Tuesday, June 25, 2013

ஆண்டவர் என் சிநேகிதர்


ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.

அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து “எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.

“சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .

அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அரைமணி நேரத்தில் பணம் வந்தது.

பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
“நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து
கொண்டேன் டா” என்றான்.

இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.
இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்..

எனக்கு அருமையானவர்களே! நல்ல நண்பர்களை சேர்த்து வைப்பது எவ்வளவு நன்மையானது பார்த்தீர்களா? ஆனால், இந்த உலகையே உண்டாக்கிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு நண்பர் ஆவாரானால் நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலி தானே?

இது நடக்குமா? ஆண்டவர் என் சிநேகிதர் ஆக முடியுமா? என்று ஐயம் கொள்ள வேண்டாம். அவர் சொல்வதை நீங்களே கவனியுங்களேன்..

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்." - யோவான் 15:14

தேவனுடைய கட்டளைகளை கைக் கொண்டு நடந்தால் நீங்களும் தேவனை உங்கள் நண்பராக்கிக் கொள்ள முடியும்.

தேவனே நமது நண்பர் ஆகிவிட்டால் வாழ்வில் துன்பம் எது? எல்லாமே வெற்றி தான் !

கதம்பம் [இ-இதழ்]

வேடிக்கையான கதை


ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு தாயின் மூன்று குமாரர்கள் நன்கு படித்து, வீட்டை விட்டு வெளியே சென்று நன்கு சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருந்தார்கள்.

ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடி தங்கள் தாயாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருவரோடொருவர் சொல்லி கொண்டார்கள்.

அதன்படி மூத்தவன் 'நான் அம்மாவுக்கென்று ஒரு பெரிய வீட்டை கட்டியிருக்கிறேன். ஏசியெல்லாம் போட்டு, சூப்பரா கலக்கியிருக்கிறேன்' என்று கூறினான்.

அடுத்தவன், 'நான் அம்மாவுக்கென்று ஒரு மெர்சிடஸ் காரும், அவர்கள் ஹாயா உட்கார்ந்து போகத்தக்கதாக ஒரு டிரைவரையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்' என்று கூறினான்.

கடைசி மகன், 'உங்களுக்கெல்லாம் தெரியும், அம்மா பைபிளை அதிகமாக வாசிக்க பிரியப்படுவார்கள் என்று. ஆனால் அவர்களுடைய கண் சரியாக தெரியாததால் அவர்களால் சரியாக வாசிக்க முடிவதில்லை.

ஆகவே நான் ஒரு கிளியை வாங்கியிருக்கிறேன். அது பைபிளை அப்படியே சொல்லும். அதை பழக்குவிக்க 12 வருடங்கள் ஆனதாம். அம்மா சோபாவில் உட்கார்ந்து, எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொன்னால் போதும், அது பட்பட்டென்று சொல்லும்' என்று கூறினான்.

மூவரும் தங்கள் அன்னைக்கென்று தாங்கள் வாங்கிய பரிசுகளை பெருமிதமாக நினைத்தபடியே, அவற்றை தங்கள் அன்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
.
அவற்றை பெற்று கொண்ட அன்னையிடமிருந்து ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்தது.

அதன்படி, அவர்கள், மூத்தவனுக்கு 'நீ கொடுத்த வீடு மிகவும் பெரியது. நான் ஒரே ஒரு அறையில் தான் இருக்கிறேன். ஆனால் மற்ற இடம் முழுவதையும் நான் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது' என்று எழுதியிருந்தார்கள்.

அடுத்தவனுக்கு 'நான் எங்கே வெளியே போகிறேன், நீ எனக்கு அவ்வளவு பெரிய காரை அனுப்பி வைத்திருக்கிறாய்? நீ அனுப்பியிருக்கிற அந்த டிரைவர் அதற்கு மேல் மிகவும் மோசம், முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்' என்று எழுதியிருந்தார்கள்.

மூன்றாமவனுக்கு 'நீ மட்டும்தான் என்னுடைய தேவையையும், என்னை பற்றியும் நன்கு அறிந்திருக்கிறாய்! நீ அனுப்பியிருந்த கோழி; நன்றாக ருசியாக இருந்தது' என்று எழுதியிருந்தார்களே பார்க்கணும்!

இயேசுவை அறிவிக்க போகிறேன்


அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர்.

வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?' என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார்.

குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது.

தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே!

யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது.

ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை.

'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார்.

விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை

ஆனி ஆஸ்கவித் - நெல்லை

ஆனி ஆஸ்கவித் என்னும் ஆசிரியர் 1887ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தின் கல்லூரி ஒன்றில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது பிச்சை எடுப்பதற்காக வந்தான் பார்வையற்ற சிறுவன் ஒருவன்.

ஆனி அவனிடம், “தம்பி இது கல்வி வழங்கும் இடம்.

உணவு வழங்கும் இடமல்ல. எனவே நீ வேறு இடத்திற்குச் சென்று பிச்சையெடு” என்றார்கள்.
பையன் மறுமொழியாக, அப்படியெனில் எனக்குக் கல்வி கொடுங்கள். என்றான்.

அந்த கேள்வி ஆனியின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கேள்வியின் தாக்கத்தால் அவனுக்கு கல்வி புகட்ட ஆரம்பித்தார். அது பள்ளியாக வளர்ந்தது. பிற்காலத்தில் மிகப்பெரிய பார்வையற்றோர் பள்ளியாக உருவெடுத்தது.

சிறுவன் கேட்டான். பெற்றுக் கொண்டான்.

அழுகின்ற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் என்ற பழமொழி நம் ஊரில் உண்டு. அதற்காக அழாமல் இருக்கும் குழந்தை பட்டினியையே உண்டு வாழும் என்பதில்லை.

பசியாற தாமதம் நேரிடலாம்.
“நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே உங்களுக்கு என்ன தேவை என்பது வானகத் தந்தைக்குத் தெரியும்” என்று சொல்லும் இயேசு “கேளுங்கள் தரப்படும்” என்றும் சொல்வதில் உள்ள அர்த்தத்தைக் கண்டுணர வேண்டும்.

மோட்ச பிரயாணம் கதை


#மோட்சபிரயாணம்’ எனப்படும் உலகக் கிறிஸ்தவ இலக்கியத்தின் மூல ஆசிரியர் #ஜான்பனியன் - தம் வாழ்க்கையில் பல பயங்கர ஆபத்துகளிலிருந்து தப்பியது அதி அற்புத செயல்களாகும்.

ஒரு முறை ஊஸ் ஆற்றிலும், பிரிதொரு முறை கடலிலும் விழுந்து மூழ்கும்போது கடவுள் ஆச்சரியமாகத் தம் தூதனைக்கொண்டு அவரைக் காத்து பராமரித்திருக்கிறார்.

மோட்ச பிரயாணத்தில்வரும் முக்தி வழிப்பயணி ‘நம்பிக்கை இழப்பு’என்னும் உளையைப் பல இடங்களில் கடந்து இறுதியாக மரண ஆற்றை வென்று முக்திநகர் அடைவது போல பனியனின் வாழ்விலும் பயங்கர நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

#1645 -ம் ஆண்டு. அப்பொழுது அவருக்குப் பதினேழு வயது. யுத்த சேவையில் ஈடுபட்டிருந்தார். #லீசெஸ்றர் என்ற பட்டணத்தை முற்றுகை போட்டிருந்தனர்.

பாசறையைச் சுற்றிப் பாதுகாப்புக்கு நின்ற காவலர்களில் பனியனும் ஒருவன். ஒரு மணித்துளிக்கு முன்னால் பிரிதொரு காவலன் வந்து பனியனின் இடத்தில் நின்றுகொண்டு அவன் இடத்திற்கு இவனைப் போகச் செய்தான்.

