Thursday, November 20, 2014

நம் பரம தகப்பனின் அன்பு

ஒரு சபையின் ஆராதனையில் போதகர் ஆராதனையை முடித்து விட்டு, அன்று பேச வந்திருந்த விசேஷித்த போதகரை குறித்து அறிமுகம் செய்து விட்டு போய் உட்கார்ந்தார். அந்த வயதான போதகரும் ஒரு உதாரணத்தின் மூலம் செய்தியை சொல்ல ஆரம்பித்தார்.
.
'ஒரு தகப்பனும், அவருடைய மகனும், மகனுடைய நண்பனும், என்று மூவருமாக பசிபிக் கடலில் ஒரு படகில் உல்லாச பயணமாக சென்றிருந்தார்கள். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று புயல் உருவாக ஆரம்பித்தது. படகு நடுக்கடலில் மாட்டி கொண்டது. தகப்பன் படகை ஓட்ட நன்கு அறிந்திருந்தவரானாலும், படகு புயலில் சிக்கி கொண்டதால் என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் படகு கவிழ்ந்து மூன்று பேரும் கடலில் விழுந்தார்கள்' அவர் சொல்லி கொண்டிருந்த சம்பவத்தை இரு வாலிபர்கள் உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்ததை அந்த போதகர் கவனித்தவாறே அந்த சம்பவத்தை தொடர்ந்தார்.
.
அந்த தகப்பன், தன் கையில் கிடைத்த கயிற்றை ஒரு பக்கத்தை தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, மற்ற நுனியை இரண்டு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பது என்று மனதில் போராடியவாறு பொங்கி எழும் அலைகளின் மத்தியில் போராடும் தன் மனதை கட்டுப்படுத்தியவாறு, தன் மகன் இரட்சிக்கப்பட்டவன் என்பதையும், மற்றவனோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்த தகப்பன், தன் மகனிடம் 'மகனே, நான் உன்னை நேசிக்கிறேன்' என்று கதறியவாறே, அந்த கயிற்றின் மற்றொரு நுனியை எடுத்து, மற்ற பையனிடம் வீசினார். அதை பிடித்தவாறே இருவரும் படகை பிடித்து கொண்டு கரை வந்து சேர்ந்தனர். மகனோ, கொந்தளிக்கும் கடலில் கண்களின் முன்பாக மூழ்கி போவதை கண்டவாறே தகப்பன் கரையில் போய் விழுந்தார். அவனது சரீரம் திரும்ப கிடைக்கவே இல்லை.
.
இதை சொல்லிவிட்டு போதகர் சற்று நிறுத்தியபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அவர் என்ன சொல்ல போகிறார் என்று ஆவலோடு அவர் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
போதகர் தொடர்ந்தார், அந்த தகப்பன் தன் மகன் மரித்தாலும், இயேசுவோடு கூட என்றும் ஜீவித்திருப்பான் என்றும், மற்ற வாலிபனோ, ஒருவேளை மரித்திருந்தால், நித்திய நரகத்திற்கு சென்றிருப்பான் என்பதை அறிந்திருந்ததால், நண்பனை காப்பாற்ற வேண்டி தன் சொந்த மகனை அவர் தத்தம் செய்தார்.
.
நம் பரம தகப்பனும், தம்முடைய ஒரே பேறான குமாரனை நாம் இரட்சிப்படைய வேண்டி, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாரே, இன்றே அவர் அளிக்கும் பாதுகாக்கும் கயிற்றை பிடித்து கொண்டு அவரிடம் வந்து விடுங்கள், இன்றே இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள்' என்று கூறி, தன்னிடத்தில் வந்து அமர்ந்தார். அவருக்குப்பின் போதகர் வந்து, சபையை முடித்தபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அந்த வயதான போதகரின் முன் வந்து, 'நீர் எங்களுக்கு சொன்ன கதை அற்புதமாக இருந்தது, நீங்கள் சொன்ன மாதிரி எந்த தகப்பன், தன் சொந்த மகனை விட்டு விட்டு மற்றவனை காப்பாற்ற முடியும்?' என்று கேட்டார்கள். அப்போது அந்த வயதான போதகர், தன் கண்களை துடைத்து கொண்டு, 'உங்களால் நம்ப முடியவில்லை இல்லையா? உங்களுக்கு தெரியுமா? அந்த தகப்பன் நான் தான் என்றும், என் மகனின் அந்த நண்பன் உங்கள் போதகர் என்றும் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?' என்று கேட்டார்.
.
ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் பிள்ளையை மற்ற பிள்ளை இரட்சிக்கப்படும்படியாக பலியாக கொடுக்கும்போது, நமது பரம தகப்பன் தமது சொந்த குமாரனை நாம் இரட்சிக்கப்படும்படியாக அனுப்பியது அதிக நிச்சயமல்லவா?

No comments:

Post a Comment