Thursday, June 20, 2013

உற்சாகமாய் கொடுப்போம்

ஹேட்டி வயாட் என்ற ஒன்பது வயது சிறுமி ஞாயிறு பள்ளிக்கு மிக ஆவலோடு சென்றாள். அங்கு அவள் உட்காருவதற்கு இடம் இல்லாதபடியால் சோர்வுடன் வீட்டிற்கு சென்று விட்டாள். பின்பு இரண்டு ஆண்டுகளில் அவளுடைய சரீரத்தில் ஏற்பட்ட கொடிய வியாதியின் காரணமாக சுகவீனமாகி, படுத்த படுக்கையாகி, இறுதியில் மரித்து போனாள். சில நாட்களுக்கு பின் அவள் தலையணையின் அடியில் ஒரு கவருக்குள் 57 சென்ட் பணம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் 'இந்த பணத்தை ஞாயிறு பள்ளி சிறுவர்கள் அதிக அளவில் உட்கார வசதியாக, நமது ஆலயத்தை பெரியதாக கட்ட இந்த காணிக்கையை உபயோகப்படுத்துங்கள்' என்று எழுதியிருந்தது.
.
சிறுமியின் இச்செயலை சபை ஆராதனையில் போதகர் கூறியபோது சபையார் மனதுருகினர். அதை தொடர்ந்து தேவனுக்கு கொடுக்க வேண்டுமென்ற தீவிர வாஞ்சை ஒவ்வொருவர் இருதயத்திலும் உண்டானது. அனைவரும் மனஉற்சாகமாய் காணிக்கை கொடுத்தார்கள். அந்த காணிக்கையை கொண்டு, பிலதெல்பியா என்னும் இடத்தில் 3,300 பேர் அமர்ந்து தேவனை ஆராதிக்கும் சபையும், அதனுடன் 1400 மாணவர்கள வேதாகம கல்வி பயிலும் பெரிய கல்லூரியும் கட்டப்பட்டது. அந்த சிறுபெண் கொடுத்த 57 சென்ட் பணம் எவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பார்த்தீர்களா?
.
அதுபோல வேதத்தில் ஒரு சிறுபையன் கொடுத்த 5 அப்பமும், இரண்டு மீனும் 5000 பேருக்கு அதிகமானோர் திருப்தியாய் சாப்பிட போதுமானதாய் இருந்தது. நாம் காணிக்கை கொடுப்பது எப்படி இருக்கிறது?
.
வருமானத்தில் பத்தில் ஒன்றை தசமபாகமாக கொடுக்க வேண்டியது வேதத்தின் சட்டம். அதை ஒழுங்காக கொடுக்கிறோமா? சிலர் இது பழைய ஏற்பாட்டு கட்டளை என்று கூறினாலும், இயேசுகிறிஸ்து 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே' (மத்தேயு 23:23) என்று கூறுகிறார். தசம பாகம் கொடுக்க வேண்டுமென்பது கட்டாயமாயிருந்தாலும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் அதை விட அதிகமாய் கொடுக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment