Tuesday, February 18, 2014

பெருமைக்கு எதிர்த்து நிற்போம்

கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஓவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால், யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனமாயிருக்க வேண்டும். வெற்றிக்கு பின் அதிக ஞானத்தோடும், பொறுமையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். வெற்றி களிப்பில் தான் பெருமையான எண்ணங்கள் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் இந்த பெருமையை கூறலாம்.
.
டி.எல். மூடி என்ற தேவ ஊழியர் ஒரு முறை இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு மாநகரில், மிக பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். படிகட்டை தாண்டியதும், ஒரு நபர் விரைந்து வந்து மூடியின் கையை குலுக்கி, 'இன்று மிக பிரமாதமாக பேசினீர்கள்' என்று பாராட்டினார். உடனே மூடி, 'இன்று என்னை பாராட்டும் இரண்டாவது நபர் நீங்கள்' என்றார். அந்த நபர் குழம்பிப்போய் தனக்கு முன் எவரையும் காணாததினால், 'எனக்கு முன்னால் உங்களை பாராட்டியது யார்?' என்று கேட்டார். மூடி கூறினார், 'நான் செய்தியை முடித்து விட்டு கீழே இறங்கும் முன்பாக சாத்தான் என் காதில் வந்து, 'மூடியாரே, இன்று உம் பிரசங்கம் அபாரம் என்று பாராட்டினான்' என்றார்.
.
மூடி பிரசங்கியாருக்குள் பெருமை என்ற பாவத்தை நாசுக்காக புகுத்த சாத்தான் எடுத்த தந்திரத்தை பாருங்கள். ஆம், சாத்தான் நம்மை வீழ்த்த பொறாமை, பெருமை போன்ற வெளியரங்கமாய் தெரியாத வஞ்சிக்கிற பாவங்களால் நம்மை விழத்தள்ள சந்தர்ப்பம் பார்த்து கொண்டே இருக்கிறான் என்பதை மறந்து போக கூடாது. ஆகவே எப்போதும் நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment