Wednesday, June 13, 2012

வாலிபம் இயேசுவுக்கே!

ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒரு சந்நியாசியுடன் சாது சுந்தர் சிங் உரையாடி கொண்டிருந்தார். அப்போது சந்நியாசி கூறினார், 'சாதுக்களின் ஒழுக்க முறைகளை குறித்துள்ள எங்களுடைய சட்டதிட்டங்க்ள போற்றத்தக்கவை. ஏனென்றால் முதலாவது, மாணாக்க நிலை, பின்னால் குடும்பஸ்தன், வாழ்க்கையின் பின் பாகத்தில குடும்ப கவலையிலிருந்து நீங்கி காட்டுக்கு செல்லுதல், பின் வயதான காலத்தில் சந்நியாசித்தல், அதாவது வெறுத்து விடுதல் என்பவை. ஆனால் நீங்கள் எடுத்து கொண்ட முறையோ விபரீதமானது. உங்கள் வாலிப பிராயத்திலே சந்நியாசியாகி விட்டீர்களே' என்றார்.
அதற்கு சுந்தர்சிங் 'நான் சாதுவானதன் நோக்கம் உங்கள் நோக்கத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது. கண்ணியம் கிடைக்குமென்று நான் சாதுவாகவில்லை. உலகத்தில் இடையூறுகளின்றி சாதுவாக எளிய வாழ்க்கை நடத்தி கிருபையாய் என்னை இரட்சித்தவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். எனக்காக தம் உயிரை தந்தவருக்கு பலம் நிறைந்த என் வாலிப காலத்தில் சிறந்த ஊழியம் செய்ய வேண்டியது நியாயமல்லவா?' என்றார். இதை ஏற்க மறுத்த சந்நியாசியிடம், 'உமது சீடரில் ஒருவன், உமக்கு நன்றாய் பழுத்த மாம்பழத்தை கொடுப்பதற்கு பதிலாக சுவைமிக்க சதைப்பகுதியை உரித்து எடுத்து விட்டு, தோலும் கொட்டையுமானதை உங்களுக்கு கொடுத்தால் என்ன சொல்வீர்கள்?' என்றார். உடனே அவர், அப்படிபட்ட செய்கை மன்னிக்கப்படதக்கதல்ல, அது அவமானத்தின் உச்சநிலை' என்றார். அதற்கு சாது சுந்தர்சிங் ' நமது வாலிப பிரயாத்தை சிற்றின்பங்களில் கழித்து, பெலவீனமான கிழட்டு பிராயத்தில் எலும்புகளையும், தோலையும் கடவுளின் ஊழியத்திற்காக கொடுப்பது முட்டாள்தனமும், கடவுளை கேவலப்படுத்தும் செயலுமல்லவா?' என்றார்.

நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் மதம் அல்லது இறைவனை தேடுதல் என்பதற்கு எந்த இடம் கொடுக்கப்படுகிறது என்று கவனித்தீர்களா? ஒருவன் வாலிப வயதில் இஷ்டம் போல் வாழ்ந்து பின்பு தோய்ந்து போன வயதான நாட்களை இறைவனுக்கென்று ஒதுக்கி வைக்கிறான். இந்த எண்ண ஓட்டத்தின் தாகத்தை நம்முடைய கிறிஸ்தவ ஐக்கியத்திலும் காணலாம். வாலிபனொருவன் தன்னை ஊழியம் செய்ய அர்ப்பணிக்கும்போது, அநேகர் அதை வினோதமான காரியமாகவே பார்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் இரட்சிப்பை அனுபவித்த அந்த வாலிபனுக்கு தெரியும், வாலிபத்தின் முழு நிறைவையும் படைத்த தேவனால் மட்டுமே தரமுடியும் என்று. அதிலும் அவருக்கு ஊழியம் செய்வது போல உன்னத திருப்தி தரக்கூடியது இவ்வுலகில் ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment