Showing posts with label இஸ்ரவேல். Show all posts
Showing posts with label இஸ்ரவேல். Show all posts

Wednesday, November 19, 2014

தாகம் தீர்க்கும் ஜீவ நதி

இஸ்ரவேலில் சுக்கோத் என்னும் கூடார பண்டிகை வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அந்த சுக்கோத் பண்டிகையின்போது யூதர்கள் ஏழு நாட்கள் தாங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, கானானுக்குள் செல்வதற்கு முன் வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடத்திசெல்லப்பட்டதை நினைவு கூர்ந்து, வெளியே கூடாரங்களில் குடியிருப்பார்கள். அந்த பண்டிகையின் கடைசி நாளில் யூதர்கள், சீலோவாம் குளத்தில் இறங்கி, அங்கிருந்து தண்ணீரை மொண்டு கொண்டு வந்து, தேவாலயத்திற்கு கொண்டு வருவார்கள். அங்கு அந்த தண்ணீரை ஊற்றி, ஏசாயா 12-ம் அதிகாரத்தை பாட்டாக பாடுவார்கள். 'நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்' என்று பாடுவார்கள். அவர்கள் இரட்சிப்பின் ஊற்றாகிய இயேசுகிறிஸ்துவை குறித்து அவர்தான் மேசியா என்று அறியாமலேயே பாடி கொண்டுதான் இருந்தார்கள்.
.
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த போது, ஒரு நாள் இந்த கூடார பண்டிகையின் 'கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்றார். அந்த நேரத்தை சற்று சிந்தித்து பாருங்கள், மேசியாவாகிய கிறிஸ்து முக்கியமான இடத்தில் நின்று கொண்டு, சத்தமிட்டு: 'ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்று கூறினபோது அங்கிருந்த யூதர்கள் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? யார் இவர்? என்று நினைத்தது மாத்திரமல்ல, அவர்கள் அவர் தீர்க்கதரிசி என்றும், சிலர் கிறிஸ்து என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அவரை நினைத்து, 'இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று' (யோவான் 7:43) என்று பார்க்கிறோம். ஆனாலும் கடைசி வரை அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுக்கு தாகம் இல்லை.
.
இயேசுகிறிஸ்து இன்றும் அந்த அழைப்பை விடுக்கிறார். 'என்னிடத்தில் விசுவாமாயிருந்தால் அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும்' என்று அறைகூவல் விடுக்கிறார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு, ஒருவன் தாகமாயிருந்தால் மாத்திரமே, அவரிடத்தில் வந்து பானம் பண்ணமுடியும். இன்று உலகில் மனிதர்கள் எதனெதன் பேரிலோ தாகமாயிருக்கிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்துவின் மேல் தாகம் கிடையாது. ஒரு மனிதன் கிறிஸ்துவின் மேல் தாகமாயிருந்தால், அவரிடம் வரும்போது அந்த தாகம் தீர்க்கப்படும்.

Monday, November 4, 2013

ஈராக் தேசம்... வேதத்தின் உண்மை சரித்திரம்

வேதத்தில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும் நாடு எது தெரியுமா? ஆம், இஸ்ரவேல் தேசத்தை குறித்து தான். அதற்கு அடுத்தபடி சொல்லப்பட்டிருக்கிற நாடு எது என்றால் அது ஈராக் தேசம் தான். ஈராக் தேசத்தை குறித்து, அநேக இடங்களில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஈராக் தேசம் ஈரான் தேசத்தோடு ஒன்பது வருடங்கள் போரிட்டு, தாக்குபிடிக்க முடிந்தது. அதை ஆண்ட சதாம் ஹூசைன் அந்த ஒன்பது ஆண்டுகளும் விடாமல் போரிட்டு, கடைசி வரை யார் ஜெயித்தார்கள் என்றே சொல்ல முடியாதபடி அந்த போர் முடிந்தது. அது முடிந்த உடனே, ஈராக் தேசம் மிகவும் சிறிய அண்டை நாடான குவைத்தை பிடித்து ஆக்கிரமித்தது, அதன்பின் குவைத் தேசததின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க படைகள் வந்து, அதை மீட்டு கொடுத்தது. இன்னும் அமெரிக்க படைகள் குவைத்தை பாதுகாத்து வருகின்றது. அதன்பின் சதாம் ஹூசைன் நீதி விசாரிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டது நாம் யாவரும் அறிந்ததே. இந்த நாளில் இந்த ஈராக் தேசத்தை குறித்து, அதன் விசேஷங்களை குறித்து நாம் பார்க்க போகிறோம். வேதத்தில் காணப்படும் அசீரியர்கள், கல்தேயர்கள், மெசபொடோமியா, பாபிலோன் இவை யாவும் பண்டைய ஈராக் நாட்டினையே குறிக்கின்றன.
.
  • ஏதேன் தோட்டம் ஈராக்கிலே இருந்தது.
  • மெசபொடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக் தேசத்திலே தான் நாகரீகம் தோன்றியது.
  • நோவா பேழையை ஈராக்கிலேதான் கட்டினார். நோவா எந்த இடத்தில் பேழையை கட்டினார் என்பது வேதத்தில் குறிப்பிடாவிட்டாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கில் தான் கட்டியிருக்க கூடும் என்று நம்புகின்றனர்.
  • பாபேல் கோபுரம் ஈராக் தேசத்தில் தான் கட்டப்பட்டது.
  • ஆபிரகாம் இருந்த கல்தேயரின் ஊரான ஊர் ஈராக்கில் தான் இருந்தது.
  • ஈசாக்கின் மனைவி ரெபேக்காளின் ஊராகிய நாகோர் ஈராக்கில்தான் இருந்தது.
  • யாக்கோபு ராகேலை சந்தித்தது ஈராக்கில்தான்.
  • யோனா பிரசங்கம் செய்த நினிவே ஈராக்கில்தான் இருந்தது.
  • இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை ஜெயித்த அசீரியா ஈராக்கில் தான் இருந்தது.
  • ஆமோஸ் தீர்க்கதரிசி ஈராக்கில் தான் தீர்க்கதரிசனம் கூறினார்.
  • ஈராக்கில் இருந்த பாபிலோன் எருசலேமை அழித்தது.
  • பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் யூத வாலிபர்களை அடிமைகளாக கொண்டு சென்றது இந்த ஈராக்கில்தான்.
  • தானியேல் தீர்க்கதரிசி இருந்த சிங்க கெபி ஈராக்கில்தான் இருந்தது.
  • சாத்ராக் மேஷாக் ஆபெத்நேகோ என்னும் எபிரேய வாலிபர்கள் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கி வீசப்பட்டதும் இந்த ஈராக்கில் தான். அதில் நான்காவது நபராக இயேசுகிறிஸ்து வந்து உலாவினதும் இந்த ஈராக்கில்தான்.
  • எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொன்னது இந்த ஈராக்கில்தான்.
  • பேதுரு சுவிசேஷத்தை ஈராக்கில் பிரசங்கித்தார்.
  • ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது –ஆதியாகமம் 2:10-14
  • ஆதாமும்ஏவாளும் உருவாக்கப்பட்டது ஈராக்கில்--ஆதியாகமம்2:7-8
  • சாத்தான் தன்னை முதலில் வெளிப்படுத்தினது ஈராக்கில் ஆதியாகமம் 3:1-6
  • நிம்ரோத் பாபேல் கோபுரத்தை கட்டியது ஈராக்கில் - ஆதியாகமம் 10:8-911:1-4
  • பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது ஈராக்கில் ஆதியாகமம் 11:5-11
  • யாக்கோபு 20 வருடங்களை ராகேலுக்காக கழித்தது ஈராக்கில் ஆதியாகமம் 27:42-45
  • முதன்முதல் ராஜாங்கம் ஈராக்கிலே அமைக்கப்பட்டது தானியேல் 1:1-2, 2:36-38
  • எஸ்தர் புத்தகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஈராக் தேசத்திலே நடந்தது
  • நாகூம் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தது ஈராக் தேசத்தை குறித்து தான்
  • வெளிப்படுத்தின விசேஷத்தின் பாபிலோனிய தேசம் இப்போதிருக்கும் ஈராக் ஆகும்.
.
இப்படி சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசம் வேதத்தில் இஸ்ரவேல் தேசத்திற்கு அடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஈராக் தேசத்தில் சதாம் ஹூசைனின் மறைவுக்குப்பின் எப்போது பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும், தீவிர வாத செய்கைகளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த தேசத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போமா? இந்த தேசத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபிப்போமா? இங்குள்ள கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போமா?

Thursday, June 20, 2013

இஸ்ரவேல் தேசம் - அதிசயமான உண்மை

இஸ்ரவேல் தேசம் மிகச் சிறியதாக இருந்தாலும், அதனை சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து, அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று அந்த தேசம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனையோ முறை பிரயத்தனம் பண்ணியும், 'இதோ, இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை' என்ற வார்த்தையின்படி தேவனே அந்த நாட்டை காக்கின்றபடியால், யாராலும் அந்த தேசத்தை அசைக்க முடியாது என்பதே அதிசயமான உண்மை.
.
ஆறுநாள் யுத்தத்தில் யுத்தக்களத்தில் நடந்த அற்புதங்கள்:
இஸ்ரவேல் வீரர் கூறின சாட்சி: ஆறு நாள் யுத்தத்தில் நாங்கள் விரைவாய் முன்னேறும்போது ஒரு பலத்த காற்று அடித்தது. பாலைவனத்தில் தாங்கள் ஒரு அடிக்கூட நகர முடியாமல் நிறுத்தப்பட்டனரென்றும், சில நிமிடங்கள் சென்று புயல் நின்றவுடன் தங்கள் முன்னே நிலக்கண்ணிகள் நிறைய வைக்கப்பட்டிருந்ததை புயற்காற்று மணலை முழுவதும் அடித்துச் சென்று தங்களுக்கு காட்டி விட்டதையும் அறிந்து, ஆண்டவர் எவ்வளவு ஆச்சரியமான பிரகாரமாக தங்களுக்கு வர இருந்த ஆபத்தைக் காட்டி கொடுத்து தங்களை காப்பாற்றினார் என்று ஆண்டவரை துதித்தோம் என்றார்.
.
இரண்டாவது வீரர்: இரண்டு வீரர் ஏலாத் துறைமுகத்துக்குப் பக்கத்தில் பாராசூட் மூலமாய் ஆகாயத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய எகிப்திய டாங்க் நின்று கொண்டிருந்தது, அதற்குள்ளிருந்து இரண்டு எகிப்திய வீரர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இரு இஸ்ரேலிய வீரரும் கவனமாக டாங்கினிடம் முன்னேறிப்போன போது டாங்கிலிருந்து 18 வீரர்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கி சரணடைந்தனராம். ஏன் இவர்கள் சரணடைந்தனர் என்று விசாரித்தபோது அவர்கள் தங்களால் ஒரு விரலை கூட அசைத்து டாங்கை ஓட்டவோ அல்லது பீரங்கியை இயக்கவோ முடியாமற் போனது என்றும் விவரிக்க முடியாத ஒரு பயம் தங்களை பிடித்தது என்றும், அதனால்தான் தாங்கள் சரணடைந்ததாகவும் கூறினர்.
.
மூன்றாவது வீரர்: இஸ்ரவேலின் டாங்கி படை ஒன்றை சீனாய் பாலைவனத்தில் ஒரு எகிப்திய டாங்க் படை தாக்கியது. அச்சமயம் இஸ்ரேலிய வீரர் கண்ட காட்சியை அவர்கள் பிற்பாடு கூறியது: ஆகாயத்தில் ஒரு வெண் வஸ்திரம் தரித்த உருவம் தன் கைகளை விரித்துப் பறந்ததாகவும், அவ்வுருவம் தன் வலது கையை தாழ்த்தினபோது, அப்பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இடது கையை தாழ்த்தினபோது இடது பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்தததாகவும் கூறினர்.
