Monday, July 9, 2012

Fanny Crosby - விசுவாசக் கண்களின் ஊழியம்

ரு மருத்துவரின் தவறான சிகிச்சையினால், ஆறே வாரங்கள் நிரம்பிய ஃபேனி கிராஸ்பி (Fanny Crosby 1820-1915) தன் இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க வேண்டிய பரிதாப நிலை எற்பட்டது. அதனால் அக்குழந்தை மனமடியவில்லை. சிறு வயதில் அவருடைய பாட்டி அவருக்கு அநேக காரியங்களைக் குறித்து சொல்லிக் கொடுத்தார். பூக்களை அவைகளின் மணத்தை வைத்தே என்ன பூ என்றும், மரத்தை தடவிப் பார்த்து என்ன மரம் என்று கூறும் திறமைப் படைத்தவராயிருந்தார். .
சிறுவயதில் வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். 5 ஆகமங்களையும், சங்கீதங்களையும் நீதிமொழிகளையும், ரூத் போன்ற வேத புத்தகங்களையும் அவர் மனனம் செய்து வைத்திருந்தார். அது அவருக்கு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறுவதற்கு அவருக்கு பெரிதும் உதவின.
.
தனது 15ஆவது வயதில், குருடருக்கான பள்ளியில் நியூயார்க்கில் சேர்ந்து, அருமையான படிப்பை படித்து முடித்தாள். அதன் பிறகு அங்கேயே ஆசிரியையாக பணியாற்றி, தனது 38ஆவது வயதில் தன்னோடு பணியாற்றின குருடரான அலெக்ஸாண்டர் (Alexander van Alstyne) என்னும் பியானோ வாசிப்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்கள் 44 வருடங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்தினார்கள்.
.
சரி, யார் இந்த ஃபேனி கிராஸ்பி? அவர் தான் 8000 த்துக்கும் மேலான கிறிஸ்தவ பாடல்களை இயற்றி இசை அமைத்த மேதையாவார். அவர் எழுதிய அநேக பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, சபைகளில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அவர் இயற்றிய பாடல்களில் சில ‘I am Thine O Lord, To God be the glory, Draw me nearer, Blessed Assurance’ இப்படி அருமையான பாடல்களை அவர் இயற்றி இசையமைத்திருக்கிறார்.
.
அவர் தன் பார்வை இழந்த போதிலும், விசுவாசக் கண்களினால் கர்த்தரின் மகிமையைக் கண்டவராய், அற்புதமான பாடல்களை இயற்றியிருக்கிறார். தனது குறையை நினைத்து ஒரு போதும் அவர் முறுமுறுக்கவே இல்லை. ‘தேவன் தமது மேலான கிருபையினால், தமது ஊழியத்திற்கு இந்த நிலைமையில் இருக்கிற என்னையும் தெரிந்தெடுத்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்’ என்று அவர் நன்றியோடு வாழ்ந்தார்.
.
ஒரு முறை ஒரு ஊழியர், அவர் பார்வையில்லாதவராக இருப்பதைக் குறித்து, தனது துயரத்தை வெளிப்படுத்த முற்பட்ட போது, கிராஸ்பி, அவரைத் தடுத்து, ‘எனது பிறப்பின் போது எனது விருப்பம் எது என்று என்னைக் கேட்டிருந்தால் நான் குருடாக இருப்பதையே விரும்புவேன். ஏனெனில், நான் பரலோகத்திற்கு போகும்போது நான் காணும் முதல் முகம் எனக்காக தன் ஜீவனையே கொடுத்த என் நேசர் இயேசுவாகத்தான் இருக்கும்’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
.
ஃபேனி சுவிசேஷத்தை பாடல்கள் மூலம் பரப்புவதே தன் பணி என்று நினைத்தார். தேவ செய்திகளைவிட பாடல்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் சந்திக்க முடியும் எனறு அவர் நம்பினார்.
.
பியானோ, கிட்டார், ஆர்கன் என்று அநேக இசை வாத்தியங்களை வாசிக்க அறிந்திருந்ததுடன், அழகான குரலில் பாடவும் அறிந்திருந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்து, முதலாம் வருடததிலேயே மரித்து போனது.
.
அவர் உயிரோடு இருந்த காலத்தில், எட்டு அமெரிக்க அதிபர்களுக்கு அவர்களுடைய ஆட்சி காலத்தில் அவர்களால் அழைக்கப்பட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களுக்கு வேதத்திலிருந்து ஆலோசனைகளை கொடுக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியிருந்தது.
.
தனது குறைகளிலும் எந்த முறுமுறுப்பும் இல்லாமல், கர்த்தருக்காக வாழ்ந்து, இசைக் குயிலாக அநேக பாடல்களைப் பாடி, அநேகரை கர்த்தருக்குள் வழி நடத்திய ஃபேனி பரலோகத்திலும் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருந்து, அவரை முகமுகமாய் தரிசித்து, அவரை துதிக்கும் பாடல்களை பாடிக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
.
கர்த்தருக்காக சாதிக்க நினைப்போர் தங்கள் சரீர குறைகளை நினைத்து புலம்பிக் கொண்டிக்க மாட்டார்கள். எந்த குறையும் தடையும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

No comments:

Post a Comment