Monday, December 10, 2012

கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள்

ஒரு சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான். அவன் முகம் மிகவும் கோபமாக இருந்தது. அதை கண்ட அவனுடைய தாத்தா அவனை அழைத்து 'என்ன நடந்தது? ஏன் கோபமாய் இருக்கிறாய்' என்று கேட்டார். அதற்கு அவன், 'பின்ன என்ன தாத்தா? நானும் அப்பாவும் கடைக்கு போயிருந்தோம். அப்பா எனக்கு ஒரு ஏரோபிளேனை விளையாட வாங்கி தந்தார். நான் அதை வெளியில் எடுத்து கொண்டு போய் பார்த்து கொண்டிருந்தபோது, சில பொறுக்கி பசங்க என்னோடு சண்டையிட்டு, நான் அப்பாவை கூப்பிடுவதற்குள் அதை பறித்து கொண்டு போய் விட்டார்கள். அவன்கள் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால்...' என்று கோபமுடன் கூறினான். அதை கேட்டு கொண்டிருந்த தாத்தா, ' நீ கோபப்பட்டு இப்போது என்ன ஆகப் போகிறது? உன்னுடைய ஏரோப்ளேன் போனது போனதுதான். அது கிடைக்க போகிறது இல்லை, உனக்கு தெரியுமா, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு நரிகள் எப்போதும் இருக்கின்றன. ஓன்று வெள்ளை நரி, மற்றொன்று கறுப்பு நரி. இந்த இரண்டு நரிகளும் எப்போதும் சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. வெள்ளை நரி, போனால் போகட்டும் என்று கூறும், அன்போடு நடந்து கொள்ளும்படி கூறும். ஆனால் கறுப்பு நரி, அது எப்படி, அதை சும்மா விடுவது என்று அதிகமாக வம்பை வளர்த்து கொண்டிருக்கும்' என்று கூறினார். அப்போது அந்த சிறுவன், 'எந்த நரி ஜெயிக்கும்' என்று கேட்டான். அதற்கு தாத்தா, 'எதற்கு நாம் அதிகமாய் தீனி போடுகிறோமோ அதுதான்' என்றார்.

No comments:

Post a Comment