Wednesday, November 26, 2014

ஆத்துமா நஷ்டமானால் லாபம் என்ன?

ஒருகுடியானவன் ஒரு புதிய ஊருக்கு சென்றான். அந்த ஊரின் அழகையும், வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் நிலம் வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். அவர் அவனிடம் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன் சில ஊர் மக்களும் சென்றிருந்தனர்.
.
ஊர்த்தலைவர் அவனைப் பார்த்து, 'எங்கள் ஊர் வழக்கப்படி ஒரு நாள் நிலம் தருகிறோம்' என்றார். 'அப்படியென்றால் என்ன?' என்று வினவினான் குடியானவன். 'அதுவா, நீ இப்பொழுது புறப்பட்டு, எவ்வளவு தூரம் நிலத்தை சுற்றி வருகிறாயோ அந்த நிலமெல்லாம் உனக்கு சொந்தமாகி விடும். ஆனால் இருட்டுவதற்கு முன நீ புறப்பட்ட இடத்தை வந்தடைய வேண்டும். சிறிது தாமதித்தாலும் உனக்கு ஒன்றுமில்லை' என்றார்.
.
அதிசயமான இந்த முறை அவன் ஆசையை தூண்டி விட்டது. சரியென்று வேட்டியை வரிந்துக் கட்டிக்கொண்டு அவன் ஓட ஆரம்பித்தான். ஆகா! ஒரு அழகிய மாந்தோப்பு, இது கிடைத்தால் எவ்வளவு நலம் என்று அதையும் சுற்றி ஓடினான். கொஞ்ச தூரத்தில் ஓரு பூந்தோப்பு, அருகில் பளிங்கு போன்ற நீர் ஓடும் ஆறு, அதையும் சுற்றி வளைத்துக் கொண்டான். துரவு வயல் என கண்ணில்பட்ட எதையும் விடாமல் சுற்றினான். 'ஆயிரம் ரூபாய்க்கு எவ்வளவு இலாபம்? இந்த ஊர்க்காரர்கள் எத்தனை முட்டாள்கள்?' என எண்ணியபடி ஓடினான். இருட்ட ஆரம்பித்தது.
.
நிபந்தனை நினைவுக்கு வர தான் கிளம்பின இடத்தை நோக்கி விரைந்தான். கால்கள் தடுமாறின. இதயதுடிப்பு தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. வியர்த்து ஊற்றியது. நா வறண்டது. கண்கள் ஒளி மங்கின. தள்ளாடினவனாக எப்படியோ இடத்தை வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் அவனை கரம் தட்டி வரவேற்றனர். சில நொடிக்குள் சாய்ந்து விழுந்தான். விழுந்தவன் எழுந்தரிக்கவே இல்லை. 'இனி ஆறடி நிலம்தான் தேவை அவனை புதைக்க' என்றார் ஊர்த்தலைவர். அந்த குடியானவன் தான் ஆசைப்பட்ட அனைத்தையும் தனக்கு சொந்தமாக்கினான். ஆனால் தன் உயிரையோ இழந்து விட்டான்.
.
நம்மில் அநேகரின் ஓட்டம் இப்படித்தான் இருக்கிறது. எதிர்காலத்திற்காக சேமிப்பு, பிள்ளைகளுக்காக ஓவர் டைம் சம்பாத்தியம், ஞாயிற்றுக் கிழமைக்கூட கர்த்தரோடு, குடும்பத்தோடு செலவழிக்க மனமில்லை. ஜெபிப்பதற்கு, வேதம் வாசிக்க நேரம் செலவிடுவதில்லை. அவர்களது ஒரே நோக்கம் சம்பாதிப்பது. ஆலயம் செல்பவர்களையும், ஜெபிப்பவர்களையும் ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடுகிறவர்களையும் காணும்போது பிழைக்கத் தெரியாத முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
.
கை நிறைய சம்பாத்தியம் உள்ளது, ஆனால் உள்ளத்திலோ கவலை, பிள்ளைகள் மனம் போன போக்கில் வளர்ந்ததால் அவர்களைக் குறித்ததான கவலை, தேவ வசனமில்லாத வனாந்தரமான இருதயம் இதனால் என்ன பயன்?

No comments:

Post a Comment