Tuesday, June 3, 2014

சத்தம் கேட்கும் ஆடு


2001-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி கடத்தப்பட்ட வானூர்தி (Aeroplane) அமெரிக்காவில் உள்ள பென்டகனில் மோதிய போது, அநேக மக்கள் அங்கு வேலை செய்பவர்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் அங்கு அந்த பிளேன் மோதியதால் உண்டான பயங்கரமான புகை மண்டலத்திற்குள் சிக்கி, புகை அவர்கள் கண்களை மறைத்தபடியால், வெளியே வர முடியாமல், மிகவும் அவதிக்குள்ளாயினர். அவர்கள் அங்கு மூச்சு விட முடியவில்லை, சரியாக காண முடியவில்லை. அப்போது ஐசக் ஹுப்பி (Issac Hoopi) என்னும் போலீஸ் அதிகாரி, உள்ளே ஓடி, உயிரோடு மக்கள் இருக்கின்றனரா என்று தேடினார். உள்ளே இருக்கும் நிலவரத்தை கண்டவுடன், சற்று வெளியே வந்து, 'என் சத்தத்தை கேட்டு அந்த சத்தத்தை பின்தொடர்ந்து வாருங்கள்' என திரும்ப திரும்ப உரத்த சத்தத்தோடே கூறிக் கொண்டே இருந்தார். அவருடைய அந்த சத்தத்தை கேட்டு அநேகர், வெளியே வந்தனர். உள்ளே ஒன்றுமே தெரியாத புரியாத நிலையில் இருந்த அவர்கள் அந்த சத்தத்தை கேட்டு, வெளியே வந்து உயிர் தப்பினர்.
.
'என் சத்தத்தை கேட்டு என் பின்னே வாருங்கள்' என்று நம் நேசர் இயேசுகிறிஸ்து வழிதவறி போன ஆடுகளை நோக்கி அழைத்து கொண்டே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவே நல்ல மேய்ப்பர்;. 'வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்' என்று யோவான் 10:3 ல் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அறிந்திருக்கிற தேவன் நம் தேவன். அவர் நம்மை அழைத்து, நம்மை புல்லுள்ள இடங்களுக்கு நடத்தி கொண்டு செல்கிறார்.
.
இந்த உலகத்தின் பாவத்திலும், துன்பத்திலும், வெளியே வர முடியாதபடி தவிக்கிற ஒவ்வொருவரையும் தேவன் அழைத்து, என் பின்னே வாருங்கள் என்று அழைக்கிறார். அப்படி அவருடைய சத்தத்தை கேட்டு வரும்போது, நாம் பத்திரமாக கரை கொண்டு சேர்க்கப்படுவோம்

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது - (யோவான் 10:4).

No comments:

Post a Comment