Thursday, August 2, 2012

கனம் ஈசாக்கு ஆபிரகாம்


சீவலப்பேரியில் 1838ஆம் ஆண்டில் பிரம்மமுத்துதேவர் குடும்பம் ஆண்டவரை ஏற்றுக் கொண்டது. அவரது குமாரன் தான் நல்லக்கண்ணு. 1844ஆம் ஆண்டு சீவலப்பேரிக்கு சென்ற தக்கர் ஐயர் நல்லக்கண்ணுவை படிக்க வைக்க விரும்பினார். ஆனால் தகப்பனாராகிய பிரம்மமுத்துதேவருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் நல்லக்கண்ணு பண்ணைவிளைக்கு போகத்தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்க வேறு வழியின்றி சம்மதித்து நீ என் பிள்ளையல்ல, வெள்ளைக்கானர் பிள்ளை. நீ செத்துப்போய்விட்டாயென்று நினைத்துக் கொள்வேன்என்று கூறி தக்கர் ஐயருடன் அனுப்பினார்.
பண்ணைவிளையில் அறிவிலும் கிறிஸ்து மார்க்கப் பண்பிலும் நன்கு தேர்ச்சியடைந்த நல்லக்கண்ணுவுக்கும், பெண்கள் போர்டிங் பாடசாலையில் அதே விதமாய்த் திகழ்ந்த இரண்டு பெண்களுக்கும் முறையே ஈசாக்கு, ராகேல், ஞானவடிவு என்ற பெயர்களுடன் தக்கர் ஐயர் ஞானஸ்நானம் 1845ல் கொடுத்தார். படிப்பு முடிந்தபின்னர் ராகேலை மணந்து சிலகாலம் உபதேசியாராகவும், விசாரணை உபதேசியாராகவும் ஊழியம் செய்த ஈசாக்கே, குருப்பட்டம் பெற்றுப் பரிசுத்தவானாக வாழ்ந்து பண்ணைவிளையில் பல காலம் பணிவிடை செய்த கனம் ஈசாக்கு ஆபிரகாம் ஐயரவர்கள்.
கனம் ஈசாக்கு ஆபிரகாம் ஐயர் அவர்கள் 1869 முதல் 1900 ஆம் ஆண்டுவரை பணியாற்றியவர். இவர்கள் விசுவாசத்திற்கும் முன்மாதிரியான சாட்சியாகவும் வாழ்ந்தவர்கள். திருமணத்திற்கு தாலி கொண்டுவராத மாப்பிள்ளைக்கு தன் மனைவியின் தாலியை கழற்றி கொடுத்த கொடைவள்ளல் ஆவார். இன்றும் பண்ணைவிளை பகுதியில் வழக்குகள் வாக்குவாதங்கள் ஏற்படுமாயின் அதனை நிரூபணம் செய்வதற்காக, ஈசாக்கு ஐயர் கல்லறையில் சத்தியம் பண்ணுவாமா? என்னும் பேச்சு வழக்காக விளங்குகின்றது குறிப்பிடத்தக்கது.
கனம் ஈசாக்கு ஐயரின் கல்லறை பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலய ஆல்டரை ஓட்டி ஆலய காம்பவுணட்க்குள் அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

No comments:

Post a Comment