Sunday, June 10, 2012

உபத்திரவத்திலும் உன்னதரின் கிருபை

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும். ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய பிளேடினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டு பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டு பூச்சியினால பற்க்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில் அதை எறும்புகள் இழுத்து சென்றன.



அச்சிறுவனின் தகப்பன் சொன்னார், 'மகனே அந்த பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது சகல முயற்சியும் செய்து தானாகவே வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சியடைந்திருக்குமே! நீயோ அதன் வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே' என்றார்.



இதுபோலத்தான், ஒரு நோயாளியின் சரீரத்தில் எந்த ஒரு வருத்தத்தையும் உருவாக்ககூடாது என ஒரு மருத்துவர் நினைத்தால் அந்த நோயாளி ஒரு போதும் சுகமடைய முடியாது. ஊசிகளையும், மருந்துகளையும் எடுத்து கொள்வதும், உரிய அறுவை சிகிச்சைகளை செய்வதும் நோயாளியை வருத்தமடையவே செய்யும். இருப்பினும் சுகமடைய வேண்டுமானால் அவற்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அது போல நாம் என் வாழ்வில் ஒரு சிறு கஷ்டமும் வரக்கூடாது என்று எண்ணினால், நாம் ஒரு போதும் ஆவிக்குரிய வாழ்வில் பூரணமடையவே முடியாது. தேவனுடைய திட்டமும் நம் வாழ்வில் நிறைவேறவே முடியாது. பிறருக்கு பயனுள்ள ஒரு வாழ்க்கையும் நாம் வாழ முடியாது. ஆகவே நாம் பாடுகளை பொறுமையாய் சகித்தும், துன்பத்தில் துவண்டு விடாமலும், பொறுமையாய் தேவனிடமிருந்து ஆவிக்குரிய பாடங்களை கற்று கொள்ள பிரயாசப்பட வேண்டும்.

No comments:

Post a Comment