.
யுத்தத்தில் தப்பி வந்த எகிப்திய படைவீரன் சொன்னது: தேனீக்கள் போன்ற வண்டுகள் எங்களை துரத்திக் கொண்டே வந்தன. ஆகையால் நாங்கள் முன்னேற முடியாமல் பின்வாங்கி ஓடி வர வேண்டதாயிற்று. யாத்திராகமம் 23:28: 'உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையம் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்' என்ற வார்த்தையின்படி குளவிகளை அனுப்பி, தேவன் தம் ஜனத்தை காத்துக் கொண்டார்.
.
நான்காவது யுத்தம்: 1968க்கும், 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலின் எலலைப்பகுதி முழுவதிலும், மற்றும் இஸ்ரவேல் நாட்டிற்குள்ளும், இஸ்ரேலியர் சோர்ந்து போகும் வகையிலும் பலஸ்தீன கொரில்லாக்களும், சுற்றியிருக்கும் அரபு நாடுகளும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தன
.
ஐந்தாம் யுத்தம்: யாம் கிப்பூர் என்பதற்கு பாவ நிவாரண பலி செலுத்தும் நாள் என்று பொருள். கர்த்தருடைய கட்டளைப்படி அந்நா
ளில் அக்டோபர் 6, 1973ம் வருடம் படைவீரர் உட்பட இஸ்ரவேலர் யாவரும் ஒரு வேலையும் செய்யாமல் அனுசரிப்பார்கள் என்று அறிந்து, எகிப்து திடுதிப்பென்று அதிகாலை 4 மணிக்கு 3000 டாங்குகளோடும், 2000 கன பீரங்கிகளோடும், 1000 ஆகாய கப்பல்களோடும், 6,00,000 வீரர்களோடும் சூயஸ் நகர் சமீபத்தில் சூயஸ் கால்வாயையும் அதற்கு வடக்கே ஒரு பகுதியையும் தாண்டி இஸ்ரவேலர் காத்து வந்த பகுதிக்குள் முன்னேறி விட்டனர். அதே சமயத்தில் சீரியாவும் பலத்த ராணுவத்துடன் வந்து கோலன் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
.
முதலில் இஸ்ரவேல் ராணுவம் நிலைமையை சமாளிக்க அதிக கஷ்டப்பட்டாலும், தேவன் அவர்களுக்கு துணை செய்தததினால், போர்ட்செயிடை தன் வசப்படுத்தி, கெய்ரோவிற்கு 10 மைல் தூரமட்டும் எகிப்திற்குள் முன்னேறி விட்டனர். ஆனால் அதற்கு மேல் முன்னேற அமெரிக்க அனுமதி அளிக்கவில்லை. விட்டிருந்தால் எகிப்தையும் அவர்கள் கைப்பற்றியிருந்திருப்பார்கள்!
.
இந்த சமயத்தில் இஸ்ரவேலர் ஆண்டவருடைய பாதுகாப்பு தங்களுக்கு அதிகமாக் இருந்ததென்று கூறினர். யுத்தத்தின் ஆரம்ப நாளில் எகிப்திய இராணுவம் இஸ்ரவேலை சுற்றிலும் வளைத்துக் கொண்டபோது, இஸ்ரேலிய வீரர் சிறு புதர்களுக்கு பின்னாலும், சாக்கு மண்ல் மூட்டைகளுக்கு பின்னாலும் ஒளிந்தனர். சிறிது நேரத்தில் திடீரென்று வெண் வஸ்திரம் தரித்த ஒருவர் இஸ்ரவேல் படைகளுக்கும், எகிப்திய படைகளுக்கும் இடையில் காணப்பட்டார். அவ்வளவுதான்! எகிப்தியர் பக்கமிருந்து வெடிசத்தம் நின்றது. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு எகிப்தியர் ஓடினர்.

.
கோலன் குன்றுகள் மத்தியில் சீரியா 1200 டாங்கிகளை இஸ்ரவேலுக்கு எதிராக நிறுத்தியிருந்தது. அப்பகுதியை காக்க, இஸ்ரவேல் இரண்டு டாங்கிகளை மாத்திரமே நிறுத்தியிருந்தது, பாவ நிவாரண பலி செலுத்தும் அந்நாளில் இஸ்ரவேலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சீரிய இராணுவம் என்ன காரணத்தாலோ முன்னேறாமல் அப்படியே நின்று விட்டது. அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஒரு இஸ்ரவேல் யூதர், அங்கு மிகப்பெரிய பழுப்பு நிறக் கை எதையோ தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சி தனக்கு தோன்றியதாகவும், ஆண்டவர்தான் சீரிய துருப்புகள் முன்னேறாதபடி தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அவர்களையும் வெற்றிக் கொள்ள தேவன் இஸ்ரவேலருக்கு கிருபை பாராட்டினார்.
.
ஈராக் - குவைத் யுத்தம்.
.
1991அம் ஆண்டு மார்ச் மாதம் சில அமெரிக்கர்கள் இஸ்ரவேல் தேசத்தை சுற்றி பார்க்க சென்றிருந்தபோது, யூதர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கென்று கொடுக்கப்பட்டிருந்த காஸ் மாஸ்க்குகளை உபயோகிக்காமல் உறையில் போட்டுக் கொண்டிருந்தார்களாம். ஏன் உபயோகிக்காமல் கட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில், ஆச்சரியத்தை உண்டு பண்ணினது. இராக்கியர் 39 ஸ்கட் ஏவுகணைகளை இஸ்ரவேலுக்கு எதிராக ஏவி விட்டனர்.
பாகமம் 25:2-3 வசனங்களின்படி, 'குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்' இந்த வசனங்களின்படி யெகோவா நாற்பதாவது ஏவுகணையை இஸ்ரவேல் தேசத்தின் மேல் அனுப்பமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில் கட்டி வைக்கிறோம் என்பதே.
.
நாற்பது அடிகள் வரை அடிக்கலாம் என்ற விதி இருந்தாலும், தவறுதலாக நாற்பது அடிகளுக்கு மேல் அடித்து விட்டால் நீசன் என்று எண்ணப்படுவானேன் என்று காலக்கிரமத்தில் 39 அடிகளோடு நிறுத்திக் கொள்வது பழக்கமாகி விட்டது, அதன்படி 2 கொரிந்தியர் 11:24ம் வசனத்தில் பரி.பவுல் யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன் என்று கூறியிருக்கிறார்.
.
பிரியமானவர்களே, இஸ்ரவேல் தேசத்தை தேவன் இத்தனை உறுதியாக காத்து தம்முடைய வாக்குதத்தங்களை ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேற்றி இருப்பதைக் காணும்போது, நம் தேவன் எத்தனை அருமையானவர் என்று அவரை துதிக்காமல் இருக்க முடியுமா? நான் இந்த கட்டுரைகளை அநேக நாட்களாய் எழுத வேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன். அதை எழுதும்படியாக தேவன் கிருபை செய்ததை நினைத்து அவரை துதிக்கிறேன். இதற்கு உதவியாக இருந்த எ
ஸ்.டி அம்புரோஸ் அவர்களின் இஸ்ரவேல் என் புத்தகத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.