Monday, November 4, 2013

கொடுப்பவரையே நாடுவோம்


ஒரு இராஜா அநேக போர்களை நடத்தி வெற்றிக் கண்டார். அவருடைய நான்கு அமைச்சர்கள் இந்த போர்களை அவருக்காக நடத்தி வெற்றியின் வழியில் இராஜாவை நடத்தினர். ஆகையால் அந்த இராஜா நான்கு அமைச்சர்களையும் கனப்படுத்த விரும்பினார்.
.
ஆகவே தனது பக்கத்து நாட்டு மன்னர்களையும், நாட்டின் பெரிய பதவியிலிருப்பவர்களையும் அழைத்து பெரிய விருந்து செய்தார். அந்த விருந்தில் அந்த நான்கு அமைச்சர்களையும் கனம் பண்ணி, 'உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள், அதை தருகிறேன்' என்று கூறினார்.
.
முதல் அமைச்சர் வந்தார், அவர் சொன்னார், 'இராஜா அவர்களே, நான் சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். பணம் இல்லாததால் அநேக நாட்கள் உணவு இன்றி தவித்தேன். எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே எனக்கு பணம் கொடுங்கள், அதுப்போதும் என்றார். அதன்படியே போதும் என்று சொல்லும் அளவிற்கு அவரக்கு இராஜா பணத்தை கொடுத்தார்.
.
இரண்டாவது அமைச்சர், 'எனக்கு வீடு இல்லை. இந்த அரண்மனையைப்போல வீடு ஒன்று கட்டித்தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். வீடு கட்டித்தர இராஜா அரண்மனை வேலைக்காரரிடம் கட்டளையிட்டார்.
.
மூன்றாவது அமைச்சர், 'எனக்கு வீடும் உண்டு. பணமும் உண்டு, ஆனால் நான் போகும் வழி சரியாக இல்லை. எங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நல்ல பாதை போடப்பட வேண்டும்' என்றுக் கேட்டுக் கொண்டார். அதன்படி இராஜா பாதைப் போட்டுக் கொடுப்பதாக வாக்களித்தார்.
.
நான்காவது அமைச்சரை கேட்டபோது, அவரது கண்கள் கலங்கியது. பேச்சு வரவில்லை. அதைக்கண்ட இராஜா 'உனக்கு என்ன வேண்டும்? கேள், பாதி இராஜ்யமானாலும் தருகிறேன்' என்று கூறினார். அப்போது அந்த அமைச்சர் கண்களில் கண்ணீர் வழிந்தபடி, 'இராஜா எனக்கு பணமோ, வீடோ அல்லது வேறு எதுவுமே வேண்டாம்;. நீங்கள்தான் எனக்கு வேண்டும். உங்களுக்கு சரியென்றால் என் வீட்டில் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இராஜா உடனே, 'இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை, நான் வந்து உன் குடும்பத்தோடு இரண்டு நாட்கள் தங்குகிறேன்' என்றுக் கூறினார்.
.
அதன்படி இராஜா போய் தங்க திட்டங்கள் போட்டபோது, அந்த அமைச்சரின் வீடு பழைய வீடு, போக சரியான பாதை இல்லை என்று அறிந்து, இராஜா போய் தங்கியிருக்கும்படி அரண்மனைப் போன்ற வீட்டை கட்டச்சொல்லி, சரியான பாதை போடப்பட்டு, அவர் அங்கு தங்கியிருக்கும் நாட்கள் இராஜாவுக்கு தேவையானதை செய்து கொடுக்கும்படி பணமும் நிறைய அந்த அமைச்சருக்கு கொடுக்கப்பட்டது. அவர் கேட்காமலேயே மற்றவர்கள் பெற்றுக் கொண்ட அத்தனை ஆசீர்வாதங்களையும் இந்த அமைச்சர் இராஜாவை தன் வீட்டிற்கு அழைத்ததால் பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment