Saturday, December 22, 2012

பொறாமை என்னும் எலும்புருக்கி

சிற்பி ஒருவன் மிக சிறப்பானச் சிலை ஒன்றை செய்து மக்களின் பார்வைக்காக வைத்தான். அதன் அருகில் ஒரு கரும்பலகையையும் வைத்து பார்வையாளர்களின் கருத்தை எழுதும்படி குறித்திருந்தான். பார்த்தவர்கள் அனைவரும் அதன் கலை நுணுக்கத்தை வியந்து பாராட்டி, சிற்பியை புகழ்ந்து எழுதினார்கள். ஆனால் அங்கே இன்னொரு சிற்பி ஒருவன் வந்தான். மனதில் நிரம்பியிருந்த பொறாமை அவனுடைய கண்களை குறை கண்டுபிடிக்க ஏவியது. எனவே பல மணி நேரங்கள் சிலையை மிக கவனமாக சோதித்தான். இறுதியாக அதில் ஒரு குறையை கண்டுபிடித்தான். அந்த சிறிய குறையை பெரிய எழுத்துக்களில் அந்த கரும்பலகையில் எழுதினான். அதன் பின்னர் அங்கே வந்தவர்களெல்லாம் அந்த குறையையே கவனமாக பார்த்தனர். சிலையின் அழகு அவர்களுக்கு தெரியவில்லை.

சாது சுந்தர் சிங் தாழ்மை

ஒருமுறை சாது சுந்தர் சிங் இங்கிலாந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சகோதரி, ‘உமக்கென்ன, நீர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின், உமக்கு என்ன வரவேற்பு, என்ன புகழ்!’ என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அவர் சொன்னார், 'இயேசுகிறிஸ்து ஏறி சென்ற கழுதையாகவே நான் என்னை நினைக்கிறேன். அன்று கிறிஸ்துவை சுமந்த கழுதை, தனக்குதான் மக்கள் வரவேற்பளிக்கிறார்கள். தனக்குதான் மகிமை செலுத்துகிறார்கள் என்று நினைத்திருந்தால் அது எத்தனை முட்டாள்தனமோ அதுப் போலத்தான், இப்போது கிடைக்கிற புகழ் எல்லாம் எனக்குத்தான் என்று நான் நினைத்தால் நானும் ஒரு முட்டாளாகத்தான் இருப்பேன். கிறிஸ்துவை நான் சுமப்பதால்தான் எனக்கு இந்த புகழ் எல்லாம், கிறிஸ்து எனக்குள் இல்லாவிட்டால், நான் வெறும் கழுதைதான்' என்று கூறினாராம்! என்ன ஒரு தாழ்மை பாருங்கள்!

தாழ்மையுள்ள பாத்திரங்களையே கர்த்தர் தேடுகிறார்

மிகச்சிறந்த படிப்பாளரான Booker T. Washington என்பவர் Hampton Institute in Virginia என்னும்  இன்ஸ்டியூட்டியில் சேருவதற்காக இன்டர்வியூவிற்காக சென்றிருந்தார். அந்த இன்ஸ்டிடியூட்  மிகவும் பெயர் பெற்றதாகும். அதில் இடம் கிடைப்பது மிகவும் அரிது, அப்போது அங்கு வந்த  தலைமை ஆசிரியை அங்கிருந்த வகுப்பறையை கழுவ சொல்லிவிட்டு, அங்கிருந்த பெஞ்சுகளையும்  துடைக்க சொல்லி விட்டு போனார்கள். அவர் பாடம் சம்பந்தமான கேள்வியை கேட்பார்கள் என  நினைத்தால் இந்த வேலையை சொல்லுகிறார்களே என்று அவருக்கு கோபமிருந்தாலும்  வேறுவழியில்லாமல், அதை துடைக்க ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தலைமை  ஆசிரியை எல்லாவற்றையும் தனது கைக்குட்டையால் துடைத்து பார்த்து, ‘சிறப்பான காரியத்தை  செய்தாய்’ என்று அவரை பாராட்டி அவருக்கு அங்கு ஒரு இடத்தை கொடுத்தார்களாம்.  அது தன் வாழ்க்கையையே மாற்றிற்று என அவர் தனது புத்தகத்தில் எழுதினார்.

