Showing posts with label Hanukkah. Show all posts
Showing posts with label Hanukkah. Show all posts

Monday, December 10, 2012

ஹனுக்கா - Hanukkah


கி.மு. 167-ல் இஸ்ரவேல் நாடு சீரியா தேசத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போது, மத்தியாஹூ (Mattiyahu) என்னும் யூத ஆசாரியரை அவருடைய ஊராகிய மோடி என்னுமிடத்தில் சீரிய இராணுவம் பிடித்து, தங்கள் தெய்வமாகிய ஜீயஸ் (Zeus) என்னும் கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, மத்தியாஹூவையும், அவருடய ஐந்து மகன்களையும் அதை வணங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதற்கு மத்தியாஹூ மறுத்ததுமன்றி, அந்த பலிபீடத்தை தைரியமாக இடித்துப் போட்டு, வற்புறுத்திய வீரனையும் கொன்று விட்டு, பக்கத்தில் இருந்த மலைக்கு தன் மகன்களோடும் இன்னும் சில யூதர்களோடும் தப்பி ஓடினார்.
.
இந்த சிறிய குழுவினர் மக்காபீஸ் (Meccabees) என அழைக்கப்பட்டடனர். அவர்கள் சீரிய இராணுவத்திற்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி தங்களிடமிருந்த கம்புகளையும், விவசாயத்திற்கு வைத்திருந்த இரும்பு சாமான்களையும் வைத்து, அவர்களோடு போரிட்டு, தேவன் அவர்களுக்கு உதவினபடியால் அற்புதமாக வெற்றி பெற்று, எருசலேமையும் தேவாலயத்தையும் மீண்டும் கைப்பற்றினார்கள். சீரியர்கள் தேவாலயத்தை மிகவும் மோசமான நிலையில் அசுசிப்படுத்தியிருந்தபடியால், அதை சுத்தம் பண்ண ஆரம்பித்தார்கள். தேவனுடைய கட்டளையின்படி குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனால் முதலில், குத்துவிளக்கை எடுத்து, அதை எரிய விட ஆரம்பிக்கும் போது, துரதிஷ்டவசமாக, அதற்கு தேவையான ஒலிவ எண்ணெய், ஒரு நாளைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இருக்கும்வரை எரியட்டும் என்று நினைத்து, அவர்கள், தேவாலயத்தை விடாமல் சுத்தம் செய்ய ஆரம்பித்து, செய்துக் கொண்டிருந்தபோது அதிசயமாக அந்த குத்துவிளக்கிலிருந்த எண்ணெய் குறைந்துப் போகவே இல்லை. எட்டு நாட்களுக்கு அந்த எண்ணெய் போதுமானதாக, அந்த விளக்கு தொடர்ந்து எரிந்துக் கொண்டே இருந்தது. அவர்கள் மீண்டும் எண்ணெய் கொண்டு வரும்வரை எட்டு நாட்களுக்கு அது போதுமானதாக இருந்தது.
.
அதை நினைவுகூர்ந்து, ஒவ்வொரு வருடமும், இஸ்ரவேலர் ஹனுக்கா(Hanukkah) என்னும் பண்டிகையை எட்டுநாட்களுக்கு கொண்டாடுகிறார்கள். ஹனுக்கா பண்டிகை இந்த நாளில் மூன்றாவது நாளாக கொண்டாடப்படுகிறது. ஹனுக்கா என்பதற்கு Feast of Dedication என்பது பொருளாகும். தேவாலயத்தை திரும்ப சுத்தப்படுத்தி தேவனுக்கு என்று அர்ப்பணித்ததால் அதற்கு அர்ப்பணிப்பின் பண்டிகை என்றுக் கொண்டாடப்படுகிறது.