் கிறிஸ்துவைக்
குறித்த அறிந்து வேதத்தை வாசித்து, கர்த்தரை தன் சொந்த இரட்சகராக
ஏற்றுக் கொண்டார்.

Sunday, March 17, 2013

கிறிஸ்தவ விசுவாசத்தின் மேன்மை

Title Link - http://www.youtube.com/watch?v=kY-l551hK0I

மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே என்ற வெற்றி முழக்கங்கள் கேட்பது கிறிஸ்துவின் அடியார்களிடம் மட்டுமே.ஆம் ஆதி கிறிஸ்தவ சபை அப்படித்தான் அஸ்திபாரப்படுத்தப்பட்டது.கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள அன்புக்கும்,விசுவாசத்துக்கும் எதிராக உலகின் எந்த ஒரு சக்திக்கும் நிற்கமுடியவில்லை.நாமும் ஆண்டவருக்காக நம்மை அர்பணிப்போமாக.