அதிசய​ வேதாகமம் - ஏழு என்கிற எண்

சமீபத்தில் ஒரு விஞ்ஞானி ஒரு மனிதன் தன்னிடம் காண்பிக்கப்பட்ட எந்த ஒரு பட்டியலிலும் ஏழு காரியங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார். மற்றொரு விஞ்ஞானி 'அதனால்தான்ஏழு என்கிற காரியம் நாம் இருக்கிற இந்த உலகில் அடிக்கடி காணப்படுகிறது. உதாரணமாக ஏழு உலக அதிசயங்கள் ஏழு ஸ்வரங்கள் ஏழு கடல்கள் கொல்லும் கொடிய பாவங்கள் ஏழுவாரத்தில் நாட்கள் ஏழு வானவில்லின் நிறங்கள் ஏழு.'  என்று கூறினார்.

அது சரியென்றாலும்வேதத்தில் ஏழு என்கிற எண் மிகவும் விசேஷித்தாய் இருக்கிறது. அதை குறித்து ஆராய்ந்தால் மிகவும் அற்புதமான ஒரு எண்ணாக இந்த ஏழு திகழ்கிறது. இந்த எண் வேறு எந்த எண்களைக் காட்டிலும் அதிகமான முறை உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏழு என்ற எண்ணும்அதின் பெருக்கு தொகையான எண்களுமே அதிகமாக வேதத்தில் காணப்படுகிறது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.  ஏழு என்ற வார்த்தை ஆங்கிலத்தில் 287 தடவை வருகிறதுஅதாவது 7x41 (Seven) ஏழாவது என்ற வார்த்தை 98 தடவைஅதாவது 7x14 (Seventh) ஏழு முறை என்ற வார்த்தை 7 தடவை வருகிறது (Seven Fold) எழுபது என்ற வார்த்தை 56 தடவை வருகிறது அதாவது 7 x 8.

தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்து அந்த நாளை பரிசுத்தபடுத்தினார். ஆபிரகாமுக்கு ஏழு ஆசீர்வாதங்கள் ஆதியாகமம் 12:2-3-ல் கூறப்படுகிறது. பிரதான ஆசாரியன் ஏழு முறை பலியின் இரத்தத்தையும்அபிஷேக எண்ணெயையும் கர்த்தருக்கு முன்பாக கிருபாசனத்தின் மேல் தெளிக்க வேண்டும். யோசுவா எரிகோவை சுற்றி வந்தபோது ஏழு ஆசாரியர்கள்உடன்படிக்கை பெட்டியை சுமந்தபடி ஏழு எக்காளங்களை முழக்கிஏழாவது நாள்ஏழு தடவை சுற்றி வந்து ஜெயத்தை சுதந்தரித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும்ஏழு பொன் குத்து விளக்குகள்ஏழு நட்சத்திரங்கள்ஏழு முத்திரைகள் ஏழு எக்காளங்கள்ஏழு கண்கள்ஏழு ஆவிகள்ஏழு கோபகலசங்கள்ஏழு இடிமுழக்கங்கள்என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சங்கீதங்களில் 126 சங்கீதங்கள் தலைப்புகளோடு உள்ளன. (7x18) அவைகளில் ஏழு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.       தாவீது (56 சங்கீதங்கள் எழுதப்பட்டுள்ளன)
2.       கோராகின் புத்திரர் (11)
3.       ஆசாப் (12)
4.       ஏமான் (1)   (சங்கீதம் 88)
5.       ஏத்தான் (1)  (சங்கீதம் 89)
6.       மோசே (1)   (சங்கீதம் 90)
7.       சாலமோன் (1) (சங்கீதம் 72)

புதிய ஏற்பாட்டில் ஏழு சங்கீதங்களின் வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கீதம் 69 ன் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ஏழு தடவை வருகின்றன.
யோவான் சுவிசேஷத்தில் ஏழு அற்புதங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
 
மத்தேயு சுவிசேஷம் 13-ம் அதிகாரத்தில் ஏழு உவமைகள் கூறப்பட்டிருக்கின்றது. இன்னும் எத்தனையோ வசனங்கள் ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த முறை நாம் வேதம் வாசிக்கும்போது ஏழு என்ற எண் வரும்போது நிறுத்தி தேவன் இந்த இடத்தில் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார்?  என்று யோசித்து அவருடைய ஞானத்திற்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஞானம் அளவற்றது. அவருடைய வார்த்தைகளில்தான் எத்தனை பொருள்கள் அடங்கியிருக்கின்றன! இந்த அற்புத தேவனை தெய்வமாக கொண்டிருக்கும் நாம் எவ்வளவு பாக்கியவான்கள்! ஆமென் அல்லேலூயா!

யோனத்தானோடு இருந்த வாலிபன் - Bro. Augustin Jebakumar

யோனத்தானை குறித்து அல்ல, யோனத்தானோடு கூட இருந்த வாலிபனை குறித்தே எழுத விரும்புகிறேன். இந்த வாலிபனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்று பிச்சைக்காரனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாகமானின் குஷ்டரோகம் நீங்க காரணமாயிருந்த சிறுமியின் பெயர் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. சமாரியாவிலுள்ள ஒரு பெண் முழு பட்டணத்தையும் இயேசுவினிடத்தில் கொண்டு வந்தாள். ஆனால் அவளது பெயரும் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஐந்து அப்பமும் இரண்டு மீனும் வைத்திருந்த ஒரு பையன் ஐயாயிரம் பேர் போஷிக்கப்பட காரணமாயிருந்தான். அவனது பெயரும் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. நான்கு ஆசாரியர்களை நோக்கி, யோசுவா 'நீங்கள் தண்ணீரிலே கால் வைக்கும்போது தண்ணீர் இரண்டாக பிளக்கும்' என்று சொன்னான் அந்த நான்கு பேரின் பெயரும் வேதத்தில் எழுதப்படவில்லை. இந்த ஆயுததாரியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. தன்னை எல்லாரும் பார்க்க வேண்டும, விசாரிக்க வேண்டும் எல்லாரும் அடையாளம் கண்டு கொளள் வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு.
யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி, 'விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த தாணைத்ததுக்கு போவோம் வா' என்று சொன்னபோது, 'இதோ உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடே கூட வருகிறேன' என அந்த வாலிபன் ஆயத்தமாயிருந்தான். தேவனோடு கூட இணைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். திறமைகள் இல்லாதவர்களாயிருக்கலாம். நாம் பெரிய குடுமப்ததை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல, தேவனுக்கு நம்மை கையளித்திருக்கின்றோமா என்பதே முக்கியம். 'யுத்தநான் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும், யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது'. - (1சாமுவேல் 13:22).
பெலிஸ்தியரோடு யுத்தம் செய்ய ஜனங்கள் வந்திருந்தார்கள் என்ற போதிலும், அவர்களது கைகளில் ஆயுதங்கள் இல்லை, இந்த சூழ்நிலையினை அந்த வாலிபன் பொருட்படுத்தவில்லை. மற்றவர்களிடத்தில் என்ன இருக்கின்றது என்பதையும் கவனிக்கவில்லை. 'கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செயவார். அநேகம் பேரை கொண்டாகிலும், கொஞ்சம் பேரை கொண்டாகிலும், ரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை' என்று யோனத்தான் சொன்ன வார்த்தைகள் இந்த வாலிபனது உள்ளத்தில் விசுவாசத்தை வர்த்திக்க பண்ணியது. 'நாம் சுற்றிலுமுள்ள நிலையினை பாராமல், கர்த்தரையே நோக்கி பார்த்தால் நம்மால் எல்லாம் கூடும். நமக்காக கர்த்தர் காரியத்தினை செய்வார்' என்ற விசுவாசத்துடனே யோனத்தானுடன் அவன் புறப்பட்டு சென்றான். எந்தவித பாதுகாப்பும் இல்லாமலிருந்தாலும் ஜனங்களுக்காக யுத்த களத்தில் நிற்பதற்கு அந்த வாலிபன் ஆயத்தமாயிருந்தான்.
ஒருவரது கையிலும் ஒன்றுமில்லாதிருக்கும்போதும், பாளையத்திற்குள், தாணையத்திற்குள் பயங்கரமாயிருக்கும் இடத்திற்கு கூப்பிடுகின்றீரே என அவன் சொல்லாமல், இதோ ஆயத்தம் என யோனத்தானுடன் புறப்பட்டான். விசுவாசம் ஒரு போதும் கையையும், பையையும் பார்க்காது. தன்னோடு தேவன் இருக்கிறாரா என்பதை மாத்திரமே அது சோதித்தறியும். அன்றன்றுள்ள அப்பத்தை நமக்கு தருவதற்கு தேவன் நல்லவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விசுவாசிக்கிறவன் பதறான்.
யோனத்தானின் கையில் பட்டயமிருக்கிறது, யோனத்தான் வெட்டி கொண்டே போவான். 'என்னை யாராவது நெருங்கினால் நான் என்ன செய்வேன், என்னை காப்பாற்றக்கூட என்னிடத்தில் பட்டயம் இல்லையே' என்ற பயம் அவனிடத்தில் இல்லை. நமது கண்கள் நமது பெலவீனத்தை பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவரது பெலத்தை பார்க்கட்டும். இரண்டு நாட்கள் ந்னறாக ஜெபம் செய்கின்றோம்; ஆனால் தொடர்ச்சியாக அவைகளில் நிலைத்திருக்க முடியவில்லையே, சூழ்நிலைகள் என்னை வீழ்த்திவிடுகின்றதே என்று நினைக்கிறீர்களோ, நமது சுற்றுப்புறத்தையோ, நமது பெலவீனங்களையோ நாம் பாராமல், பெலமுள்ள அவரையே நாம் நோக்கி பார்த்தால், நாம் வீழ்ந்து போவதில்லை. உலகத்தின் இச்சைகளுக்கும் பெலவீனங்களுக்கும் நம்மை விடுதலையாக்கி, தமது ஆயுதமாக நம்மை பயன்படுத்த தேவன் போதுமானவர்.
கர்த்தருக்கென்று தன்னை ஒப்புகொடுத்தபடியால், எந்த ஆபத்தான வழியில் செல்லவும் இந்த வாலிபன் பயப்படவில்லை. இவர்களை பொறுத்தே தேவ ஜனத்திற்கு வெற்றி, விடுதலை, சத்துருவின் கையிலிருந்து விடுதலையாக்க முடியும் என்பதை அறிந்த இந்த வாலிபன் ஆபத்தான் வழியில் செல்லவும், தலைவனாகிய யோனத்தானுக்கு பின்னாக ஏறி செல்வதற்கும் அவன் அஞ்சவில்லை. என்னிடத்தில் திறமைகள் இல்லையே, நான் தேவனுக்கு எப்படி பயன்பட முடியும் என்று நினைத்து கொண்டிருக்கினறோமோ? தேவன் உங்களை கொண்டே நமது தேசத்தில் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை மறந்து விடக்கூடாது. நாம் அவருக்காக அடியெடுத்து வைத்தால் நம்மூலம் தேசத்தை அசைப்பதற்கு அவர் ஆயத்தமாயிருக்கின்றார். ஆமென் அல்லேலூயா! - Bro. Augustin Jebakumar