இடம் மாறிக்கொண்ட மறு கணம் ஒரு குண்டு வந்து பணியனுக்குப் பதில் நின்ற போர்ச் சேவகனின் தலையில் விழுந்து அவன் மரணமானான்.

அன்று உயிர் தப்பிய பனியன் தீவிர பக்திமானாக மாறினார். மிகக் #கண்டிப்புடன் போதித்தார்.

அதன் விளைவு என்ன?

#திருச்சபையின் சட்டத்திற்கு மாறாகப் போதனை செய்தார்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் பெரி போர்ட் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் அவர் உள்ளத்தை சிறைப்படுத்த யாராலும் முடியவில்லை.

கனவு உலகில் சஞ்சரித்தார். கனக்கச்சிதக் கனவுக்கதை ஒன்றைப் படைத்தார். உலகக் கிறிஸ்தவ இலக்கியங்களில் முன்னணியில் நிற்கும் #PILGRIMS #PROGRESS எனப்படும் மோட்சபிரயாணத்தின் முதற் பாகம் 1678ல் வெளி வந்தது. 1793ல் தமிழாக்கம் பெற்றது.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பு கனம் சாமுவேல் பவுல் ஐயரவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட மோட்ச பிரயாணம் என்னும் மகா உன்னத உருவக இலக்கியத்தை தமிழில் படித்த நெல்லை நாட்டு இரு புலவர்களின் உள்ளம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.


மோட்ச பிரயாணம் கதையைக் கருவாகக் கொண்டு இரு பெரும் இலக்கியங்கள் படைத்தனர்.

1. #ஆழ்வார்தோப்பை சேர்ந்த கவி சுவிகரன் பாடிய முக்தி வழி அம்மான்(1887).
2. #பாளையங்கோட்டை புலவர் கிருஷ்ணர் பாடிய இரட்சண்ய யாத்திரிகம்(1891).

ஜான் பனியனை போன்றே இன்றளவும் உலகின் பல கோடி மக்களை பல ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் இறைமகன் இயேசுவை நெஞ்சத்தில் வைத்துத் துதிக்கிறோம்.

#kadambam #தமிழ்

Thursday, June 20, 2013

உற்சாகமாய் கொடுப்போம்

ஹேட்டி வயாட் என்ற ஒன்பது வயது சிறுமி ஞாயிறு பள்ளிக்கு மிக ஆவலோடு சென்றாள். அங்கு அவள் உட்காருவதற்கு இடம் இல்லாதபடியால் சோர்வுடன் வீட்டிற்கு சென்று விட்டாள். பின்பு இரண்டு ஆண்டுகளில் அவளுடைய சரீரத்தில் ஏற்பட்ட கொடிய வியாதியின் காரணமாக சுகவீனமாகி, படுத்த படுக்கையாகி, இறுதியில் மரித்து போனாள். சில நாட்களுக்கு பின் அவள் தலையணையின் அடியில் ஒரு கவருக்குள் 57 சென்ட் பணம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் 'இந்த பணத்தை ஞாயிறு பள்ளி சிறுவர்கள் அதிக அளவில் உட்கார வசதியாக, நமது ஆலயத்தை பெரியதாக கட்ட இந்த காணிக்கையை உபயோகப்படுத்துங்கள்' என்று எழுதியிருந்தது.
.
சிறுமியின் இச்செயலை சபை ஆராதனையில் போதகர் கூறியபோது சபையார் மனதுருகினர். அதை தொடர்ந்து தேவனுக்கு கொடுக்க வேண்டுமென்ற தீவிர வாஞ்சை ஒவ்வொருவர் இருதயத்திலும் உண்டானது. அனைவரும் மனஉற்சாகமாய் காணிக்கை கொடுத்தார்கள். அந்த காணிக்கையை கொண்டு, பிலதெல்பியா என்னும் இடத்தில் 3,300 பேர் அமர்ந்து தேவனை ஆராதிக்கும் சபையும், அதனுடன் 1400 மாணவர்கள வேதாகம கல்வி பயிலும் பெரிய கல்லூரியும் கட்டப்பட்டது. அந்த சிறுபெண் கொடுத்த 57 சென்ட் பணம் எவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பார்த்தீர்களா?
.
அதுபோல வேதத்தில் ஒரு சிறுபையன் கொடுத்த 5 அப்பமும், இரண்டு மீனும் 5000 பேருக்கு அதிகமானோர் திருப்தியாய் சாப்பிட போதுமானதாய் இருந்தது. நாம் காணிக்கை கொடுப்பது எப்படி இருக்கிறது?
.
வருமானத்தில் பத்தில் ஒன்றை தசமபாகமாக கொடுக்க வேண்டியது வேதத்தின் சட்டம். அதை ஒழுங்காக கொடுக்கிறோமா? சிலர் இது பழைய ஏற்பாட்டு கட்டளை என்று கூறினாலும், இயேசுகிறிஸ்து 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே' (மத்தேயு 23:23) என்று கூறுகிறார். தசம பாகம் கொடுக்க வேண்டுமென்பது கட்டாயமாயிருந்தாலும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் அதை விட அதிகமாய் கொடுக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

