Friday, February 22, 2013

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

No comments:

Post a Comment