Friday, December 21, 2012

ஜாமக்காரராய் நாம்.....

இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
- (வெளிப்படுத்தின விசேஷம் 16:15).
இந்த வசனத்திற்கு அநேக வியாக்கியானங்கள் இருக்கிற போதிலும், இஸ்ரவேலில் வழங்கப்பட்டு வந்த காரியம் இந்த வசனத்தின் அர்த்தத்திற்கு ஒத்துப் போவதால், இதை இங்கே எழுதுகிறேன். எருசலேமில் தேவாலயம் இருந்த நாட்களில் லேவியர்கள் அந்த ஆலயத்தை பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவர்களது வேலையாகும். ஆகையால் அவர்களின் தலைவன், முழு இரவும் பாதுகாப்பு ஒழுங்காக மற்றவர்கள் செய்கிறார்களா என்று கண்காணிப்பது வழக்கம். அதை அழுக்காகாதபடிக்கு அதைக் காக்க வேண்டியது, அங்கு ஜாமக்கார லேவியனின் பொறுப்பில் இருந்து வந்தது. எந்த ஜாமக்காரனாவது இரவில் களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டால், அவர்களின் தலைவன் வந்து கண்காணிக்கும் நேரத்தில், அவனை தூங்குகிறவனாக கண்டால், அந்தக் ஜாமக்காரனை அடித்து, அவனுடைய துணிகளை உரிந்து, அவற்றை நெருப்பில் போட்டுவிடுவான். அப்போது அந்தக் காவல்காரன் துணியில்லாமல், நிருவாணமாகத்தான் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதைத்தான் உவமையாக இயேசுகிறிஸ்து தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றுக் கூறிகிறார்.
.
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப் போகிறார். அதற்கான அடையாளங்கள் வெகு விரைவாக நடந்தேறி வருகின்றன. இதோ திருடனைப் போல் வருகிறேன் என்றுச் சொன்னவர் சீக்கிரம் வந்துவிடுவார். ஆனால் நாம் ஆயத்தமா?

கணவனும் மனைவியும் - ஒரே மாம்சம்

ஒரு கணவனும் மனைவியும் திருமண ஆலோசகரிடம் தங்கள் திருமணத்தின் பிரச்சனைகளைக் குறித்து ஆலோசனைப் பெற சென்றிருந்தனர். அவரிடம் அமர்ந்த மாத்திரத்தில், இருவரும் ஒரே நேரத்தில் ஒருவர் மேல் இருக்கும் குறைபாடுகளைக் குறித்து, விடாமல் பேச ஆரம்பித்தனர். ஒருவர் மேல் ஒருவர் குற்றம்சாட்டி, பேசிக் கொண்டேஇருந்தனர். அதை பொறுமையோடுக் கேட்டுக் கொண்டிருந்த ஆலோசகர், முடிவில், ‘இப்போது நீங்கள் மற்றவர்களிடம் கண்ட நல்ல குணங்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்றார். இருவரும் மௌனமாக இருந்தனர்.
.
சிறிது நேரம் கழித்து அவர் இருவரிடமும் ஒரு வெள்ளைத்தாளையும் ஒரு பேனாவையும் கொடுத்து, ‘ஏதாவது ஒரு சில நல்ல குணங்களையாவது இந்தத் தாளில் எழுதுங்கள்’ என்றுக் கூறினார். அப்போதும் இருவரும் பேசாமல் இருந்தனர். வெகு நேரம் கழித்து, கணவன் அந்தத் தாளில் ஏதோ எழுத ஆரம்பித்தார். உடனே மனைவியும் வீறாப்பாக, வேகமாக எதையோ எழுத ஆரம்பித்தாள். கடைசியில் இருவரும் எழுதுவதை நிறுத்தினர். மனைவி தான் எழுதிய தாளை அந்த ஆலோசகரிடம் தள்ளினாள். அப்போது அவர், ‘இல்லை, நீங்களே உங்கள் கணவரிடம் கொடுங்கள்’ என்றார். அரைமனதுடன் அந்தத்தாளை கணவரிடம், பாதி கையை நீட்டிக் கொடுத்தாள். கணவரும் தன் தாளை அவளிடம் கொடுத்தார்.
.
இருவரும் வாசிக்க ஆரம்பித்தனர். அப்போது மனைவியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அந்த தாளை தன் இருதயத்தோடு வைத்து, அழ ஆரம்பித்தாள். தன் கணவன் தன்னைப் பற்றி இந்த அளவு நல்லதாக அறிந்து வைத்திருக்கிறாரே என்று நினைத்து, அவளால தாங்க முடியவில்லை. அந்த சூழ்நிலையின் இறுக்கம் மாற ஆரம்பித்தது. இருவரும் சந்தோஷமாக அந்த இடத்தை விட்டுச் சென்றனர். பாராட்டுதல் எத்தனையோ புண்களை ஆற்றிவிடும்.
.
திருமண வாழ்க்கை என்பது, ஏதோ இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை எனபதல்ல, இருவரும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையாகும். ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ - (ஆதியாகமம் 2: 24).

