Showing posts with label Tears of Joy. Show all posts
Showing posts with label Tears of Joy. Show all posts

Monday, October 14, 2013

இரகசிய உயில்

ஒரு பணக்கார தகப்பனும் மகனும் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வியட்நாம் போர் நடைபெறவே, மகன் அந்த போருக்கு போக வேண்டியதாயிருந்தது. அவன் அந்தப் போரில் மிகவும் நன்றாக போரிட்டு, மற்றும் அநேக போர் வீரர்களை காப்பாற்றினான். அப்படி ஒரு வீரனை காப்பாற்றும்போது, அவன் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. தகப்பனுக்கு அந்த செய்தி போய் தனது ஒரே மகன் இறந்த துக்கத்திலே இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் வீட்டு கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது ஒரு வாலிபன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் சொன்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய போர் வீரரில் நானும் ஒருவன். உங்கள் மகன் உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவான். நீங்கள் ஓவியங்களை சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று. நான் ஒரு பெரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகனை நான் வரைந்துள்ளேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டிக் கொணடான். தகப்பன் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘இல்லை இல்லை உங்கள் மகனால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’ என்று கூறி படத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் அந்த படத்தை வீட்டில் மாட்டி வைத்து, வருகிற ஒவ்வொருவருக்கும் காட்டினார்.
.
சில மாதங்கள் கழித்து அவரும் மரித்தார். அவருடைய ஓவியங்கள் ஏலத்திற்கு வந்தன. புகழ்பெற்ற ஓவியங்களாக இருந்தபடியால் அவற்றை வாங்க அநேகர் வந்திருந்தனர். ஏலத்தை நடத்துபவர், முதலாவது அவருடைய மகனின் அந்தப் படத்தைக் காட்டி ‘யார் இதை வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்தை ஆரம்பித்தார். அங்கு அமைதி நிலவியது. திரும்பவும் அவர் 'யார் வாங்குகிறீர்கள்? 200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?' என்று கேட்டார். பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருடைய மகனின் படத்தை வாங்க வரவில்லை. மற்ற ஓவியங்களை ஏலமிட ஆரம்பியுங்கள் என்று கேட்டது. ஏலமிடுபவரோ, ‘அவருடைய மகன்; அவருடைய மகன் யார் வாங்க முன்வரகிறீர்க்ள்’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்த வீட்டில் தோட்டக்காரனாயிருந்தவர், 10 டாலர் எனக் குரல் கொடுத்தார். உடனே ஏலமிடுபவர் யாராவது 20 டாலர் என்றுக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ‘10 டாலர் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்தை அந்தத் தோட்டக்காரனுக்குக் கொடுத்தார். மற்றவர்கள் பொறுமையை இழந்து, ‘மற்ற ஓவியங்களை ஆரம்பியுங்கள்’ என்றுக் கத்தினார்கள். ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம் முடிந்தது’ என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு ‘எனக்கு முன்னமே இரகசிய உயிலைப் பற்றி சொல்லப்பட்டது. யார் அவருடைய மகனுடைய ஓவியத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு அவருடைய எஸ்டேட்டும் எல்லா ஓவியங்களும் சொந்தம் என்று அவர் உயிலில் எழுதி வைத்துள்ளார். ஆகையால் யார் மகனுடைய ஓவியத்தை வாங்கினார்களோ அவர்களுக்கே எல்லாம் சொந்தம்’ என்று கூறி ஏலத்தை முடித்தார்.
.
2000 வருடங்களுக்கு முன்பு தமது சொந்தக் குமாரன் என்றும் பாராமல், அவரை ஒப்புக் கொடுத்த தேவன் ‘இதோ என் மகன், அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் - யோவான் 1:12. மட்டுமல்ல, அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளி இருக்கிறார். ஆனால், எத்தனைப் பேர் அவரை புறக்கணித்து, கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கே சொந்தம் என்று அவரை அடையாமற் இருக்கிறார்க்ள. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எத்தனை பாக்கியம்! மற்றவர்களும் இந்த பாக்கியத்தை அடையும்படிக்கு நாம் திறப்பின் வாசலில் நிற்போமா? அவர்களுக்கு சத்தியத்தை சொல்வோமா?

Friday, October 4, 2013

பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது

ஒரு முறை சுவிசேஷகர் பில்லிகிரஹாம் அவர்கள் செய்தியளிக்கும்படி லண்டனில் ஒரு நற்செயதி கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தார்கள். பில்லிகிரஹாம் இங்கே கூட்டம் நடத்த வரக்கூடாது என்று பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. 'காஸ்பல் சர்க்கஸ் நடத்த பில்லிகிராஹம் வருகிறார்' என்றெல்லாம் மீடியாக்கள், பத்திரிக்கையெல்லாம் அவரைக் கிண்டல் பண்ணி சரமாரியாக எழுதினர். திருச்சபைகள் கூட அவரை எதிர்த்தன.
.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரும், அவருடைய மனைவியும் கப்பலில் வந்து லண்டன் துறைமுகத்தில் இறங்கியவுடன் பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு, 'எங்கள் லண்டனை மாற்ற வந்திருக்கிறீர்களே, உங்கள் அமெரிக்காவை மாற்றி விட்டீர்களா?' என்றெல்லாம் ஆளாளுக்கு பல விதமான கேள்விகளைக் கேட்டு பரியாசம் பண்ணினார்கள். சுவிசேஷத்தை அறிவிக்க வந்த ஒரு கிறிஸ்தவ நாடு இப்படியாக இருக்கிறதே என்றெண்ணி, பில்லிகிரஹாம் மனமுடைந்து போனார். துறைமுகத்திலிருந்து, தாங்கள் செல்ல வேண்டியப் பட்டணத்திற்கு ரயில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, 'இயேசுவே காரியங்கள் இப்படியிருக்கிறதே, எப்படி நான் இங்கு போய் ஊழியம் செய்ய போகிறேன்?' என்று இருதயம் நொறுங்குண்டு தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்த்தார்.
.
'அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்' என்ற வேத வசனத்தின் மூலம் தேவன் அவரோடு பேசினார். உடனே அவர், 'ஆண்டவரே, என்ன நிந்தை, நெருக்கம், அவமானம், போராட்டம் வந்தாலும் அவைகளை சகித்துக் கொள்ளக் கூடிய கிருபையை எனக்கு தாரும்' என்று சொல்லி கண்ணீரோடு ஜெபித்தார். உடனே பாரமெல்லாம் மாறி அவரது உள்ளம் இலகுவாகி விட்டது. இரயிலிலிருந்து அவர்கள் இறங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்று அவர்களை ஆர்ப்பரித்து வரவேற்றார்கள். 'உனக்காக நான் எவ்வளவு மக்களை வைத்திருக்கிறேன் பார்த்தாயா?' என்று அவரது உள்ளத்தில் தேவன் பேசினார். அதை கண்ட பில்லி கிரஹாமின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
.
பிரியமானவர்களே, நீங்களும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினிமித்தமோ, அவரை மற்றவர்களுக்கு அறிவித்ததினிமித்தமோ உங்கள் குடும்பத்தாராலும், மற்றவர்களாலும் நிந்தனையும், அவமானத்தையும் அடைந்து வருகிறீர்களோ? கலங்காதீர்கள்! கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் சகலத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகித்துக் கொள்ளும். அப்பொழுது தேவ அன்பு நம் இருதயத்திற்கு மருந்தாய் அமையும். யார் உங்கள் மேல் எரிச்சலானார்களோ, அவர்களே உங்கள் பக்கம் வரும்படி தேவன் அவர்களை மாற்றுவார். அப்படி அவர்கள் வராவிட்டாலும், தேவ அன்பு உங்களை மூடிக் கொள்ளும். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரிப்பீர்கள். உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிற ஆத்துமாக்கள் உங்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மனம் சோர்ந்து போகாதிருங்கள்.