பூரண வளர்ச்சி

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டை சேர்ந்த திமான்தஸ் (Timanthes) என்ற வாலிபன் மிகச்சிறந்த ஓவியர் ஒருவரிடம் ஓவியம் கற்று வந்தான். அநேக ஆண்டுகளுக்கு பின் அவன் சுயமாய் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்தான். அது மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆகவே அதன் முன்பு அமர்ந்து அதன் அழகை ரசித்து கொண்டேயிருக்க ஆரம்பித்தான். இது அநேக நாட்களாக் நடந்து வந்தது. வேறெந்த வேலையும் செய்யமால், எதையும் புதிதாய் கற்று கொள்ளாமல் அந்த ஓவியத்தையே பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இதை கவனித்து வந்த குரு அந்த ஓவியம் முழுவதையும் பெயிண்ட் அடித்து அலங்கோலமாக்கினார். மறுநாள் அதை பார்த்த வாலிபன் தான் ரசனையாய் வரைந்த ஓவியம் அலங்கோலமாய் இருப்பதை கண்டு கடுங்கோபம் கொண்டு குருவிடம் ஓடினான்.
.
அவர், 'ஆம் இதை உன் நன்மைக்காகவே செய்தேன். இந்த ஓவியம் உன் வளர்ச்சியை பாதிக்கிறது. நீ புதிய புதிய ஓவியங்கள் வரைந்து இன்னும் வாழ்வில் முன்னேறி, உன் திறமைகளை வளர்த்து கொள்' என்று அறிவுரை கூறினார். அவன் அந்த அறிவுரையை கேட்டு மிகவும் கடினமாக உழைத்து மிக புகழ்பெற்ற பழங்கால ஓவியத்தை வரைந்தான்.

