Tuesday, February 18, 2014

நடிகர் ராமராஜனின் சாட்சி.


இவர் கோவையில் பகிர்ந்து கொண்ட சாட்சியை தொகுத்திருக்கிறேன்.

நடிகர் ராமராஜனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஓக்கூர். தந்தை ராமையா. நாடக நடிகர். தாயார் வெள்ளையம்மாள். ராமராஜனின் சகோதரர்கள் கருப்பையா, பாண்டி, சகோதரிகள் புஷ்ப வல்லி, வைராத்தாள். ராமராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் குமரேசன். ராமராஜன் பிறந்த ஒரு ஆண்டிலேயே சொந்த ஊரில் இருந்து மேலூருக்கு வந்து விட்டனர். இதனால், நடிகர் ராமராஜன் மேலூர் அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேலூர் அரசு கலை கல்லூரியில் பி.யூ.சி படித்தார்.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால், சென்னைக்குப் போக வேண்டும். சென்னையில் யாருடைய ஆதரவை நாடிச் செல்வது என்ற கேள்வி எழுந்து, தயக்கத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில், தங்கராஜ் என்ற நண்பர் மூலம் மேலூரில் 'ராஜா டூரிங் டாக்கீஸ்' என்ற திரையரங்கில் ராமராஜனுக்கு வேலை கிடைத்தது. அங்கு டிக்கெட் கிழித்து கொடுப்பது, கேஷியர் வேலை, மானேஜர் வேலை, படத்தை ஆப்பரேட் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்தார்.

இப்படி டிக்கெட் கிழிக்கும் வேளையில் இருந்து நடிகராகி, பின்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு ராமராஜன் அவர்கள் சமீபத்தில் கோவையில் பகிர்ந்து கொண்ட சாட்சியை உங்கள் முன் வைக்கிறேன்..

சாட்சி:

நான் பல நாட்களாக சாட்சி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் சரியாக அமையாத காரணத்தினால் வர முடியவில்லை. நான் இங்கே இன்று வந்து நிற்கிறேன் என்றால் அது இயேசுவின் மிகபெரிய கிருபை.

உலகம் முழுவதும் இருக்கும் ஒரே இறைவன் இயேசு கிறிஸ்து மாத்திரமே... நான் பல முறை தொலைகாட்சியிலும், மற்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.. MBBS போன்று பல துறைகளில் சிறந்து விளங்குகிற மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பல வியாதிகளை இயேசுவின் கிருபையால் குணப்படுத்துவதை பார்த்து வியந்திருக்கிறேன்.. என்னடா... கரகாட்டகாரன் படத்தில் மாங்குயிலே பூங்குயிலே என்று ஆடிகொண்டிருந்தவன் இங்கே கோவையில் சாட்சி சொல்லுகிறார் என்று.. வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய பாக்கியம்.

நான் மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்தேன். அங்கே உதவி டைரக்டர், டைரக்டர் பின் நடிகர் என்று வளர்ந்து பல திரைப்படங்களில் நடித்தேன். அனைத்து படங்களும் மிகபெரிய வெற்றியை கண்டது. எல்லோருக்கும் ராமராஜன் யார் என்று தெரிந்தது. பின்பு அரசியலில் அறிமுகமாகி மாண்புமிகு அம்மா புரட்சிதலைவி ஜெயலலிதா மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனேன்.. இந்த பாதையில் வந்து கொண்டு இருந்த பொது எல்லோருக்கும் வரும் சோதனை போல எனக்கும் சோதனை வர ஆரம்பித்தது.

2010 ம் ஆண்டு ஓர் இடத்திற்கு என் காரில் சென்று கொண்டிருந்தேன். அந்நேரத்தில் மிகப்பெரிய கார் விபத்தில் மாட்டி கொண்டேன். அந்த கார் விபத்தில் என் நண்பர் அந்த இடத்திலேயே மரித்து விட்டார். என்னுடன் இருந்த இன்னொரு நண்பர் பால்தங்கராஜன் என்பவரும் இருந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 15 நாட்களாக சுய நினைவை இழந்து படுத்த படுக்கையாக இருந்தேன்.

அங்கு வந்த பலரும் என்னை பார்த்து இவர் பிழைப்பாரா, பேசுவாரா, பழைய நினைவுகள் வருமா என்று வருத்தப்பட்டனர். பால்தங்கராஜ் இயேசுவை வழிபட்டு கொண்டிருப்பவர். அவர் என்னை மருத்தவமனையில் முழுவதுமாக கவனித்து கொண்டார். சுயநினைவு திரும்பினவுடன் நான் புலம்ப ஆரம்பித்தேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..

இதை கவனித்த தங்கராஜ் அவர்கள் "தைரியமாக இருங்கள், ஒன்றும் ஆகாது. நான் ஓர் போதகரை அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு ஓர் போதகரை அழைத்து வந்தார். அந்த போதகர் என் தலையில் கை வைத்து ஜெபம் செய்தார். எனக்கு ஏசுவே நேராக வந்து என் தலையில் கைவைத்தது போல உணர்ந்தேன்.

