Sunday, February 24, 2013

FMPB - முதல் மிஷனரியான Rev.Harris Hilton

FMPB (Friends Missionary Prayer Band) என்ற மிஷனரி ஸ்தாபனத்தின் முதல் மிஷனரியான Rev.Harris Hilton (வயது 75) அவர்கள் 2012 டிசம்பர் 16ம் தேதி கர்த்தருக்குள் மரித்தார். அவர் சிமெண்ட் ஃபேக்ட்டரியில் சூப்ரவைசராக பணியாற்றி, பின்பு மிஷனிரி ஊழியத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்தார். ஆசியாவிலேயே மிக அதிக மிஷனரிகளை கொண்ட ஸ்தாபனம் FMPB மிஷனரி ஸ்தாபனமாகும். டாக்டர்.சாம்கமலேசன், சகோ.P.சாமுவேல், Dr.Rev.தியோடர் வில்லியம்ஸ் இன்னும் சிலரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் FMPB மிஷனரி ஸ்தாபனம். சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் FMPB பொது செயலாரராக பல வருடங்கள் பொறுப்பேற்று, FMPB முழுநேர ஊழியராகவும் பணியாற்றினார். 

1969ம் வருடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியமலை (சந்தனமர வீரப்பன் வாழ்ந்த அடர்த்தியான வனமாகும்) என்ற மலையில் வாழும் ஆதிவாசிகள் வசிக்கும் பணிதளத்தில் சுவிசேஷம் அறிவிக்கும் முதல்மிஷனரி பணியை FMPB தொடங்கியது. அப்போது டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நானும், முதல் மிஷனரியாக சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களுடன் அந்த மலையில் வைத்து FMPB தலைவர்களால் முதல் மிஷனரிகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நாங்கள் இருவரும் அங்கு பன்றி வளர்க்கும் குட்டையான குடிசைக்குள் தங்கி ஊழியம் செய்தோம். நடுவில் மிஷனரி ஊழியம் பணம் இல்லாததால் தடைப்பட்டது. நாங்களும் டேனிஷ்பேட்டைக்கே திரும்பி வந்தோம். பணம் FMPB ஸ்தாபனத்துக்கு சேரும்வரை தற்காலிகமாக சிலமாதம் மிஷனரி ஊழியம் நிறுத்தி வைக்கப்பட்டது. சில வாரங்களில் மிஷனரி பணி மீண்டும் தொடங்கப்பட்டபோது நான் என் குடும்ப பொறுப்பு காரணமாக மிஷனரி ஊழியத்துக்கு போகாமல் பழையபடி டாக்டர் தொழில் செய்யவேண்டிய இக்கட்டான நிலை என் வீட்டில் ஏற்பட்டது. ஆனால் ஹாரிஸ் ஹில்டனும் வேறு சிலரும் அதே மலைக்கு மிஷனரிகளாக மறுபடியும் புறப்பட்டு சென்றனர். ஹாரிஸ் ஹில்டன் மிகுந்த ஆத்தும பாரம் உள்ளவர். அவருக்கு மனைவி, நான்கு பிள்ளைகள் உண்டு. பல கஷ்டங்களுக்கு மத்தியில் அற்புதமாக ஊழியம் செய்தார். மலையில் சபை உருவாயிற்று, ஆலயம் கட்டப்பட்டது, தேவ நாமம் மகிமைப்பட்டது.

சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்கள் வேதாகம கல்லூரிக்கு அனுப்பபட்டு ஆயராக ஆக்கப்பட்டு FMPBயின் எல்லா மிஷனரி பணிதளங்களை சந்தித்து செயல்படும் ஊழியராக பொறுப்பேற்றார். அதன்பின் மிஷனரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சர்க்கரை நோயினால் ஒருகால் வெட்டி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மனைவியும் மரித்தார். இப்படி பல போராட்டங்கள் மத்தியிலும் தொடர்ந்து மிஷனரி ஊழியத்தை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தார், நல்ல ஓட்டத்தை முடித்தார்.
2012 டிசம்பர் 16ம் தேதி கிட்னி பெயிலியர் ஏற்பட்டு மரண தருவாயில் டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நல்ல ஆயத்தத்துடன் தன் ஆத்துமாவை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். 

கடந்த மாதம் நான் ராஜஸ்தான் சென்றபோது டெல்லி சென்று ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அவரை சந்தித்து மரணத்துக்கு அவரை ஆயத்தப்படுத்தி ஜெபித்து வந்தது எனக்கு திருப்தியாக இருந்தது. அவருக்கோ அன்றைய என் ஜெபம் ஆத்ம பெலனாக இருந்தது. அவரின் நல்ல ஊழியத்துக்காக, அவரின் சாட்சியுள்ள ஜீவியத்துக்காக தேவனைத் துதிக்கிறேன்.

அவர் பெற்ற பிள்ளைகள் நான்கு பேரும் ஊழியத்தில் இருக்கிறார்கள். மருமக்களும் ஊழியத்தை செய்கிறார்கள். அவருடைய பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் கர்த்தர் ஆறுதலை அளிப்பாராக. ஆமென்.

No comments:

Post a Comment