Saturday, December 15, 2012

தேவனுடைய பார்வையில் ஐசுவரியவான்

செல்வந்தனான மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான கார்களும், பெரிய மாளிகையும், அநேக வீட்டு வேலைக்காரர்களும் இருந்தார்கள். அந்த மனிதன் கடவுளைக் குறித்து எந்த பயமும் இல்லாதவராக, தன் பணத்தை தன் இஷ்டப்படி அனுபவித்து கொண்டிருந்தார்.
.
அவருக்கு ஜான் என்கிற ஒரு கிறிஸ்தவ வேலைக்காரன் இருந்தார். அவர் வேதத்தை வாசித்து, தினமும் ஜெபித்து கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிற மனிதனாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவருக்கு தேவன், அந்த ஊரில் உள்ள பணக்கார மனிதன் மரிக்க போகிறான் என்று வெளிப்படுத்தினார்.
.
ஜானுக்கு தெரியும், அந்த ஊரிலேயே மிகவும் பணக்கார மனிதர் தன் எஜமான்தான் என்று. அவருக்காக ஜெபித்து விட்டு, அந்த பணக்காரரிடம் சென்று, 'ஐயா இன்று நான் ஒரு கனவு கண்டேன், அது என்னை மிகவும் கலங்க வைத்திருக்கிறது. இந்த ஊரில் உள்ள பணக்காரர் இன்று இரவு 12 மணிக்கு மரிக்க போகிறார் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். உடனே நான் எழுந்து விட்டேன். ஐயா நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?' என்று மிகவும் அக்கறையுடன் கேட்டபோது, ஜானை அந்த பணக்காரர் மேலும் கீழும் பார்த்தார். ஏழ்மையான தோற்றம், பணக்காரரிடம் பேசுவதற்கும் அச்சப்பட்டு பேசினது போலிருந்தது அவருடைய சத்தம், ஆனால் நம்பத்தக்கதான அளவு விசுவாசம் நிறைந்த மனிதர். பணக்காரர் சிரித்து விட்டு, சொன்னார், 'ஜான் என்னைப் பற்றி கவலைப்படாதே, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்' என்று கூறிவிட்டு, வீட்டின் உள்ளே சென்று விட்டார்.
.
சற்று நேரம் அங்கே நின்று, கர்த்தரை இவர் ஏற்றுக் கொண்டுள்ளாரா? ஓன்றும் தெரியவில்லையே என்று நினைத்தவாரே, ஜான் அவருக்காக ஜெபித்து விட்டு, தேவன் ஏன் தனக்கு இந்த காரியத்தை வெளிப்படுத்தினார் என்று யோசித்தவாறே தன் வீட்டிற்கு சென்றார். பணக்காரருக்கோ, ஜான் சொன்ன காரியம் உறுத்திற்று. சரி, குடும்ப வைத்தியரை அழைத்து, தன்னை பரிசோரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்த வைத்தியரை அழைத்தார்.
.
அந்த வைத்தியரிடம் காரியத்தை சொல்லி, இரவு 12 மணி வரை அவரை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவராக, அவரோடு சீட்டு விளையாடிவிட்டு, உலகத்தின் காரியங்களை சுற்றி வலம் வந்து பேசி கொண்டிருந்தபோது, 12 மணியாக ஐந்து நிமிடம் இருந்தது. அந்த கடைசி ஐந்து நிமிடங்கள் அந்த பணக்காரரை இருப்புக் கொள்ளாமல் செய்தது.
.
மூன்று நிமிடம், இரண்டு நிமிடம், கடைசியாக ஒரு நிமிடமும் கடந்து, கடிகாரம் 12 அடித்தது. அந்த பணக்காரர் நிம்மதி பெருமூச்சு விட்டார். தான் சாகவில்லை என்ற உணர்வு அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன்னோடு இருந்த வைத்தியருக்கு விடைக் கொடுத்து அனுப்பி விட்டு, தன் படுக்கைக்கு சென்று படுத்திருப்பார், வீட்டு வாசலின் மணி வேகமாக அடித்தது. யார் இந்த நடுராத்திரியில் வந்து கதவை தட்டுவது என்று நினைத்தவராக, கதவை திறந்தபோது, ஒரு சிறுமி, கலைந்த தலையுடனும், ஏழ்மையான உடைகளுடனும், அழுது சிவந்த கண்களோடு நின்றிருந்தாள்.
.
பணக்காரர், 'யார் நீ? உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார், அதற்கு சிறுமி, 'என் தகப்பனார் சற்று நேரம் முன்புதான் இறந்தார்' என்று கூறினாள். அந்த பணக்காரர் 'யார் உன் தகப்பன்?' என்று கேட்டபோது, அந்த சிறுமி, 'உங்கள் வீட்டில் வேலை செய்யும் ஜான்தான் என் அப்பா' என்று கூறினாள். ஜான் தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தபடியால், அவரே தேவனுடைய பார்வையில் ஐசுவரியவானாக, விலைமதிப்பற்றவராக காணப்பட்டார்.

No comments:

Post a Comment