நான் இன்று உங்கள் முன் நின்று பேசுகிறேன். பல இடங்களுக்கு போகிறேன் என்றால் அதற்கு இயேசு கிறிஸ்துவே காரணம். முன்பெல்லாம் ஓர் பிரச்சினை என்றால் பல கோவில்களுக்கு சென்று வருவோம். ஆனால் மனதார இயேசுவை நினைத்தால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். வாழ்க்கையில் நமக்கு பிரச்சினை அதிகமாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நம்மோடு இருப்பவர் கர்த்தர் மாத்திரமே...

கர்த்தரை நம்பினோர் கைவிடப்படமாட்டார். பிரட்சினைகள் வரும்போது பல யோசனைகள் நம் மனதில் தோன்றி சஞ்சலப்படும். அந்நேரத்தில் ஆலயத்திற்குள் சென்று இயேசுவை உண்மையாய் வணங்குவோம் என்றால் தேவன் பதில் கொடுப்பார். நான் கதை சொல்லவில்லை. என் கண்முன் பார்த்த சம்பவங்கள் அது.

நான் நடிகர் செந்திலையும் அழைத்தேன். அவரும் பல நிலைகளில் கஷ்டப்பட்டு பல இடங்களுக்கு சென்று பிறகு இயேசுவை வணங்க ஆரம்பித்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று சாட்சி சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். ஆனால் அவர் வேறு வேலைகள் இருப்பதால் வர முடியவில்லை.

கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக கர்த்தர் உனக்கு துணை நிர்ப்பார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. இந்த சாட்சியை பகிர்ந்து கொள்ள செய்த ஏசுவிற்கு ஆல்லேலூயா ஸ்தோத்திரம் என்று கூறி முடிக்கிறேன்...

ஆமென்...

அன்பார்ந்த கிறிஸ்தவ நண்பர்களே.. தேவன் அற்புதமானவர். இன்றும் ஜீவிக்கிறார். இப்படிப்பட்ட சாட்சிகள் எழும்ப தொடர்ந்து தேவனை ஆராதிப்போம். பலரும் நடிகர்கள் மேடைகளில் நடிக்கிறார்கள் என்று எழுதுகிறார்கள். ஒருவர் கிறிஸ்துவுக்குள் வளரும் பொது நேரடியாக உதவி செய்ய முடியாவிட்டாலும் ஜெபிக்கவேண்டும். இன்று நம் சபைகளில் நம் குடும்பங்களில் உள்ள எவ்வளவு பேர் ஆலயத்தில் நடிக்கிறார்கள்? பல போதகர்களும் இன்றைக்கு அருமையாக சபைகளில் நடிப்பதை நாம் காண்கிறோம். அவர்களை நாம் அடையாளம் காட்ட மறுக்கிறோம். ஆனால் ஆரம்ப நிலையில் இருக்கும் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய போதனையை கொடுக்காமல் அவர்களை மட்டம் தட்டி பேசி சிதறடிக்கிறோம்.

நாம் சினிமா துறையில் நடிப்பதை ஆதரிப்பதில்லை. ஆனால் சினிமாவில் இருந்து இயேசுவை ஏற்று கொள்ள துடிக்கும் ஆத்துமாக்களுக்காக வாஞ்சிக்கிறேன். இவர்களின் சாட்சி நிச்சயம் ஒருவரையாவது வேதாகமத்தை எடுக்க தூண்டாதா என்று ஏங்குகிறேன்.

பவுல் சொன்னது போல ஓர் ஆத்துமாவை தேவனுக்குள் வழிநடத்துவது என்பது கர்ப்ப வேதனை அடைவதற்கு சமம். இன்று பலரும் இந்த கர்ப்ப வேதனை படுவதற்கு சங்கடப்படுகின்றனர். ஓர் பாரம்பரிய மதத்தில் இருந்து இயேசுவை ஏற்று கொண்டவுடன் முழு (100%) விசுவாசியாக மாறிவிட வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் எப்படி என்று யோசித்ததுண்டா?? ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்கள் படி வாழ நடை பயிலும் போது கீழே விழுவது சகஜம். இன்று வளர்ந்த கிறிஸ்தவர்களே முகமூடி அணிய ஆரம்பித்திருக்கிறார்கள்.. அவர்களை காட்டிலும் இவர்கள் வெளிப்படையானவர்கள். இவர்கள் விழுவதை பார்த்து கைகொட்டி சிரிக்காமல் முழங்காலை முடக்குவோம். இவர்கள் சினிமா துறைக்கே சாட்சியாக மாற ஜெபிப்போம்.

மற்றவர்களை குறைசொல்வதை விட்டுவிட்டு நாம் அனுதினமும் வேதத்தின் வழிவாழ முயற்சிகள் எடுப்போம். வெளிப்படுத்தல் கடை அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசு கூறியவற்றை உங்களுக்கு காண்பிக்கிறேன்...

வெளிப்படுத்தல் 22:11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

பரிசுத்தமாய் இருக்கிறேன் என்று சொல்கிறவன் வேதத்தை படித்து, அதன் படிவாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதில் அனுதினமும் வளர வேண்டும். இவர்களும் பரிசுத்தத்தில் வளர ஜெபிப்போம்.

தொடர்ந்து இப்படிப்பட்ட சாட்சிகள் எழும்ப ஜெபியுங்கள். இவர்கள் தேவனுக்குள் உண்மையாய் வாழ ஜெபத்தில் போராடுங்கள்.

தேவனுடைய கிருபை உங்களோடிருப்பதாக.. ஆமென்

ஆக்கம், தொகுப்பு, படைப்பு
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment