Saturday, March 30, 2013

தாழ்மை - நற்பண்பு

ஒரு பெரிய
கர்வாலி மரமும் சிறிய புல்லும் பற்றிய ஒரு சிறுகதை உண்டு. அக்கர்வாலி மரம் தன்னருகில் வளர்ந்து வந்த சிறிய புல்லை நோக்கி, 'ஓ அற்பப்புல்லே, நீ எவ்வளவு பெலனற்றதும், நிலையற்றதும் சிறியதுமாயிருக்கிறாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கிறேன்' என்று அடிக்கடி பெருமையடித்துக் கொண்டது. தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அந்த புல்லுக்கு ஒன்றுமில்லாதிருந்தபடியால் அது எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஒரு நாள் ஒரு பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த கர்வாலி மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும், நேராக நிமிர்ந்து நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில் விழுந்து விட்டது.
.
.புயல் காற்று ஓய்ந்தபோது, கர்வாலி மரம் புல்லுக்கு என்ன நேர்ந்தது என்று
அறியும்படி மெதுவாக அதனை எட்டிப்பார்த்தது. புல் எப்போதும் போல்
தழைத்து நின்று கொண்டிருந்தது. அதை கண்ணுற்று வியப்படைந்த
கர்வாலிமரம், 'ஓ, சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே
அப்பலத்த புயற்காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய
அற்பப்புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப்புயலை சமாளிக்க
முடிந்தது?'என்று கேட்டது. அதற்கு அந்தப்புல் புன்முறுவுலுடன், 'அது
மிகவும் எளிதானது. காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை
குனிந்து கொள்வேன். அப்பொழுது அவை எனக்கு எந்த பிரச்சனையையும்
உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும்' என்று பதிலளித்தது,
.

.தாழ்மை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம் மற்றவரை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் மெய்யான மனத்தாழ்மையை கற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு ஆவியின் அடித்தளத்திலும் பெருமை நிறைந்திருக்கிறது. நம்மை யாராகிலும் தரக்குறைவாய் பேசி அவமதிக்கும்போது நம் மனம் புண்படுமாயின், உண்மையில் புண்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய பெருமையே ஆகும்.

No comments:

Post a Comment