Sunday, April 7, 2013

நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?


அந்த இளைஞன் படித்து முடித்து தனது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு தயாராகிக்கொண்டிருந்தான். நீண்ட நாட்களாக அவனுக்கு ஒரு ஆசை. அவன் கல்லூரிக்கு போகும் வழியில் ஒரு பிரபல டூ-வீலர் ஷோரூம் இருந்தது. அந்த ஷோரூமில் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தனது தந்தையால் அதை நிச்சயம் அவனுக்கு வாங்கித் தரமுடியும் என்று கருதிய அவன் தனது தந்தையிடம் போய், தான் விரும்புவதெல்லாம் அந்த பைக் ஒன்றை மட்டும் தான் என்றும் தனது பட்டமளிப்பு விழா நாளுக்கு முன்பு அதை வாங்கி தரும்படியும் கேட்டுக்கொண்டான்.

நாட்கள் ஓடின. அப்பா எப்படியாவது தான் விரும்பிய அந்த பைக்கை வாங்கித் தருவார் என்று அவன் ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அதற்குரிய அறிகுறியே தெரியவில்லை. பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. அன்று காலை, அவனது அறைக்கு அவன் தந்தை சென்றார். தனது மகனிடம் மிக அழகாக கிஃப்ட் பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலை கொடுத்தார்.

பைக்கை எதிர்பார்த்து காத்திருந்த மகனுக்கு ஏமாற்றம் ஒரு பக்கம் . அந்த கிஃப்ட் பேக்கினுள் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் ஒரு பக்கம். வேகவேகமாக அந்த பேக்கை பிரித்தான். உள்ளே அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு பைபிள் இருந்தது. அவனோ கோபத்தில், “உன்கிட்டே இருக்குற பணத்துல போயும் போயும் உன்னால எனக்கு பைபிள் தான் வாங்கித் தர முடிஞ்சதா? இதை நான் படிச்சதேயில்லையா?” என்று கத்திவிட்டு பைக் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

ஆண்டுகள் உருண்டோடுகின்றன. வீட்டை விட்டு வெளியேறியவன் நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி நல்ல நிலைக்கு வந்துவிடுகிறான். அவனுக்கென்று அழகான வீடு, அன்பான குடும்பம் அமைகிறது.
அப்போது தான் அவனுக்கு தனது தந்தையின் ஞாபகம் வருகிறது. வீட்டை விட்டு வெளியேரியதிலிருந்து அவன் அப்பாவை பார்க்கவில்லை.

“அப்பாவுக்கு இப்போ ரொம்ப வயசாகியிருக்கும். அவரை கூப்பிட்டு வந்து நம்ம கூட வெச்சிக்கணும்” என்று தோன்றுகிறது.

பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும்போதே அவனுக்கு ஒரு டெலிக்ராம் வருகிறது. அவன் தந்தை காலமாகிவிட்டதாகவும், உடனே வீட்டுக்கு வரும்படியும், தனது சொத்துக்களை எல்லாம் இவன் பெயருக்கு அவர் எழுதி வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

சோகம் ததும்ப, நெஞ்சம் அடைக்க உடனே தனது வீட்டுக்கு விமானம் மூலம் விரைகிறான். வீட்டில் தனது தந்தையின் அறைக்கு சென்று அழுதுகொண்டே பார்க்கிறான். அங்கே ஷெல்பில் அந்த பைபிள் தென்படுகிறது. கலங்கிய கண்களுடன் அதை எடுக்கிறான். பக்கங்களை புரட்டுகிறான். ஒரு பக்கத்தில் புக்மார்க் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு வசனத்தை அவன் தந்தை ஸ்கெட்ச் பேனாவில் அடிக்கோடிட்டிருந்தார்.

" பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? "
- மத்தேயு 7:11

No comments:

Post a Comment