Tuesday, May 29, 2012

நினையாத நாழிகையிலே

ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள்
ஒருவரையொருவர் அதிகமாய் நேசித்து வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவள்
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள். மற்றவள் ஏற்றுக்
கொள்ளாதவள். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள், எப்போதும்,
மற்றவளிடம், இயேசுகிறிஸ்துவைப்பற்றிக் கூறி, அவளும் எப்படியாவது
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள்
தன்னோடு ஆலயத்திற்கு வரும்படி வருந்திக் கேட்டுக் கொண்டாள். அவளும்
ஒத்துக் கொண்டு, இருவரும் அன்று இரவில் ஆலயத்திற்குச் சென்றார்கள்.
அன்று சபை போதகர், மத்தேயு 24ம் அதிகாரத்திலிருந்து,
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், அவர் திடீரென்று
ஒருநாள் மத்திய ஆகாயத்தில் வந்து, தம்முடையவர்களை தம்மோடு
சேர்த்துக் கொள்வார் என்றும் இரகசிய வருகையைக் குறித்து மிகவும்
ஊக்கத்தோடு பகிர்ந்துக் கொண்டார். கிறிஸ்தவளான சகோதரி, இவளை
எப்படியும் வசனம் தொட்டிருக்கும், இவள் இரட்சிப்படைந்து விடுவாள்
என்று மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அவளை பார்த்தபோது, அவள் எதுவுமே
நடக்காததுப் போல இருந்தததைக் கண்டு மிகவும் சோர்வடைந்தாள்.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். இருவரும் ஒன்றாக படுக்கைக்குச்
சென்றனர்.

கிறிஸ்தவளான சகோதரிக்கு இரவு தூக்கம் வரவில்லை. தன் சகோதரி
இன்னும் இரட்சிக்கப்படவில்லையே என்று மிகுந்த பாரத்தோடு, பக்கத்து
அறைக்கு ஜெபிக்க எழுந்துச் சென்றாள். மற்ற சகோதரி, திடீரென்று கண்
விழித்துப் பார்த்தபோது, தன் சகோதரியை பக்கத்தில் இல்லாததைக் கண்டு,
எங்கே போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது
போதகர் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வரவே, திடுக்கிட்டு, தன் சகோதரி
கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக் கொள்ளப் பட்டாளோ என்று எண்ணி,
தூக்கிவாரிப்போட்டு, கதறி, ‘இயேசுவே என்னை இரட்சியும், என்னையும்
எடுத்துக் கொள்ளும்’ என்று கண்ணீh விட்டு கதற ஆரம்பித்தாள்.
சத்தம்கேட்டு, மற்ற சகோதரி ஓடிவந்து, இருவரும் ஒருவரையொருவர்
கட்டியணைத்து, அந்நேரமே, அவிசுவாசியான சகோதரி கர்த்தரை ஏற்றுக்
கொண்டாள். ஆம்! ஒரு நாள் இப்படிதான் நடக்கப் போகிறது. நீங்கள்
நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும்
ஆயத்தமாயிருங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. புலி வருகிறது புலி
வருகிறது என்று சொல்லி சொல்லி ஒரு நாள் புலி வந்துவிட்டதைப் போல,
இயேசு வருகிறார் என்று அநேக இடங்களில் சொல்லி சொல்லி ஒரு நாள்
அவர் வரத்தான் போகிறார்.

No comments:

Post a Comment