Monday, December 10, 2012

கடன் வாங்காதபடி எச்சரிக்கிற தேவனாயிருக்கிறார்

சமீபத்தில் ஒரு முக்கியமான இடத்தில் ஒரு கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கும்படி ஒரு குடும்பத்தினர் தீர்மானித்தனர். அதன் விலையை விசாரித்தபோது, அது 90,00,000 என்று தெரிய வந்தது. அந்த இடம் மிகவும் முக்கியமான இடத்தில் இருந்ததால் எப்படியாவது அதை வாங்க வேண்டும் என்று கணவர் ஒரு பேங்கில் போய் கடன் கேட்டார். அந்த பேங்க் ஆட்கள், உங்களிடமுள்ள சொத்து, பத்திரம் எல்லாவற்றையும் காட்டுங்கள் என்று சொல்லி, சொந்த வீடு இருந்ததால் அந்த வீட்டிற்கு வந்து அதன் அளவை அளக்க தொடங்கினார்கள்.
.
அந்த குடும்பத்தினர் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக இருந்தபடியால், அந்த மனைவி, கர்த்தரிடம் அதை குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். 'இயேசப்பா, இந்த வீடு நீர் கொடுத்த வீடு, அதில் கண்டவர்கள் எல்லாம் வந்து அளவு எடுத்து கொண்டிருக்கிறார்களே, கணவரோ அத்தனை பணம் கொடுத்து அந்த கடையை வாங்க வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார், உமக்கு சித்தமில்லை என்றால் இதை நிறுத்திப்போடும்' என்று ஜெபித்தார்கள். நம் தேவன் பேசும் ஆண்டவரல்லவா? அன்றைய தின வேத வாசிப்பில் (அவர்கள் தினமும் நீதிமொழிகள் ஒரு அதிகாரத்தை வாசிப்பது வழக்கம்) கர்த்தர் அவர்களோடு பேசினார், 'கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே' (நீதிமொழிகள் 22:26-27). இந்த வார்த்தைகளை படித்த உடன் அந்த சகோதரிக்கு தேவனுடைய சித்தம் என்னவென்று புரிந்து விட்டது. கடன் வாங்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அறிந்து கொண்டார்கள். அந்த இடத்தை வாங்குவது கர்த்தருடைய சித்தம் அல்ல என்பதையும் புரிந்து கொண்டார்கள்.
.
ஆனால் கணவரோ முழு மூச்சோடு அதை வாங்க வேண்டும் என்று பேங்கிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார், அவரை எப்படி தடுப்பது என்று நினைத்தவர்களாக ஜெபித்தார்கள். அடுத்த நாள், கணவர், மனைவியிடம், 'இன்று கணவனும் மனைவியுமாக அழைத்து பேங்க் மேனேஜர் பேசுவார், அதன்பின் அவர்கள் கடன் தருவார்கள்' என்று கூறினார்.
.
மனைவிக்கு தேவன் இப்படி வசனம் சொல்லியிருக்கிறார் என்று சொல்ல பயம், ஏனென்றால் கணவர் மிகவும் அதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று. அவர்கள் ஜெபித்து, 'நாளை ஆண்டவரே அந்த பேங்க் மேனேஜர் பேசும்போது, நீர் தடுத்து விடும்' என்று சொல்லி ஜெபித்து விட்டு, அடுத்த நாள் போனார்கள்.
.
அவர்கள் பேசி கொண்டிருக்கும்போதே, வீட்டை அளந்து பார்த்த ஒருவர், 'பத்திரத்தில் இருக்கும் அளவிற்கும், எழுதி இருக்கும் அளவிற்கும் வித்தியாசம் இருக்கிறது, ஆகவே அதை சரி செய்து முடிக்காமல் கடன் வழங்க முடியாது' என்று கூறினார். அதை கேட்ட கணவருக்கு மிகவும் கோபம். 'இத்தனை நாட்கள் நான் இங்கு வந்து போய் கொண்டிருக்கிறேன், அப்போதெல்லாம் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை, இப்போது கடன் தரும் நேரத்தில் இப்படி சொல்கிறீர்கள்' என்று. அப்போது மனைவி சொன்னார்கள், 'கர்த்தருடைய சித்தம் நாம் கடன் வாங்கி அந்த கடையை வாங்குவது அல்ல, கர்த்தர் அதை குறித்து என்னிடம் நேற்றே பேசி விட்டார்' என்று நடந்ததை கூறினார்கள். கணவரும் அதை கேட்டு, 'நேற்றே நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை' என்று கேட்டார். அதற்கு மனைவி, 'நேற்றே சொல்லியிருந்தால் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள், இன்று தேவனே அதை நிறுத்திப் போட்டார் பாருங்கள்' என்றார்கள். இது உண்மை சம்பவம். ஆம், நம் தேவன் நாம் கடன் வாங்குவதை விரும்புகிற தேவன் அல்ல. 'கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே' என்று நம்மை கடன் வாங்காதபடி எச்சரிக்கிற தேவனாயிருக்கிறார்.

No comments:

Post a Comment