Monday, November 4, 2013

மிஷனெரி வாழ்க்கை - கிறிஸ்துவின் சாயல்

மிஷனெரி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல், எதிர்பாராத விதமாக கடும்புயலில் சிக்கி, சின்னாபின்னமாய் உடைந்தது. மிஷனெரி கடலில் தூக்கி எறியப்பட்டார். கடைசியாக கையில் சிக்கிய ஒரு கட்டையைப் பிடித்து மூன்று நாட்கள் கழித்து, கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். உணவும் தண்ணீரும் இன்றி சாகும் தருவாயில் இருந்தவரை அந்த கடலோர கிராம மக்கள் தூக்கி சென்று காப்பாற்றினார்கள். அவருடைய உடல் நிலை சீரானது.
.
அவர் அந்த கிராமத்திலேயே இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றினார். அவர்களோடு சேர்ந்து உழைத்தார். அவர் அவர்களுக்கு எவ்விதமான போதகமும் பண்ணவில்லை. தன்னுடைய விசுவாசத்தையும் அறிக்கையிடவில்லை. அவர் வேதாகமத்தைக்கூட அவர்களுக்கு வாசித்துக் காண்பித்ததில்லை.
.
ஆனால் யாருக்காவது சுகமில்லை என்றால் முழு இரவும் கண்விழித்து அவர்களை கவனித்துக் கொள்வார். பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரம் கொடுப்பார். தனிமையாயிருப்போரிடம் சென்று ஆறுதலாய் பேசுவார். சிறுபிள்ளைகளுக்கு படிப்பு சொல்லி கொடுப்பார். யாருக்காவது அநீதியாய் தீங்கிழைக்கப்பட்டால் அவர்களுக்காக வாதாடுவார்.
.
ஒரு நாள் சில மிஷனெரிகள் அந்த கிராமத்திற்கு வந்து இயேசுவின் அன்பையும் அவரது மனதுருக்கத்தையும், தாழ்மையையும் பற்றி எளிய முறையில் எடுத்துச் சொன்னார்கள். அதைக் கேட்ட அந்த மக்கள், இயேசு எங்களோடு பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். அதைக் கேட்ட மிஷனெரிகளுக்கு பெரும் அதிர்ச்சி! அந்த கிராமத்தில் வாழ்;ந்து வந்த அந்த மிஷனெரியை அழைத்து வந்து காண்பித்தனர். அவரைப் பார்த்ததும் மிஷனெரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் தொலைந்து போனார் என்று இந்நாள்வரை
அவர்கள் எண்ணியிருந்த மிஷனெரி அவர்தான். .
வேதத்திலே பார்ப்போமானால் நடமாடும் நிருபமாய் வாழ்ந்தார் அப்போஸ்தலனாகிய பவுல். அந்த வரிசையில் வாழ்ந்து, வாடாத ஜீவகீரிடம் பெற்றோர் அநேகர். அதிலும் வெளியுலகிற்கு அவர்கள் வாழ்வு தெரியாமலேயே மாண்டோரும் அநேகர். உண்மையாகவே தேவனின் சாயலை பிரதிபலிக்க விரும்புவோர் பிரபலமடைய விரும்ப மாட்டார்கள். பிரபலமடைவதை மட்டும் குறிக்கோளாய் கொண்டு வாழ்வோரிடம் கிறிஸ்துவின் சாயலை காணவும் முடியாது.

No comments:

Post a Comment