Saturday, November 22, 2014

அலங்கோலத்திலிருந்து அலங்காரம்

ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. அதில் பல அறைகள் இருப்பினும் ஒரு அறை மட்டும் மிகவும் விசேஷமானது. அவ்வீட்டைப் பார்வையிட செல்லும் ஓவியரெல்லாம் அவ்வறை சுவர்களில் ஏதாகிலும் ஒரு ஓவியத்தை வரைந்து செல்வது வழக்கம். ஒரு காலத்தில் அவ்வறை மிக நேர்த்தியாக கட்டப்பட்டு அழகிய வர்ணம் பூசப்பட்டதாய் இருந்தது. ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சோடா குடிநீர் சேமிப்பு கலம் வெடித்து அதன் அழகிய சுவரெல்லாம் கறைபட்டு போயின.
.
அங்கு தங்கியிருந்த பிரபல ஓவியர் சர்.எட்வின் லாண்ட்சீர் என்பவர் அந்த கறைகளை பார்த்தபோது அவை நிலையாக நிற்கும் கறைகள் போல் அவருக்கு தோன்றின. பின் அவர் தன் கலைத்திறனால் அந்த கறைகளை விலைமதிக்க முடியாத ஒர் ஓவியமாக மாற்றிவிட்டார். அதில் அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் பின்னணி காட்சியை வரைந்தார். அதிலுள்ள பாறைகளும், மரங்களும் அவற்றிற்கிடையில் கெம்பீர தோற்றத்துடன் நிற்கும் ஒரு அழகிய ஆண்மானும் காண்போருக்கு உண்மை காட்சியைப் போல தோற்றமளித்தன். இந்த ஓவியம் ஸ்காட்லாந்தின் சிறந்த மலைக்காட்சி ஓவியங்களில் ஒன்றாக விளங்குகிறது. அன்று அலங்கோலமான கறை இன்று ஆயிரக்கணக்கானோரை தன் பக்கம் இழுக்கும் ஒரு அழகிய காட்சியாய் விளங்குகிறது.
.
ஒரு காலத்தில் நமது ஆவிக்குரிய வாழ்வும் நன்கு வளர்ச்சியடைந்த தேவனுடைய கண்களுக்கு அழகானதாக காணப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதோ நற்சுபாவங்கள், நல்ல பழக்கவழக்கங்கள், மிகச்சிறந்த ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாம் மறைந்து பாவ கறை படிந்து அலங்கோலமாய் காணப்படுகிறதோ? முந்தின நாட்களில் என்னில் காணப்பட்ட உன்னத அனுபவங்கள் மீண்டும் துளிர்ப்பது சாத்தியம் தானா? நான் இழந்து போயிருக்கும் ஜெப ஜீவியம் என்னில் புதுப்பிக்கப்படுமோ, எனற அங்கலாய்போடு காண்ப்படுகிறீர்களோ? உங்கள் ஆத்துமா தொய்ந்து போய் உள்ளதோ? சோர்ந்து போகாதீர்கள்!

No comments:

Post a Comment