Sunday, September 30, 2012

ஊழியத்தில் பயம் வேண்டாம்

மத்திய ஆப்பிரிக்காவில் எட்டு நாடுகளுக்குள் இன்னும் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்ற இடங்களிலிருந்து வந்து, இங்குள்ளவர்களை கொல்வதும், சித்திரவதை செய்வதும் சகஜமான செயல்களாகி விட்டன. ஆனால் கர்த்தரின் மக்கள் ஜெபிக்கும்போது, தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக இந்த நாள் வரை பாதுகாக்கிற தேவனாக இருக்கிறார்.
.
ஒரு நாள் ஹிட்டு (Hutu) என்னும் கிராமத்தில் டுட்சி (Tutsi) என்னும் இடத்தின் போர் வீரர்கள் அந்த கிராமத்தை அழித்து விட வேண்டும் என்று எண்ணத்தோடு வந்தனர். அந்த இரவு நேரத்தில் ஒரு இளம் போதகரின் வீட்டிற்கு கைகளில் இயந்திர துப்பாக்கிகளுடன், உள்ளே நுழைந்து, போதகரும் அவருடைய குடும்பமும் அமர்ந்திருந்த இடத்தில் தங்கள் துப்பாக்கியை காட்டி, கொல்லபோவதாக மிரட்டினார்கள். அப்போது அந்த போதகர், 'எங்களை கொல்லுங்கள், ஆனால் அதற்கு முன் நாங்கள் குடும்பமாக ஜெபிக்க எங்களை அனுமதியுங்கள்' என்று கேட்டு கொண்டார். சரி, எப்படியும் இவர்கள் மரிக்கத்தானே போகிறார்கள் என்று அந்த வீரர்களும் அனுமதித்தனர்.
.
அதன்படி, அந்த போதகரின் குடும்பத்தினர் ஒருவரோடொருவர் கைகளை கோர்த்து கொண்டு, முழங்கால்படியிட்டு, தேவனிடம் இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றும் என்று ஜெபிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அப்படி ஊக்கத்தோடு ஜெபித்து எழுந்த போது, அந்த கொடியவர்கள் யாரையும் காணவில்லை, அவர்கள் வீட்டிலிருந்து மட்டுமல்ல, அந்த கிராமம் முழுவதிலுமிருந்து அவர்கள் ஓடி விட்டிருந்தனர். போதகரின் குடும்பத்திற்கும்  மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்றுமட்டும் அறிந்திருந்தார்கள்.
.
சில மாதங்கள் கழித்து, ஒரு பொதுவான இடத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டுட்சி மற்றும் ஹிட்டு என்னும் இரண்டு இடங்களிலிருந்தும் ஜனங்கள் வந்திருந்தார்கள். அதில் அந்த இளம் போதகர், சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை விவரித்து, அதிசயமாக தன் குடும்பமும், தன் கிராமத்திலிருந்தவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்றும், தாங்கள் யாருக்கும் இதுவரை என்ன நடந்தது என்று புரியவில்லை என்றும், கர்த்தர் ஏதோ பெரிய காரியத்தை செய்தார் என்று மாத்திரம் அறிந்திருக்கிறோம் என்றும் கூறினார்.
.
அப்போது கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு மனிதன் எழுந்து நின்று, 'உமக்கு தெரியுமா? அந்த இரவில் உம்மையும், உம்முடைய கிராமத்தில் உள்ளவர்களையும் கொல்வதற்காக வந்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் வீட்டில் நுழைந்து உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் சுடுவதற்காக இயந்திர துப்பாக்கியை குறிவைத்தேன். அப்போது நீங்கள் ஜெபிக்க அனுமதி கேட்டீர்கள். நாங்களும் அனுமதித்தோம், நீங்க்ள ஜெபித்து கொண்டிருந்தபோது, திடீரென்று உங்கள் அனைவரையும் சுற்றி ஒரு அக்கினி சுவர் எழும்பியது. அதிலிருந்து எழும்பிய ஜீவாலைகளினால் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை எங்களால் காண முடியவில்லை. அந்த அக்கினியின் வெப்பத்தினால், நீங்களும் உங்கள் வீடும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள் என்று நாங்கள் தீர்மானித்து, உங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினோம். வெளியே ஓடி வந்து பார்த்த போது, உங்கள் வீடு முழுவதும் அக்கினியால் சூழ்ந்திருந்ததே ஒழிய எரிந்து போகவில்லை.
அந்த அதிசயத்தை பார்த்த நாங்கள், பயந்து, உங்கள் கிராமத்தை விட்டே வெளியே ஓடி வந்து விட்டோம். பின் நான் அதை குறித்து சிந்தித்த போது, அந்த அக்கினி சாதாரண அக்கினி அல்ல, அது உங்கள் தேவனிடமிருந்து உங்களை காப்பதற்காக அனுப்பப்பட்ட அக்கினி! அன்றையதினம் உங்களை காப்பாற்றின உங்கள் தேவனை பற்றி அறிந்து கொள்ள நான் வந்திருக்கிறேன். நான் இந்த போர், கொலை கொள்ளை யாவற்றிலிருமிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். உங்களை காத்த அந்த வல்லமையுள்ள தேவனை குறித்து அறிந்து அவருக்கு என்னை கொடுக்க வந்துள்ளேன்' என்று கூறினான்.

No comments:

Post a Comment