Tuesday, June 25, 2013

வேடிக்கையான கதை


ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு தாயின் மூன்று குமாரர்கள் நன்கு படித்து, வீட்டை விட்டு வெளியே சென்று நன்கு சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருந்தார்கள்.

ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடி தங்கள் தாயாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருவரோடொருவர் சொல்லி கொண்டார்கள்.

அதன்படி மூத்தவன் 'நான் அம்மாவுக்கென்று ஒரு பெரிய வீட்டை கட்டியிருக்கிறேன். ஏசியெல்லாம் போட்டு, சூப்பரா கலக்கியிருக்கிறேன்' என்று கூறினான்.

அடுத்தவன், 'நான் அம்மாவுக்கென்று ஒரு மெர்சிடஸ் காரும், அவர்கள் ஹாயா உட்கார்ந்து போகத்தக்கதாக ஒரு டிரைவரையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்' என்று கூறினான்.

கடைசி மகன், 'உங்களுக்கெல்லாம் தெரியும், அம்மா பைபிளை அதிகமாக வாசிக்க பிரியப்படுவார்கள் என்று. ஆனால் அவர்களுடைய கண் சரியாக தெரியாததால் அவர்களால் சரியாக வாசிக்க முடிவதில்லை.

ஆகவே நான் ஒரு கிளியை வாங்கியிருக்கிறேன். அது பைபிளை அப்படியே சொல்லும். அதை பழக்குவிக்க 12 வருடங்கள் ஆனதாம். அம்மா சோபாவில் உட்கார்ந்து, எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொன்னால் போதும், அது பட்பட்டென்று சொல்லும்' என்று கூறினான்.

மூவரும் தங்கள் அன்னைக்கென்று தாங்கள் வாங்கிய பரிசுகளை பெருமிதமாக நினைத்தபடியே, அவற்றை தங்கள் அன்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
.
அவற்றை பெற்று கொண்ட அன்னையிடமிருந்து ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்தது.

அதன்படி, அவர்கள், மூத்தவனுக்கு 'நீ கொடுத்த வீடு மிகவும் பெரியது. நான் ஒரே ஒரு அறையில் தான் இருக்கிறேன். ஆனால் மற்ற இடம் முழுவதையும் நான் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது' என்று எழுதியிருந்தார்கள்.

அடுத்தவனுக்கு 'நான் எங்கே வெளியே போகிறேன், நீ எனக்கு அவ்வளவு பெரிய காரை அனுப்பி வைத்திருக்கிறாய்? நீ அனுப்பியிருக்கிற அந்த டிரைவர் அதற்கு மேல் மிகவும் மோசம், முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்' என்று எழுதியிருந்தார்கள்.

மூன்றாமவனுக்கு 'நீ மட்டும்தான் என்னுடைய தேவையையும், என்னை பற்றியும் நன்கு அறிந்திருக்கிறாய்! நீ அனுப்பியிருந்த கோழி; நன்றாக ருசியாக இருந்தது' என்று எழுதியிருந்தார்களே பார்க்கணும்!

No comments:

Post a Comment