Wednesday, December 24, 2014

ஹேமா ஜான் அவர்களின் சாட்சி

"பாடினால், என் இயேசுவுக்காக மட்டுமே பாடுவேன்"
வைராக்கிய விதை ஹேமா ஜான் அவர்களின் சாட்சி

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துதல்களை கூறிக்கொள்கிறேன். உங்களை சந்திப்பதிலே ஆண்டவர் கொடுத்திருக்கிற இந்த கிருபைக்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். வேதம் சொல்கிறது "கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது". இயேசு கிறிஸ்து யார் என்று அறியாத ஓர் பிராமண குடும்பத்தில் இருந்து 89 ம் ஆண்டு ஆண்டவர் என்னை பிரித்து எடுத்தார். அவருடைய பிள்ளையாக மாற்றிக்கொண்டார். அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும்.

பிராமண குடும்பத்திலே பிறந்து வைராக்கியமான முறையிலே நான் வளர்க்கப்பட்டாலும் என்னுடைய படிப்பு கல்வி எல்லாம் கிறிஸ்தவ பள்ளிகளிலே தான் இருந்தது. கிறிஸ்தவ பள்ளியில் படித்தாலும் கூட உண்மையான ஆண்டவர் அன்பை அறியாமல் இருந்தேன். குடும்பத்திலே பல போராட்டங்களும் பிரச்சனைகளும் இருந்தது. என்னுடைய தகப்பனாருக்கு சரியான கண் பார்வை இல்லாதபடியினால் குடும்ப பாரத்தை சுமக்க கூடிய பொறுப்பு என் மீது வந்தது. வறுமையை தவிர குடும்பத்திலே மற்றொரு பெரிய பிரச்சனையையும் நான் சந்திக்கவேண்டி இருந்தது.

அது சமாதானமின்மை. சந்தோசமும், சமாதானமும் என் குடும்பத்திலே என் பெற்றோர்களிடத்தில் காணப்படவில்லை. அந்த சூழ்நிலையிலே நான் தேடுகிற நான் விரும்பிகிற சமாதானத்தை யார் கொடுக்க முடியும் என்கிற ஏக்கம் என் உள்ளத்திலே என் சிறு வயது முதலே இருந்து வந்தது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலையின் காரணமாக பாரம்பரியமாக பாடல் பாடுகிற கிருபை என் குடும்பத்திற்கு இருந்தபடியினால், என் முன்னோர்கள் அனைவரும் கர்நாடக சங்கீதத்திலே முறையான தேர்ச்சி பெற்றிருந்தபடியினால் எனக்குள்ளும் அந்த தாலந்து பாரம்பரியமாக வந்தது. இந்த தாலந்தை பல திரைப்பட பாடல்களை திரைப்பட குழுக்களில் பாடுவதின் மூலமாக நான் வெளிப்படுத்தி வந்தேன். இதன் மூலமாய் குடும்பத்தின் சூழ்நிலை மாறினாலும், வறுமையின் சூழ்நிலை மாறினாலும் குடும்பத்தில் சமாதானமும் நிம்மதியும் வரவில்லை.

அந்த வேளையிலே 89 ம் ஆண்டு அடையார் கேட் ஹோட்டல் என்று அழைக்கப்படுகிற ஐந்து நட்சத்திர ஹோட்டலிலே அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர்ந்த போது தான் "கல்பனா" "மேரி" என்ற இரண்டு சகோதிரிகளை சந்தித்தேன். என்னோடு பணிபுரிந்து வந்த அந்த சகோதிரிகள் ஆண்டவரை குறித்து எடுத்து சொன்னார்கள். அந்த இரண்டு நண்பர்களை சந்தித்ததன் மூலமாக "என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் இந்த ஆண்டவர் மட்டுமே என்பதை நான் புரிந்து கொண்டேன். உண்மையான கிறிஸ்தவன், அல்லது கிறிஸ்தவள் கிறிஸ்தவ பெயரை மாத்திரம் வைத்துகொண்டால் போதாது உண்மையாக ஆண்டவரை உள்ளத்தில் ஏற்று கொள்ள வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் என் இருதயத்திலே முழுமையாக இடம் கொடுக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையிலே எனக்கென்று ஓர் எதிர் காலத்தை யோசிக்க முடியாத அந்த சூழ்நிலையிலே என்னுடைய குழுவில் ட்ரம்ஸ் வாசித்த ஜான் என்பவர் என்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் என்னில் திருமணமே செய்துகொள்ள விருப்பம் இல்லாதிருந்தது.

