Friday, June 6, 2014

காரிருளில் என் நேச தீபமே - பாடல் பிறந்த கதை

காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்,
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்
.
மேற் கண்ட வரிகள் ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய பாடலின் முதற்கவி ஆகும். இந்த நான்கு வரிகளை மீண்டுமொருமுறை கருத்தாய் வாசியுங்கள். உன்னத கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு அற்புத சத்தியம் இதில் அடங்கியுள்ளது. காரிருள்போல தோன்றும் வாழ்க்கiயின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். இன்றைய நாட்களில் விசுவாசிகள் அநேகர் தீர்க்கதரிசனமுள்ளவர் என யாரையாவது குறித்து கேள்விபட்டால் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இது அநேக நேரங்களில் அஞ்ஞானிகள் குறி கேட்பது போல ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பாடலின் கருத்து நம் வாழ்க்கைக்கு மிகமிக அவசியாமானது. நாளைய தினத்தை கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், இன்றைய தினத்திற்கான கிருபையை மட்டும் சார்ந்து வாழ நாம் கற்று கொள்வது அவசியம்.
.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவருடைய கரத்தில் நமது காலங்களும் நமது வாழ்க்கையும் இருப்பதால், அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்போது, நம்மை யாரும், எதுவும் நிச்சயமாக அசைக்க முடியாது.
.
இந்த பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம். 1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது.
.
அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம்.

No comments:

Post a Comment