இஸ்ரவேல் தேசம் - அதிசயமான உண்மை

இஸ்ரவேல் தேசம் மிகச் சிறியதாக இருந்தாலும், அதனை சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து, அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று அந்த தேசம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனையோ முறை பிரயத்தனம் பண்ணியும், 'இதோ, இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை' என்ற வார்த்தையின்படி தேவனே அந்த நாட்டை காக்கின்றபடியால், யாராலும் அந்த தேசத்தை அசைக்க முடியாது என்பதே அதிசயமான உண்மை.
.
ஆறுநாள் யுத்தத்தில் யுத்தக்களத்தில் நடந்த அற்புதங்கள்:
இஸ்ரவேல் வீரர் கூறின சாட்சி: ஆறு நாள் யுத்தத்தில் நாங்கள் விரைவாய் முன்னேறும்போது ஒரு பலத்த காற்று அடித்தது. பாலைவனத்தில் தாங்கள் ஒரு அடிக்கூட நகர முடியாமல் நிறுத்தப்பட்டனரென்றும், சில நிமிடங்கள் சென்று புயல் நின்றவுடன் தங்கள் முன்னே நிலக்கண்ணிகள் நிறைய வைக்கப்பட்டிருந்ததை புயற்காற்று மணலை முழுவதும் அடித்துச் சென்று தங்களுக்கு காட்டி விட்டதையும் அறிந்து, ஆண்டவர் எவ்வளவு ஆச்சரியமான பிரகாரமாக தங்களுக்கு வர இருந்த ஆபத்தைக் காட்டி கொடுத்து தங்களை காப்பாற்றினார் என்று ஆண்டவரை துதித்தோம் என்றார்.
.
இரண்டாவது வீரர்: இரண்டு வீரர் ஏலாத் துறைமுகத்துக்குப் பக்கத்தில் பாராசூட் மூலமாய் ஆகாயத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய எகிப்திய டாங்க் நின்று கொண்டிருந்தது, அதற்குள்ளிருந்து இரண்டு எகிப்திய வீரர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இரு இஸ்ரேலிய வீரரும் கவனமாக டாங்கினிடம் முன்னேறிப்போன போது டாங்கிலிருந்து 18 வீரர்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கி சரணடைந்தனராம். ஏன் இவர்கள் சரணடைந்தனர் என்று விசாரித்தபோது அவர்கள் தங்களால் ஒரு விரலை கூட அசைத்து டாங்கை ஓட்டவோ அல்லது பீரங்கியை இயக்கவோ முடியாமற் போனது என்றும் விவரிக்க முடியாத ஒரு பயம் தங்களை பிடித்தது என்றும், அதனால்தான் தாங்கள் சரணடைந்ததாகவும் கூறினர்.
.
மூன்றாவது வீரர்: இஸ்ரவேலின் டாங்கி படை ஒன்றை சீனாய் பாலைவனத்தில் ஒரு எகிப்திய டாங்க் படை தாக்கியது. அச்சமயம் இஸ்ரேலிய வீரர் கண்ட காட்சியை அவர்கள் பிற்பாடு கூறியது: ஆகாயத்தில் ஒரு வெண் வஸ்திரம் தரித்த உருவம் தன் கைகளை விரித்துப் பறந்ததாகவும், அவ்வுருவம் தன் வலது கையை தாழ்த்தினபோது, அப்பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இடது கையை தாழ்த்தினபோது இடது பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்தததாகவும் கூறினர்.
.
யுத்தத்தில் தப்பி வந்த எகிப்திய படைவீரன் சொன்னது: தேனீக்கள் போன்ற வண்டுகள் எங்களை துரத்திக் கொண்டே வந்தன. ஆகையால் நாங்கள் முன்னேற முடியாமல் பின்வாங்கி ஓடி வர வேண்டதாயிற்று. யாத்திராகமம் 23:28: 'உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையம் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்' என்ற வார்த்தையின்படி குளவிகளை அனுப்பி, தேவன் தம் ஜனத்தை காத்துக் கொண்டார்.
.
நான்காவது யுத்தம்: 1968க்கும், 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலின் எலலைப்பகுதி முழுவதிலும், மற்றும் இஸ்ரவேல் நாட்டிற்குள்ளும், இஸ்ரேலியர் சோர்ந்து போகும் வகையிலும் பலஸ்தீன கொரில்லாக்களும், சுற்றியிருக்கும் அரபு நாடுகளும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தன
.
ஐந்தாம் யுத்தம்: யாம் கிப்பூர் என்பதற்கு பாவ நிவாரண பலி செலுத்தும் நாள் என்று பொருள். கர்த்தருடைய கட்டளைப்படி அந்நா
ளில் அக்டோபர் 6, 1973ம் வருடம் படைவீரர் உட்பட இஸ்ரவேலர் யாவரும் ஒரு வேலையும் செய்யாமல் அனுசரிப்பார்கள் என்று அறிந்து, எகிப்து திடுதிப்பென்று அதிகாலை 4 மணிக்கு 3000 டாங்குகளோடும், 2000 கன பீரங்கிகளோடும், 1000 ஆகாய கப்பல்களோடும், 6,00,000 வீரர்களோடும் சூயஸ் நகர் சமீபத்தில் சூயஸ் கால்வாயையும் அதற்கு வடக்கே ஒரு பகுதியையும் தாண்டி இஸ்ரவேலர் காத்து வந்த பகுதிக்குள் முன்னேறி விட்டனர். அதே சமயத்தில் சீரியாவும் பலத்த ராணுவத்துடன் வந்து கோலன் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
.
முதலில் இஸ்ரவேல் ராணுவம் நிலைமையை சமாளிக்க அதிக கஷ்டப்பட்டாலும், தேவன் அவர்களுக்கு துணை செய்தததினால், போர்ட்செயிடை தன் வசப்படுத்தி, கெய்ரோவிற்கு 10 மைல் தூரமட்டும் எகிப்திற்குள் முன்னேறி விட்டனர். ஆனால் அதற்கு மேல் முன்னேற அமெரிக்க அனுமதி அளிக்கவில்லை. விட்டிருந்தால் எகிப்தையும் அவர்கள் கைப்பற்றியிருந்திருப்பார்கள்!
.
இந்த சமயத்தில் இஸ்ரவேலர் ஆண்டவருடைய பாதுகாப்பு தங்களுக்கு அதிகமாக் இருந்ததென்று கூறினர். யுத்தத்தின் ஆரம்ப நாளில் எகிப்திய இராணுவம் இஸ்ரவேலை சுற்றிலும் வளைத்துக் கொண்டபோது, இஸ்ரேலிய வீரர் சிறு புதர்களுக்கு பின்னாலும், சாக்கு மண்ல் மூட்டைகளுக்கு பின்னாலும் ஒளிந்தனர். சிறிது நேரத்தில் திடீரென்று வெண் வஸ்திரம் தரித்த ஒருவர் இஸ்ரவேல் படைகளுக்கும், எகிப்திய படைகளுக்கும் இடையில் காணப்பட்டார். அவ்வளவுதான்! எகிப்தியர் பக்கமிருந்து வெடிசத்தம் நின்றது. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு எகிப்தியர் ஓடினர்.

