Thursday, October 4, 2012

பாவத்தோடு விளையாடாதே

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கிராமத்திலே பாம்பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். தன்னிடமிருந்த ஒரு மலைப் பாம்பைக் கொண்டு  வேடிக்கைக்காட்டி அதன் மூலம் வரும் பணத்தால் வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தார். பொது மக்கள் கூடுகின்ற இடத்திற்கு சென்று அப்பாம்பிடம் தன்னை சுற்றிக் கொள்ளவும், தன் மேல் ஏறவும் இறங்கவும் கட்டளையிடுவார். அவர் சொற்படியே பாம்பும் செயல்படும். மக்கள் இதை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்து காசுகளைக் கொடுப்பார்கள்.
இவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், ‘பாம்போடே விளையாடாதே, அது என்றாவது ஒருநாள் அதன் குணத்தைக் காட்டிவிடும். வேறு ஏதாவது நல்ல தொழிலை செய்து பிழை’ என்பார்கள். ஆனால் அவரோ அதை காதில் போட்டுக் கொள்ளாமல் வழக்கம் போல செய்து வந்தார். ஒரு நாள் மக்கள் மத்தியில் பாம்போடு வேடிக்கைக் காட்டி தன்னைச் சுற்றிக் கொள்ளுமாறு பாம்பிற்கு கட்டளையிட்டார். அதுவும் அவரது கால்களில் எறி கழுத்து, தலை வரை சுற்றிக் கொண்டது. அதோடு அவர் மக்களை மகிழ்விக்க நடனமாடினார். சில நிமிடங்களில் இறங்க கட்டளையிட்டார். ஆனால் பாம்பு ஆக்ரோஷமாக அவரை இறுக்கியது. எலும்புகள் நொறுங்கின. வாயிலிருந்து இரத்தம் வடிய மாண்டு போனார்.
பிரியமானவர்களே, நம்மில் சிலர் கூட சிற்றின்பத்திற்காகவும், நண்பர்களின் உறவு அறுந்துப் போகக் கூடாது என்று எண்ணியும் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கலாம். அது போதைப் பொருள், அசுத்த சினிமா, ஆபாச புத்தகங்கள், மதுபானம், கூடாத நட்பு, பான் பராக் என ஏதோ ஒன்றாக இருக்கலாம். வேதமும் தேவனும் அநேக முறை அதை விட்டுவிட எச்சரித்தும் அதை கேட்காமல், பாவத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். நண்பரே, இப்போது இன்பமாய் தோன்றும் இச்செயல்கள், ஒரு நாள் உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடும். தனிமையில் குற்ற உணர்வு உங்களை உருக்குலைத்து விடும். பாவம் உங்கள் எதிர்கால இலட்சியத்தை அழித்து விடும். பாவம் உங்களைக் குறித்து தேவன் வைத்துள்ள திட்டத்தை சிதைத்து விடும். முடிவில் பாவம் உங்களை பாதாளத்தில் தள்ளிவிடும்.

No comments:

Post a Comment