சகோ. பக்தசிங் - தேவன் அழைத்த விதம்

சகோ. பக்தசிங் என்ற தேவ ஊழியரை பற்றி நம்மில் அநேகர் அறிந்திருக்கலாம். அவர் ஆசியாவிலுள்ள அளவற்ற மக்களுக்கு ஆவிக்குரிய தகப்பனாகவும், உலகின் பல பாகங்களிலுமுள்ள விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய ஒரு முன்மாதியாகவும், விளங்கினார். வேதத்தை நேசித்து, கர்த்தருக்கு வைராக்கியமாய் ஊழியஞ்செய்யும் ஒரு கூட்ட ஊழியர்களை உருவாக்கிய பரிசுத்தவான் அவர். தேவன் அவரை ஊழியத்திற்கு அழைத்த விதத்தை காண்போம்.
.
1930 - ஆம் அண்டு இவர் இரட்சிக்கப்பட்டடார். இரட்சிக்கப்பட்ட புதிதில் கனடா நாட்டில் வின்னிபெக் என்ற நகரிலுள்ள ஒரு ஆராதனையில் கலந்து கொண்டு வெளியேறிய சமயத்தில், முன்பின் தெரியாத ஒருவர் அவசரமாக ஓடி வந்து, அவருடைய கரத்தை கெட்டியாக பிடித்து கொண்டார். 'சகோதரனே, நீர் ஏன் இந்தியாவிற்கு திரும்பி சென்று அங்கே சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது?' என்று கேட்டார். அதற்கு பக்தசிங், 'நான் ஒரு பொறியாளர், பொறியியலை கற்பதற்காக பல ஆண்டுகள் பயின்றிருக்கிறேன், மேலும் எனக்கு கொன்னலும் திக்கு வாயும் உண்டு. ஒரு சிறிய கூட்டத்திற்கு முன்பாக கூட நின்று பேசுவதற்கு என்னால் முடியாது. மேடை பயமும், சபை கூச்சமும் நிறைந்தவன், என்னை போல ஒரு தொடை நடுங்கியும், திக்குவாயும் உடையவன் எபப்டி பிரசங்கியாக முடியும்?' என்று கூறினார். அதற்கு அவர் எந்த பதிலும் பேசவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் இதே வார்த்தைகள் அவர் இருதய செவியில் தொனித்து கொண்டேயிருந்தது.
.
இப்படி கர்த்தருக்கும் பக்தசிங் அவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் தர்க்கமும், வாக்குவாதமும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு சாக்கு போக்கை சொல்லுவார். 'ஆண்டவரே என்னுடைய பணத்தை எல்லாம் உமக்கு அர்ப்பணிக்கிறேன், என் சம்பாத்தியத்தின் மூலமாக நான் இன்னும் அநேக ஊழியர்களை ஆதரிக்கிறேன், ஆனால் தயவு செய்து என்னை மாத்திரம் பிரசங்கியாக அழைக்க வேண்டாம்' என்று ஜெபத்தில் மன்றாடினார். ஆனால் தேவன் கூறிய பதில் என்ன தெரியுமா? 'உன் பணம் எனக்கு ஒன்றும் வேண்டாம், நீ தான் எனக்கு வேண்டும்' என்றார். பின் ஒரு வழியாக தன்னை தேவப்பணிக்கு அர்ப்பணித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, 'நம்முடைய தேவன் நம்மை ஏன் தெரிந்து கொள்கிறார் என்பது விளங்காத ஒரு புதிராகவே உள்ளது. அவருக்கு நம்மீது உரிமையிருப்பதால் அப்படி செய்கிறார். நாம் நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்பு கொடுத்து, அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றும்போது அவர் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்கிற அவருடைய வல்லமையையும், மகிமையையும் அதிகமான அளவில் அறிந்து கொள்வோம்' என்றார்.
ஓரு பக்தசிங் அநேக இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக, கர்த்தருக்குள் வழிநடத்தின பரிசுத்தவானாக இருந்தது போல கர்த்தர் யாரை தெரிந்து கொள்கிறாரோ அவர்களை அவர் வல்லமையால் நிரப்பி, அவர்கள் மூலம் பெரிய காரியங்களை நிச்சயமாய் செய்கிறார். தேவன் உங்களை திட்டமும் தெளிவுமாய் அழைத்திருந்தால் சாக்கு போக்கு சொல்லாதபடி மனவிருப்பத்துடன் முன்வாருங்கள். கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார். ஆமென் அல்லேலூயா!