திபெத் நாட்டில் புத்தமதமே பிரதானமாக இருந்ததால் அம்மதம் நசிந்து
போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது
என்ற கடுமையான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றவர்தான்
சாது சுந்தர் சிங். 1908ம் ஆண்டு திபெத்திற்குள் 19 வயதுள்ள இளைஞனாய்
ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங்.
ஒரு
முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிசேஷத்திற்கு
வரவேற்பில்லை. அவர்கள் சுந்தர் சிங்கை பிடித்து அவ்வூர் பிரதம லாமாவிடம்
கொண்டு வந்தனர். அனுமதியின்று ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு
மதத்ததை பிரசங்கித்த குற்றத்திற்காகவும் லாமா அவருக்கு மரண தண்டனை
விதித்தார்.
திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும்
முறைப்படி சுந்தர் ஒரு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அவரது
உடைகளை உரிந்து விட்டு எலும்பு குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி
எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கைதோள் பட்டையில் அடிபட்டு
மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எங்கும் இருளாக இருந்தது.
இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும்
எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த
இடமெல்லாம் அழுகிய மாம்சமும் எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம்
தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து
உச்சரித்த வார்த்தைகள் தான் அவர் நாவிலும் வந்தன. 'ஏன் என்னை கைவிட்டீர்?'
துர்நாற்றம் பசி, தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தர் சிங்-க்கு
தூக்கம் வரவில்லை.
மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து
மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின்
பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார்.
மேலேயிருந்த மனிதர் 'கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்'
என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தர் சிங்கை தூக்கி
கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி
செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு
உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு
யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை
காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்.
No comments:
Post a Comment