என்னுடைய நண்பர்கள் சொன்னதன் காரணமாக 89ம் ஆண்டு அக்டோபர் மாதம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு சென்று ஜெபித்தேன். அப்போது அங்கிருந்த தேவ ஊழியர் "ராஜன் ஜான்" என்பவர் ஜெபத்தின் மூலமாக நான்கு காரியங்களை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். "உன் குடும்பத்திலிருந்து எனக்காக உன்னை பிரித்து எடுத்தேன்" "நீ என்னுடைய ஊழியத்தை செய்வாய்" உலகத்திற்காய், பணத்திற்காய், புகழுக்காய் நீ பாடி கொண்டிருக்கிறாய். ஆனால் என்னுடைய நாம மகிமைக்கென்று இந்த உலகம் முழுவதும் உன்னை அழைத்து செல்வேன் என்று வாக்கு பண்ணினார். "நீ எனக்கார் ஒரு அடி எடுத்துவைக்கும் போது நான் உனக்காய் யாவையும் செய்து முடிப்பேன்" என்று சொல்லும்போது என்னுடைய குடும்பத்தில் சமாதானத்தை கொடுக்க வல்லவர் அந்த ஆண்டவர் மட்டும்தான் என்று புரிந்துகொண்டேன். அந்த ஜெபத்தின் முடிவிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டேன்.

24 வருடங்களாக நான் தேடி கொண்டிருந்த சமாதானமும் சந்தோசமும் அந்த ஜெபநேரத்திலே என் உள்ளத்திலே வந்தது. பலவித எதிர்ப்புகளின் மத்தியில் "ஜான்" அவர்களை 1990 ஆகஸ்ட் 24ம் நாள் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு முன் பல சினிமா பாடல்கள் பாடிகொண்டிருத நான் "பாடினால் இந்த ஆண்டவருக்கு மட்டும் தான் பாடுவேன்" என்று வைராக்கியமாய் ஒரு முடிவு எடுத்து என் தாலந்துகளையும், என் வாழ்க்கையையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புகொடுத்தேன். இந்த நாள் வரைக்கும் ஆண்டவரின் மகிமைக்காக பல ஆயிரம் பாடல்கள் பாட ஆண்டவர் உதவி செய்தார். 24 வருடமாக என் குடும்பத்திலே காணாத சமாதானத்தை தேவன் கொடுத்தார். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையுண்டாவதாக. பல ஒளிநாடக்களிலே பாடும்படியாக தேவன் வாய்ப்பு கொடுத்தார். குறிப்பாக சகோதரர் T . Agustin என்பவர் அதிகமாய் கிறிஸ்தவ பாடல்கள் பாடும்படியாக ஊக்கப்படுத்தினார்.

இயேசு அழைக்கிறார், சகோதரர் சாம் ஜெபத்துரை, சகோதரர் மோகன் சி லாசரஸ் என்று பெரிய ஊழியக்காரர்கள் ஒலிநாடாக்களில் பாடும்படியாக தேவன் எனக்கு கிருபை தந்தார். இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காக, நம் பாவங்களுக்காக, தன்னுடைய ஜீவனை கொடுத்தவர். என் குடும்பத்தின் சமாதானத்திற்கென்று பல இடங்களுக்கு சென்று, பல விக்கிரங்களை நான் தொழுது வந்திருக்கிறேன். ஆனால் ஒரு தெய்வத்தினாலும் என் குடும்பத்திற்கு சமாதானத்தை கொடுக்க முடியவில்லை. இந்த ஒரு ஆண்டவர் தான் எனக்காக யாவையும் செய்து முடித்தவர். எனக்காக தன ஜீவனை கொடுத்தவர்.

உங்கள் வாழ்க்கையிலும் கூட, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த ஆண்டவர் ஒருவரே நமக்காய் ஜீவனை கொடுத்தவர், உங்களுக்காக மாட்டு தொழுவத்திலே பிறந்தவர் இந்த ஒரு தேவன் தான் என்பதை நீங்கள் புரிந்து அதை உங்கள் உள்ளத்திலே நீங்கள் அறிந்து அதை அறிக்கை செய்வீர்களேயானால் உங்கள் பாவமான வாழ்க்கையை விட்டு நீங்கள் திரும்புவீர்கலேயானால் உங்களுடைய உள்ளத்திலே இந்த ஆண்டவரால் வரமுடியும். என்னுடைய வாழ்கையில் செய்ததுபோல பல அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடைபெறும். ஆமென்.

தொகுப்பு மற்றும் பதிப்பு

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment