Wednesday, October 10, 2012

உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

ஒரு காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. அந்த யானை எப்பொழுதும் மற்ற பறவைகளோடும், மிருகங்களோடும் தன்னை ஒப்பிட்டு பார்த்து, மனம் சோர்ந்து போகும். அதன் முகம் கவலையினாலும் துக்கத்தினாலும் நிறைந்திருக்கும். ஒரு நாள் சிட்டுக்குருவி உயர எழுந்து பறந்து போவதை பார்த்தவுடன் அந்த யானைக்கு தாங்க முடியாத துயரம் வந்து விட்டது, 'எனக்கு சிறகுகள் இல்லையே, ஆகாயத்தில் பறப்பதற்கு' என்று தேம்பி தேம்பி அழுதது. உணவு சாப்பிடக்கூட விருப்பமில்லை.
.
அங்கே ஒரு அருமையான நைட்டிங்கேல் பறவை இனிமையாக பாடிக் கொண்டிருந்தது. யானைக்கு
இன்னும் கவலை அதிகரித்து விட்டது. 'இந்த பறவைகளெல்லாம் இவ்வளவு அழகாக பாடுகிறதே எனக்கு மட்டும் பாடுகிற தாலந்தை தரவில்லையே, கடவுள் ஓர வஞ்சனை செய்து விட்டாரே' என்று தேம்ப ஆரம்பித்து விட்டது. இன்னும் ஒரு வண்ணத்துப்பூச்சி அழகாக மலரின் மேல் அமர்ந்த தேனை உறிஞ்சி சுவைத்து கொண்டிருந்தது. யானை அதை கண்டதும் 'வண்ணத்துப்பூச்சுக்கு மட்டும் தேவன் சுவையான உணவை கொடுத்திருக்கிறார். ஆனால் நானோ சுவையற்ற மரங்களையும், இலைகளையும் சாப்பிட்டு காலத்தை தள்ளி கொண்டு இருக்கிறேனே' என்று புலம்பியது.
.
புள்ளி மான்கள் துள்ளி ஓடுவதை யானை கண்டவுடன் 'ஐயோ அழகிய புள்ளி மான்களின் நிறம் எனக்கு இல்லையே, வேகமாய் ஓட மெல்லிய கால்கள் இல்லையே' என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்தியது. அங்கே எறும்புகள் பூமிக்கடியில் சென்று வருவதை பார்த்து தனக்கு பூமிக்கு அடியில் சென்று வர வழியில்லையே எனறு அழுது கொண்டே இருந்தது. கடைசியில் அந்த யானை மிகவும் மெலிந்து பெவீனப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. அப்பொழுது காட்டிலுள்ள மிருகங்களும், பறவைகளும் அந்த யானையிடம் வந்து 'யானையாரே, கர்த்தர் உங்களுக்கு எவ்வளவு வல்லமையும், பெலனையும் தந்திருக்கிறார். எவ்வளவு வலிமையான பெரிய கால்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, தந்தம் எவ்வளவு விலையேற பெற்றது, சிருஷ்டிப்பிலே நீங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதை எண்ணி பாருங்கள். உங்களை குறித்து 'யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்களே' என்று தேற்றின. அப்போழுதுதான் கர்த்தர் தனக்கு கொடுத்த மேன்மையை அந்த யானை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தது. கர்த்தருக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தது.

No comments:

Post a Comment