Sunday, June 1, 2014

நம் வாயின் வார்த்தைகள்


இரண்டு சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள் என வைத்து கொள்வோம். அவர்கள் என்ன பேசி கொள்வார்கள்? முதலில் நலம் விசாரிப்பார்கள், பின்பு அவரவர் தங்கள் கஷ்டத்தை கூறுவார்கள். தங்கள் குடும்ப நிகழ்வுகளை கூறுவார்கள். தங்கள் பிள்ளைகளை குறித்து பேசி கொள்வார்கள். அதோடு முடிந்து விடுமா? பக்கத்து வீட்டு காரர்களை பற்றியும், எதிர்த்த வீட்டுகாரர்களை பற்றியும் பேசாவிட்டால் அவர்களது பேச்சு முடியாது. அதனால் ஏதாவது பிரயோஜனமுண்டா?
.
வேதம் சொல்கிறது, கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் (எபேசியர் 4:29) என்று.
.
ஒரு முறை இரண்டு விசுவாசிகள் பேசி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னார், "பரிபூரணமாய் தமக்கு ஒப்புக்கொடுக்கிற மனுஷனை தேவன் வல்லமையாய் உபயோகப்படுத்த எவ்வளவு ஆவலாய் இருக்கிறார் தெரியுமா" என்றார். இந்த வார்த்தைகளை ஆறடி தொலையில் நின்று கொண்டிருந்த வாலிபனின் காதுகளில் விழுந்தது. பூரணமாய் ஒப்புகொடுக்கிற மனிதனை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த கூடுமானால், நான் ஏன் என்னை பூரணமாக ஒப்புகொடுக்க கூடாது? என்று எண்ணினான். ந்த வாலிபன்தான் பிரசித்து பெற்ற ஊழியரான் டீ.எல் மூடி என்பவர். இருவரின் சாதாரண உரையாடல் ஒரு வாலிபனை கர்த்தருக்கு பூரணமாக தன்னை அர்ப்பணிக்க வைத்தது. இதுதான் பக்தி விருத்திக்கேதுவான நல்ல வார்த்தை.
.
நமது வேலையிடத்தில் கொஞ்சநேரம் இடைவெளி கிடைத்தால் போதும், அங்கு வேலை செய்கிறவர்களிலிருந்து, ஒவ்வொருவரை குறித்தும் வெட்டியாக பேசி நம் நேரத்தை வீணாக செலவழித்து விடுகிறோம். அந்த நேரத்தில் மற்றவருடைய ஆத்துமா இரட்சிக்கப்படும்படி பேசினால் எத்தனை நலமாயிருக்கும்!

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. - (மல்கியா 3:16).
.

No comments:

Post a Comment