Friday, July 27, 2012

தேவன் இல்லை

ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ மனிதர், தன் முடியை வெட்டிக்கொள்வதற்காக ஒரு நாவிதனிடம் (Barber) சென்றிருந்தார். அப்போது இரண்டு பேரும் நாட்டு நடப்புகளையும் மற்றும் அநேக காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு மத சம்பந்தமான நம்பிக்கையைக் குறித்து வந்த போது அந்த நாவிதன் எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இல்லை என்று கூறினான். அதற்கு கிறிஸ்தவர் ஏன் என்று கேட்டார். அதற்கு நாவிதன், “கடவுள் என்று ஒருவர் உண்டென்றால் ஏன் மக்கள் பட்டினியால் மடிய வேண்டும்? ஏன் அனேகர் நோயாளிகளாகக் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் என்று ஒருவர் இருந்தால் கஷ்டம் வேதனை என்று ஒன்றும் இருக்காது, ஒரு அன்புள்ள கடவுள் இவற்றையெல்லாம் அனுமதிக்கமாட்டார்" என்றுக் கூறினான். அந்த கிறிஸ்தவர் பதில் சொல்ல யோசித்துவிட்டு, ஏன் வீணாக வாக்குவாதம் பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றும் பேசாமல் தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்த போது, ஒரு மனிதன் மிக நீளமான தாடியுடனும், நீளமான அழுக்கு தலைமுடியுடனும் நின்றுக்கொண்டிருந்தான். அவனைக் கண்டவுடன் அந்த கிறிஸ்தவர் திரும்பவும் அந்த நாவிதனிடம் சென்று, 'உனக்குத் தெரியுமா இந்த உலகத்தில் நாவிதர்களே இல்லை' என்றுக் கூறினார். அதற்கு அந்த நாவிதன், "நீர் எப்படி அப்படிச் சொல்லலாம்? நான் இங்கே இருக்கிறேன், உமக்கு தலைமுடியை நான் இப்போது தானே வெட்டினேன்" என்று வேகமாக கூறினான். அப்போது அந்த கிறிஸ்தவர், 'இல்லை நாவிதர்கள் என்பவர்கள் இல்லை, அப்படி இருந்தால், இந்த மாதிரி ஒரு மனிதன் இப்படி அழுக்கு முடியோடு வெட்டாமல் இருப்பானா' என்றுக் கேட்டார். அதற்கு நாவிதன், 'நாவிதர்கள் இருப்பது உண்மை, ஆனால் இந்த மனிதர்கள் என்னிடம் வருவதில்லை, அதனால்தான் இப்படி இருக்கிறார்கள்' என்றுக் கூறினான்.

.
அப்போது அந்தக் கிறிஸ்தவர் கூறினார், "சரியான பாயிண்டைச் (Correct Point) சொன்னாய். அதுப் போலத்தான் ஆண்டவரும் இருக்கிறார். ஆனால் மனிதர்கள் அவரைத் தேடுவதில்லை, அவரிடம் போவதில்லை, அதனால் தான் இந்த உலகத்தில் இத்தனை பாடுகளும் வேதனைகளும்" என்றுக் கூறிவிட்டு ஒரு மனிதனை கர்த்தரை நம்ப வைத்த திருப்தியில் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment