Sunday, October 28, 2012

முழங்கால்களால் சாதிக்க முடியும்

ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்ற அவர் அப்பட்டணத்தை சுற்றி பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவிசாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்று போய் விட்டதே என்று நினைத்தவராக பட்டணத்தின் இன்னொரு பகுதிக்கு வந்தார்.
.
அங்குள்ள சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய கற்களை அவர் சம்மட்டியால் உடைத்து கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று, 'ஐயா உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது?' என்று கேட்டார். அதற்கு கல் உடைப்பவர், 'ஐயா கடினமான பாறையை உடைக்கும்போது. முழங்காலில் நின்று உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும்போது, நமது வல்லமை அதிகரிக்கும். எப்படிப்பட்ட கடினமான பாறையையும் உடைத்து விடலாம்' என்றார். அவர் மூலம் தேவன் தன்னோடு பேசுவதை ஊழியர் ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார். உள்ளத்தில் உற்சாகமடைந்தவராக வீடு திரும்பினார். அன்றிலிருந்து பல மணி நேரம் முழங்காலில் நின்று ஜெபித்து வெற்றி பெற்றார்.
.
உண்மைதான், முழங்காலில் நிற்பதுதான் வெற்றியின் இரகசியம்! வேதத்திலே தானியேல், எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாம் ஜெபித்து வெற்றி கண்டனர். நாமும் முழங்காலில் நின்று இருதயத்தை ஊற்றும்போது, மிகுந்த பெலனை பெற் முடியும். முழங்கால் ஜெபம் பல தடைகற்களை தகர்த்து வெற்றி பெற செய்யும்.

No comments:

Post a Comment