.
கோலன் குன்றுகள் மத்தியில் சீரியா 1200 டாங்கிகளை இஸ்ரவேலுக்கு எதிராக நிறுத்தியிருந்தது. அப்பகுதியை காக்க, இஸ்ரவேல் இரண்டு டாங்கிகளை மாத்திரமே நிறுத்தியிருந்தது, பாவ நிவாரண பலி செலுத்தும் அந்நாளில் இஸ்ரவேலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சீரிய இராணுவம் என்ன காரணத்தாலோ முன்னேறாமல் அப்படியே நின்று விட்டது. அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஒரு இஸ்ரவேல் யூதர், அங்கு மிகப்பெரிய பழுப்பு நிறக் கை எதையோ தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சி தனக்கு தோன்றியதாகவும், ஆண்டவர்தான் சீரிய துருப்புகள் முன்னேறாதபடி தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அவர்களையும் வெற்றிக் கொள்ள தேவன் இஸ்ரவேலருக்கு கிருபை பாராட்டினார்.
.
ஈராக் - குவைத் யுத்தம்.
.
1991அம் ஆண்டு மார்ச் மாதம் சில அமெரிக்கர்கள் இஸ்ரவேல் தேசத்தை சுற்றி பார்க்க சென்றிருந்தபோது, யூதர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கென்று கொடுக்கப்பட்டிருந்த காஸ் மாஸ்க்குகளை உபயோகிக்காமல் உறையில் போட்டுக் கொண்டிருந்தார்களாம். ஏன் உபயோகிக்காமல் கட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில், ஆச்சரியத்தை உண்டு பண்ணினது. இராக்கியர் 39 ஸ்கட் ஏவுகணைகளை இஸ்ரவேலுக்கு எதிராக ஏவி விட்டனர்.
பாகமம் 25:2-3 வசனங்களின்படி, 'குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்' இந்த வசனங்களின்படி யெகோவா நாற்பதாவது ஏவுகணையை இஸ்ரவேல் தேசத்தின் மேல் அனுப்பமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில் கட்டி வைக்கிறோம் என்பதே.
.
நாற்பது அடிகள் வரை அடிக்கலாம் என்ற விதி இருந்தாலும், தவறுதலாக நாற்பது அடிகளுக்கு மேல் அடித்து விட்டால் நீசன் என்று எண்ணப்படுவானேன் என்று காலக்கிரமத்தில் 39 அடிகளோடு நிறுத்திக் கொள்வது பழக்கமாகி விட்டது, அதன்படி 2 கொரிந்தியர் 11:24ம் வசனத்தில் பரி.பவுல் யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன் என்று கூறியிருக்கிறார்.
.
பிரியமானவர்களே, இஸ்ரவேல் தேசத்தை தேவன் இத்தனை உறுதியாக காத்து தம்முடைய வாக்குதத்தங்களை ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேற்றி இருப்பதைக் காணும்போது, நம் தேவன் எத்தனை அருமையானவர் என்று அவரை துதிக்காமல் இருக்க முடியுமா? நான் இந்த கட்டுரைகளை அநேக நாட்களாய் எழுத வேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன். அதை எழுதும்படியாக தேவன் கிருபை செய்ததை நினைத்து அவரை துதிக்கிறேன். இதற்கு உதவியாக இருந்த எ
ஸ்.டி அம்புரோஸ் அவர்களின் இஸ்ரவேல் என் புத்தகத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

மரணமே உன் கூர் எங்கே? வீர வாலிபனின் கடைசி வரிகள்

நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது - (உன்னதப்பாட்டு 8:6).
.
புஷ்யோக் என்னும் ரஷ்ய வாலிபன் எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பான். அவனை காண்பவர்களை கவர்ந்திழுக்கும் உள்ளத்தை உடையவனாய் இருந்தான். மட்டுமல்ல, இனிமையாக பாடி வாத்திய கருவிகளை இசைப்பதில் அவனுக்கு இணை அவன்தான்.
.
அவனது பெற்றோர் அவனை இசைக்கல்லூரியில் சேர்த்தனர். சங்கீதத்தை முறைப்படி கற்றது மட்டுமல்ல, எல்லா இசைக் கருவிகளையும் திறமையாக மீட்டுவதிலும் பிரசித்திப் பெற்றவனாக இருந்தான். தன்னோடு சுட படிக்கும் மாணவன் மூலமாக கிறிஸ்து தம் ஜீவனை கல்வாரியில் எபபடி கொடுத்தார் என்பதை அறிந்தான். அவன் உள்ளம் கிறிஸ்துவுக்காக பொங்கியது. கிறிஸ்து தம் ஒரே ஜீவனை எனக்காக அர்ப்பணித்தாரென்றால் ஏன் என் திறமை தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்பணிக்கக்கூடாது என தீர்மானித்தான்.
.

அவன் பட்டம் பெறும் நாள் வந்தது. அவனது அருமையான பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு, ஒழுங்கு செய்யப்பட்ட பெரிய மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அவனுடைய ஆசிரியர்கள் பெருமையோடு தம்தம் ஆசனங்களில் வந்து அமர்ந்தனர்.
..
ரஷ்யாவில் நாடோடிப்பாடலான 'பொன் வாத்தின் மதுரக்கீதம்' என்ற பாடலையே தன் பட்டம் பெறும் பாடலாக தெரிந்தெடுத்தான். தன் முழு

