Monday, December 10, 2012

ஜான் வெஸ்லி - தேவனுடைய ஆவியினாலே ஆகும்

பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் ஜான் வெஸ்லி அவர்கள் ஒரு நாள் இரவு நடு இரவை தாண்டி குதிரையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கடுமையான குரல் ‘நிறுத்து’ என்று கூறுவதை கேட்டார். குதிரையை நிறுத்தியபோது, ஒரு திருடன், கையிலிருக்கும் பணத்தை கேட்டான். பணத்தை கொடுக்காவிட்டால் உயிரை எடுப்பதாக கத்தியை காட்டி மிரட்டினான்.
.
வெஸ்லி தன் கையிலிருந்த சில காசுகளை அவனிடம் கொடுத்தார். அவன் வேறு இடத்தில் ஒளித்திருப்பாரென்று அந்த குதிரையை தேடியபோது, ஒரு சில புத்தகங்களை மட்டும் கண்டு ஏமாற்றத்துடன், திரும்பி ஓட ஆரம்பித்த போது, வெஸ்லி அந்த திருடனை பார்த்து, ‘நில், உனக்கு தருவதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது’ என்று கூறினார். அந்த திருடன் எதையோ கொடுக்க போகிறார் என்று எண்ணி, திரும்பி அவரை நோக்கி வந்தான். வெஸ்லி கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவராக அவனிடம், ‘என் நண்பனே, நீ ஒரு நாள் இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக வருத்தபடுவாய், அப்படி வருத்தப்படும்போது, நினைத்து கொள், இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உன்னை சுத்திகரிக்கும் என்று’ என்று கூறினார். அந்த திருடன் அதை கேட்டுவிட்டு, திரும்ப தன் வழியே வேகமாய் கடந்து போனான், வெஸ்லி, அவன் இரட்சிக்கப்பட வேண்டுமே என்று ஜெபித்தவராக கடந்து சென்றார்.
.
சில வருடங்கள் கழித்து, வெஸ்லி, சாயங்கால ஆராதனை கூட்டத்தை முடித்து, வெளிவரும்போது, அநேகர் அவரை காண வேண்டும் என்று முந்தியடித்து கொண்டு வந்தார்கள். அதில் ஒரு மனிதர், எபபடியாவது அவருடன் தான் பேச வேண்டும் என்று அங்கிருந்த மூப்பர்களிடம் மன்றாடினார். அப்படி பேச அவருக்கு தருணம் கிடைத்த போது, அந்த திருடன் தான்தான் என்றும், இப்போது தான் ஒரு தொழிலதிபர் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக தான் தேவனின் பிள்ளை என்றும் அவர் வெஸ்லியிடம் கூறினார். பின்னும் அவர் ‘ஐயா, உங்களுக்கு மிகவும் நன்றி, நீங்கள் அன்று அந்த வார்த்தைகளை சொல்லாதிருந்தால் நான் இன்னும் திருடனாகவே இருந்திருப்பேன், நான் உங்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறேன்’ என்று கூறி அவரது கரத்தை எடுத்து முத்தமிட்டார். அப்போது, வெஸ்லி, ‘இல்லை, என் நண்பனே, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்தபடியால், அவருக்கே நாம் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment