Showing posts with label Black hole. Show all posts
Showing posts with label Black hole. Show all posts

Saturday, March 30, 2013

Black Hole - தவறான ஒரு சிக்னல்

1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.
.
அந்த விண்வெளிகலம் பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த ஊர்தியிலிருந்து கிடைத்தது. அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.
.
இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.
.
நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர். ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!
.
பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.
.
வேதத்தில் யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரை தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடாபில்லாமல் போய் விட்டது. அவர் போட்ட சத்தங்கள் யார் காதிலும் கேட்கவில்லை. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார். ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்பு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது.
.
ஒருவேளை நீங்களும் Black Hole என்று சொல்லப்படும் கடும் பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும் பாடுகளை அறிவார் யாரும் இல்லையோ? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறி போய் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னை கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? Black Hole அனுபவம் உங்களை தனிமையாக்கிற்றோ?
.
நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூர போனார் என்று நாம் நினைத்தாலும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவேதான் இருக்கிறார்.