உள்ளத்தையும் அந்த பாடலில் இணைத்து, உருக்கமாக பாடிக் கொண்டே வந்தான். அந்தப் பாடலோடு கூட அப்படியே கல்வாரியின் கீதத்தையும் இணைத்து இயேசுவின் அன்பு, அவரது தியாகத்தையும், உருக்கமான குரலில் பாடி முடித்தான். கல்லைப் போலுள்ள உள்ளங்கள் மெழுகைப்போல உருகின. அவனது ஆசிரியர்கள் திகைத்தார்கள். அரசாங்க அதிகாரிகள் உறுமினார்கள். அவன் மெதுவாய் மேடையில் எழுந்து நின்று, உறுதியான குரலில், 'பாரமான சிலுவையை தம் தோள்களிலே தூக்கிக் கொண்டு எருசலேம் வீதி வழியாக இரத்த வியர்வையோடு நடந்து, எனக்காக ஜீவனைக் கொடுதுது, தன் ஜீவனைப் பார்க்கிலும் என்னை அதிகமாக நேசித்தவரை நான் எப்படி நேசியாமல் இருக்க முடியும்?' என்று கூறினான்.
. 
அப்பொழுதே அவன் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டன. அவன் பெற்றோர் கலங்கி தவித்தனர். அவன் அவர்கள் பக்கமாக திரும்பினான், 'அம்மா,கல்வாரி கீதத்தோடு என் வாழ்க்கையின் கீதத்தையும் இணைத்துக் கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்' என்றான். மரண தண்டனைக்காகஅவன் நடந்து சென்றான். அவன் நடையில் ஒரு கெம்பீரம் இருந்தது.

Thursday, June 6, 2013

பொறுமையாய் இரு

ஒரு பெரிய சுய சேவை பொருள் அங்காடி ஒனிறில் ஒரு பெண் தன்னுடைய மூன்று வயது சிறுமியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வந்திருந்தாள். அங்குள்ள ஒவ்வொரு அலமாரியாக பார்த்து தனக்கு தேவையானவைகளை எடுத்து கையில் வைத்திருந்த கூடையில் சேகரித்துக் கொண்டே வந்தாள். அந்த சிறு குழந்தை கண்ணில் காணும் ஒவ்வொன்றையும் கேட்டு அழுதுகொண்டே வந்தது. இவற்றையெல்லாம் அங்கு பணிபுரியும் ஒரு நபர் பார்த்துக் கொண்டே இருந்தார்.
.
அவர்கள் பிஸ்கட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதிக்கு சென்றவுடன் அந்த குழந்தை பிஸ்கட் வேண்டுமென்று அடம்பிடித்தது. உடனடியாக அந்த பெண், அனித்தா அமைதியாக இரு. 10 நிமிடம் தான் பொறுத்துக் கொள் என்றாள். பின்பு சிறிது நேரம் கழித்து பொம்மைகளைக் கண்டவுடன் குழந்தை பொம்மை வேண்டுமென்று அழ ஆரம்பித்தது. உடனே, அனித்தா இன்னும் 5 நிமிடத்தில் நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம், பொறுமையாக இரு என்றாள். கடைசியாக வாங்கிய பொருட்களுக்கு பில் போடும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு சாக்லேட் இருப்பதை அச்சிறுமி கண்டவுடன் சாக்லேட் வேண்டுமென்று ஓவென்று அழ ஆரம்பித்தாள். உடனே தாயார் 'அனித்தா இதோ சாமான்களெல்லாம் வாங்கியாச்சி உடனே நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம் வீட்டிற்கு போய் ஒரு சுகமான குட்டி தூக்கம் போடலாம், பொறுமையாய் இரு,' என்றாள். இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்த நபர் அத்தாயாரை பார்த்து உங்கள் குழந்தை அனித்தா எவ்வளவு தொந்தரவு செய்தும் கோபப்படாமல், பொறுமையாகவும் கனிவாகவும் பேசி சமானித்து விட்டீர்களே என்று பாராட்டினார். அப் பெண் சிரித்துக் கொண்டே என் குழந்தையின் பெயர் மீனா என் பெயர் தான் அனித்தா, பொறுமையை இழந்துவிடாமலிருக்க நான் என்னிடம்தான் பேசிக் கொண்டேன் என்றார்.