Tuesday, February 18, 2014

தப்புவிக்கும் கரம்

ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand) என்னும் ரோமானிய யூதர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினால் கம்யூனிச சிறையில் அடைக்கப்பட்டு, 12 வருடங்கள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு, தாம் கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையை மறுதலிக்குமாறு வற்புறுத்தப்பட்டார். ஆனால் அவர் விடுதலையாகும் வரைக்கும் கர்த்தரை மறுதலிக்கவேயில்லை. அவர் தாம் எழுதிய The Oracles of God என்ற புத்தகத்தில், அந்த சிறைச்சாலையின் கொடூரமான சூழ்நிலையிலும் அமைதியோடும், சமாதானத்தோடும் எப்படி தன்னால் இருக்க முடிந்தது என்பதை ஒரு சிறு கதையின் மூலம் விளக்கி எழுதியுள்ளார்.
.
ஒரு கப்பலில், அந்தக் கப்பலின் மாலுமியோடு அவரது மனைவியும் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கடலில் ஏற்பட்ட புயலினால் கப்பல் அங்கும் இங்கும் அலைமோதியது. அப்போது அந்த மாலுமியின் மனைவி அவரிடம், “இந்தமாதிரி கப்பல் அலைமோதி தடுமாறிக் கொண்டிருக்கும் போது உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது?” என்றுக் கேட்டாள். அப்போது அந்த மாலுமி அருகிலிருந்த ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் நெஞ்சுக்கு நேராக வைத்து, "நீ இப்போது எப்படி அமைதியாகவும் பயப்படாமலும் இருக்கிறாய்" என்றுக் கேட்டார். அதற்கு அவள், "நான் ஏன் பயப்படவேண்டும்? இந்தக் கத்தி என் அன்புக் கணவனது கரங்களில் அல்லவா இருக்கிறது? நீங்கள் என்னை நேசிக்கிறபடியால், என்னை குத்த மாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்" என்றுக் கூறினாள்.
.
அப்போது அந்த மாலுமி, "அதுதான் நான் அமைதியாய் இருப்பதன் காரணமும் கூட, இந்த அலைகளும் கொந்தளிப்பும் என் அன்பு தகப்பனின் கரங்களில் இருப்பதால், அவருக்கு இந்த அலைகளும் அடங்கும் என்பதால் நான் இந்தப் புயலைக் குறித்து பயப்படாமல் இருக்கிறேன்." என்று கூறினார்.
.
அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில் புயல் வீசிக் கொண்டிருக்கிறதா? என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? எங்கு போவது என்று தெரியாமல் நிலைத் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? நமக்கு ஒரு தேவன் உண்டு. அவர் காற்றையும் கடலையும் அதட்டி அமைதலாயிரு என்று கட்டளையிட்டு புயலை அமைதலாக்கினவர். அவர் உங்க்ள வாழ்க்கையில் ஏற்படும் புயலையும் அலைகளையும், காற்றையும் அமைதலாக்க வல்லவர். கவலைப்படாதீர்கள். சோர்ந்துப் போகாதிருங்கள். 'என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்'. (எரேமியா -33:3) என்றவர் இன்றும் மாறாதவராகவே இருக்கிறார்

No comments:

Post a Comment